• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

அத்தியாயம் 1

Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஓம் சரவண பவ


IMG-20230501-WA0003.jpg

சொர்ணா சந்தனகுமார்



செந்தூர அழகி



1



அம்மன் கோவிலில் பாடலொன்று மிதமான சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அக்கோவிலில் ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் எப்பொழுதும் ஒரு அமைதி இருக்கும். விதிவிலக்காய் சில நேரம் சப்தங்களும் கேட்பதுண்டு.

“சாமியம்மா! என் பொண்ணு நாலுநாளா வயிறு வலியில் துடிக்கிறா. ஹாஸ்பிடல்ல பார்த்தும் எதுவும் சரியாகலை. என் பொண்ணைக் காப்பாற்றிக் கொடுங்கம்மா” என்று கதறியபடி கண்ணில் நீருடன், தன்முன் அம்மனின் அவதாரமாக அமர்ந்திருந்த பெண்மணியின் காலில் குழந்தையுடன் விழுந்தாள் அப்பெண்.

மஞ்சள் நிற ஆடையில் கெண்டைக்கால் வரை சடாமுடியுடன், நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள் சில கிடக்க, நாற்பத்தெட்டு வயதில் ஐந்தரையடி உயரத்தில் புன்னகை முகமாய் நின்றிருந்தார், மக்களால் சாமியம்மா என்றழைக்கப்படும் ‘ராஜேஸ்வரி.’

காலில் விழுந்த பெண்ணின் தலையைத் தொட்டு எழுப்பி உட்காரவைத்து, “என்னாச்சி?” என்றார் சைகையில்.

தன் பிரச்சனையைச் சொல்லி அவரிடம் அருள்வாக்கு கேட்க, துளசி நீர் கொடுத்து, விபூதியை தன் நடுநெற்றியில் வைத்து மந்திரம் ஜெபித்து குழந்தைக்குப் பூசிவிட்டு, அப்படியே சிறிது குழந்தையின் வாயில் வைத்து, “இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் விழாவிற்கு பால் முட்டையுடன் வா. அதற்குள் குழந்தைக்கு சரியாகிவிடும்” என்று கரும்பலகையில் எழுதிக்காண்பித்து நம்பிக்கையளித்து விபூதியைக் கையில் கொடுத்தார்.

மறுபடியும் அவர் காலில் விழுந்தெழுந்து நன்றியுரைத்துச் செல்ல, அடுத்தடுத்து வந்தவர்களுக்கும் அவர்கள் பிரச்சனை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரி பேசமாட்டார். பேசமாட்டார் எனில் ஊமையில்லை. கடவுள் மேலுள்ள பக்தியில் சித்தர்களின் ஆசீர்வாதத்தில் தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டார். பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையே அவர் பேசுவதைக் கேட்கலாம். அவர் சன்னியாசம் வாங்கிய முதல் பனிரெண்டாவது வருட பூஜையைத்தான் அப்பெண்ணிடம் சொன்னது.

திருவள்ளுரில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாகனூர். அங்கிருக்கும் சின்ன புத்துக்கோவில்தான் ராஜேஸ்வரி இருப்பது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஆன்மீகம், படிப்படியாக முன்னேறி பனிரெண்டு வருடத்திற்கு முன் அவர் குருவின் ஆசியுடன், முழுதாக தன்னை ஆன்மீகத்தில் இணைத்து முழு சன்னியாசம் வாங்கிவிட்டார்.

அவர் இருக்கும் கோவில் செல்பவர்களுக்கென்று சில சட்டதிட்டங்களும் உண்டு. அதில் முக்கியமானது உடை பற்றியது. திருமணமான பெண்கள் கண்டிப்பாக புடவை அணிந்தே வரவேண்டும். திருமணமாகாத பெண்கள் எனில், பாவாடை தாவணி அல்லது சுடிதாருக்கு அனுமதியுண்டு. உடல் மறைக்கும் ஆடைகள் மட்டுமே அவர் வரையில் சரி. இதர ஆடைகளுக்குத் தடாதான்.

இதோ ஒருபுறம் அன்னதானமும் தாகதானமும் நடக்க, கேரள சண்டா மேளம் ஒலிக்க, பதினேழடி உயரம் ஓங்கி வளர்ந்திருந்த புற்றைச் சுற்றிலும் மஞ்சள் குங்குமமும் தெளிக்கப்பட்டு, பாலும் முட்டையும் வைக்கப்பட்டிருக்க, முகப்பில் இருந்த அம்மன் பூ அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

கோவிலின் வெளியே மேடையிட்டு சுற்றிலும் பந்தல் போட்டு, மேடையெங்கும் உள்ள பூ அலங்காரத்தின் நடுநாயகமாக சாமியம்மாள் அமர்ந்திருக்க, அவர் பேசுவதைக் கேட்கப்போகும் அந்த பத்து நிமிடத்திற்காக நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அதை நேரடி ஒளிபரப்பாக்கச் சில தனியார் ஊடகமும் இருந்தது.

அந்தப் பத்து நிமிடம் யார் என்ன கேட்டாலும் அவர்களுக்கு சொல்லப்படும் வாக்கு பழிக்குமென்ற நம்பிக்கையில் குறி கேட்க முண்டிக்கொண்டிருந்தனர் மக்கள்.

“என்னம்மா இவ்வளவு கூட்டமாயிருக்கு?” என்று கேட்டவளுக்கு அக்கூட்டத்தைக் கண்டு ஒரு ஆர்வம் எழுந்தபோதிலும், கூடவே சற்று எரிச்சலும் உண்டானதென்னவோ உண்மை.

“நான்தான் சொன்னேன்ல பொம்மு. பனிரெண்டு வருஷம் கழித்து சாமியம்மா இன்னைக்குதான் பேசப்போறாங்க. நாமெல்லாம் ஒருநாள் பேசலைன்னாலே பைத்தியம் பிடிச்சிரும். இவங்களைப் பா...”

“அம்மா! அவங்க விருப்பப்பட்டு இருக்காங்க. குடும்பத்துல உள்ள நாம விருப்பப்பட்டாலும் அப்படி இருக்க முடியாது” என்றாள் தாயை இடையிட்டு.

“ம்.. நாகமுனி சித்தரோட சிஷ்யையாம் இவங்க. குறைந்த காலத்திலேயே ஆன்மீகத்துல தன்னை முழுமையா அர்ப்பணிச்சிருக்காங்க. சொல்றதெல்லாம் பழிக்குது. குழந்தை வரம் தேடி வந்த நிறைய பேர் மடி நிறைந்து போயிருக்கிறாங்கன்றது சத்தியமான உண்மை. ரொம்ப நாள் வரணும்னு பார்த்து இப்பதான் நேரம் கிடைச்சிருக்கு. அதுவும் விசேஷ நாள்ன்றப்ப சந்தோசமாயிருக்கு பொம்மு.”

“பார்த்தும்மா பல்லு ரொம்ப வெளியில தெரியுது. வீட்டுல எங்கப்பாகிட்டப் பேசணும்னா மட்டும் உம்முணாமூஞ்சியைக் காட்டுறது. அப்பா வரட்டும் உங்களை மாட்டிவிடுறேன்.”

“போடி! போயி முதல்ல அதைச் செய். எப்பப்பாரு அப்பாவுக்கு கூஜா தூக்கிட்டிருக்கிறது. என்னோட இருக்குறப்பவாவது என்னைப் பாரேன்டி” என நொடித்தார் ராகினி.

“ஹான்! பார்த்தாச்சி பார்த்தாச்சி. கொஞ்சம் அழகாகத்தான் இருக்கீங்க. அதுக்காகல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாது. மை டேடி வெரி பெஸ்ட் டேடி. யூ பேடி” என ரைமிங்காக இழுக்க,

“நான் பேடா? யூ போடி” கோவித்துத் திரும்பிக்கொண்டார்.

“ர..ரா..ராகினி! இப்படி முகத்தைத் திருப்பலாமா நீ” என்று தாயிடம் செல்லம் கொஞ்ச,

“என்ன திமிரு இருந்தா மரியாதையில்லாம பேசுவ? கொழுப்புப் பிடிச்சவளே.. கொல்லுறேன் பாரு உன்னை” என்று மிரட்டினார் ராகினி.

“அது ரைமிங்ல வந்திருச்சிமா. நீங்க எப்பேர்ப்பட்ட ஆளு. உங்களையெல்லாம் மரியாதைக் குறைவா பேசிர முடியுமா? இல்லை பேசத்தான் விட்டுருவீங்களா?”

“எப்பேர்ப்பட்ட ஆளுங்க மேடம்” என்று மகளின் நக்கல் புரிந்து வலுக்கட்டாயப் புன்னகையை வரவழைத்துக் கேட்டார்.

“தி கிரேட் சதாசிவம் ஐயரோட...”

“அடியே!” என்றலறி நங்கென்று மகளின் தலையில் ஒரு கொட்டு வைத்து, “அது ஐயர் இல்லைடி லாயர். இதையே ரைமிங்கா சொல்லத் தெரியலை. இதுல பந்தா கேட்குதா உனக்கு? ஹாஹா உங்கப்பாவுக்குக் குடுமி வச்சா நல்லாத்தான் பொம்மு இருக்கு.” கற்பனையில் கணவனை குடுமியில் கண்டு சிரித்தார்.

‘இன்னைக்கு அப்பாகிட்ட உங்களை மாட்டிவிடலை..’ என மனதில் தாயைத் திட்டி, வலித்த தலையை முடி கலையாது லேசாகத் தடவியபடி, “அடிக்கடி வன்முறையைக் கையில் எடுக்குறீங்கம்மா. இது நல்லாயில்லை பார்த்துக்கோங்க. துணைக்கு வந்த பிள்ளையைத் துன்புறுத்துவது மகா மெகா தவறு” என்று அப்பொழுதும் விடாது வாய் பேசினாள்.

“பதிலுக்குப் பதில் பேசிரணும் உனக்கு. இல்லைன்னா தூக்கம் வராது” என்றபடி மகளைச் சற்று வேகமாகத் தன்னருகில் இழுத்தவர் தங்களைத் தாண்டிச் சென்ற வாலிபனிடம், “பார்த்துப் போ தம்பி. இல்லை எங்கேயாவது விழுந்து வாரிக்குவ” என முறைக்க, பதிலுக்கு அவனும் அவரை முறைத்துச் சென்றான்.

“கோவில்ல கூட பொண்ணுங்களை இடிச்சிரணும். அந்த ஒரு நொடி உரசல்ல என்ன சுகம் கிடைக்குதோ இந்த எருமைகளுக்கு. இடிக்க வந்ததுமில்லாமல் முறைச்சிட்டு வேற போறான் ராஸ்கல். இவனை மாதிரி பையன்களை எல்லாம் இதுங்களைப் பெத்த ஆத்தாக்களே சோத்துல எதையாவது வைத்துக் கொல்லணும். அப்பதான் பொண்ணைத் தொடணும்னு நினைக்கிறவன் எல்லாரும் பயப்படுவான்” என்றார் கோபத்தில்.

“கரெக்ட் ஆன்ட்டி” என்ற குரலில் அம்மா மகள் இருவரும் திரும்ப, “ஹையோ! நீங்க சூப்பர் போங்க. இதே எங்க வீட்டுலன்னா, கண்ணை எங்க வச்சிட்டிருக்க? ஒருத்தன் நம்மைப் பார்க்கிறது நம் அகக்கண்ணுக்குத் தெரியும். உரச வர்றான்னா சுதாரித்து விலகமாட்டியான்னு கேட்டு என்னை வாட்டி எடுத்துருவாங்க. அவன் இடிச்சிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டேயிருப்பான். அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாது.” ஒருவித இயலாமையில் பேசியவள் நிதானித்து, “அப்புறம் ஆன்ட்டி.. நான் பவானி!” என்று புன்னகைத்தாள் அப்பெண்.

“அந்த பெரியபாளையத்தம்மன் பெயர் வச்சிருக்காங்க. தனியாவா வந்த? உன் அம்மா எங்கே?” என்றதும் சட்டென்று எழுந்த மௌனத்துடன், அங்கிருந்த மேடைப் பகுதியில் புன்னகையுடன் நின்றிருந்தவரைக் காண்பித்தவளுக்கு உள்ளுக்குள் சொல்ல முடியா சோகம்.

“அழகாயிருக்காங்க” என்றதில் புன்னகைத்தவள், “ஆமாம் ஆன்ட்டி. பட் உங்களை மாதிரி ஜாலி டைப் கிடையாது. ஓவர் ஸ்ட்ரிக்ட்! ஓவர் ரூல்ஸ்! ஓவர் கண்டிசன்! இன்னும் நிறைய ஓவர் சொல்லலாம். நில்லுன்னா நிற்கணும். உட்காருன்னா உட்காரணும்” என்றவள் பார்வை மேடையில் இருப்பவரைத் தொட்டு வர, வலிதாங்கிய அப்பார்வையைக் கண்டாள் அன்பழகி.

தாய்க்கு ஆதரவாகப் பேசியதில் எழுந்த கோபம், மேடையைப் பார்த்து சோகத்தைப் பொழியும் அப்பெண்ணின் கண்கள் கண்டு பரிவு எழுந்தது அன்பழகிக்கு.

“வேணும்னா எங்கம்மாவை நீயே வச்சிக்கோ. எங்கப்பாவுக்கு வேற பார்த்துக்குறோம்” என்றாள் அலட்டாது.

“கம்முன்னு இரு பொம்மு” என்று மகளின் தலையில் தட்ட,

“இந்த அம்மா உனக்கு வேண்டாம் பவிக்குட்டி. வேணும்னா ஒரு மூணு வருஷம் கழித்து என் தம்பியைக் கல்யாணம் பண்ணி, இவங்களுக்கு மருமகளா வந்து கொடுமைப்படுத்து” என்றாள் முகம் சுளித்தபடி.

“அச்சோ! என்ன இப்படிப் பேசுறீங்க? உங்கம்மா எவ்வளவு அன்பானவங்களா இருக்காங்க. அவங்களைப்போய் கொடுமை செய்யச் சொல்றீங்க?” என்று படபடத்தாள் பவானி.

“ஹேய்! அப்ப எங்கம்மாவுக்கு மருமகளா வர்றது பிடிச்சிருக்கு சொல்லு.” குறுகுறுவென்று பவானியைப் பார்த்து புருவம் உயர்த்த,

“அச்சோ! நிச்சயமா அப்படியில்லைங்க. நீங்க என்னென்னவோ சொல்றீங்க? நான் போறேன் ஆன்ட்டி” என நகரப் போனவளைத் தடுத்து, “பவிமா எப்பவும் போறேன்ற வார்த்தையை சொல்லக்கூடாது. போயிட்டு வர்றேன் இல்ல கிளம்புறேன்னு சொல்லணும்” என்று ராகினி சொன்னதும் சம்மதமாகத் தலையசைத்தாள் பவானி.

“இவள் என்னோட பொண்ணு அன்பழகி. பெயரில் மட்டுமில்ல நிஜத்திலும் அன்பானவள். என்ன அதை வெளிக்காட்டுற விதம்தான் வேற மாதிரியிருக்கும்.” ராகினியின் குரலில் மகளைப் பற்றிய பெருமையே!

மேடையிலிருந்த பவானியின் தாய் சற்று புருவம் சுருங்கப் பார்த்தாலும், இடமறிந்து எதுவும் சொல்லாமல் விட்டார்.

“பவிக்குட்டி! உன்கிட்ட போன் இருந்தா நம்பர் கொடு” என்றாள் அன்பழகி.

“எதுக்குக் கேட்குறீங்க?” என்றவளுக்குத் திடீர் பதற்றம்.

“அட வருங்கால தம்பி மனைவிகிட்டப் பேச எதாவது இருக்கும்” என்று கண்சிமிட்ட, அவளோ இன்னும் பயந்து விழிக்கவும், சட்டென்று புன்னகைத்த அன்பழகி, “சும்மா சொன்னேன் பவிக்குட்டி. உனக்குள்ள பெரிய சோகம் இழையோடுறது தெரியுது. என்கிட்டப் பேசுனா இரண்டு டம்ளர் பூஸ்ட் குடித்த மாதிரி ஆகிருவ” என்றாள் வாஞ்சையாக.

“எனக்கென்ன சோகம்? நான் சோகமால்லாம் இல்லை” என்று முறுக்கிக்கொள்ள,

“உன் சந்தோசத்தை உன் கண்ணு சொல்லணும். எனக்கு அப்படி சுத்தமா தெரியலை. காலேஜ் போற பொண்ணுங்க பட்டாம்பூச்சியா சுத்தும்போது, நீ எதையோ தொலைச்சிட்டுத் தேடுற மாதிரியிருக்கு பவிக்குட்டி” என்றாள் மென்மையான குரலில்.

பவானியின் கண்கள் கலங்க அதை மறைத்தவள், “நான் காலேஜ் படிக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என கேட்க,

“நீ படிக்கிற காலேஜில் நான் ஓல்ட் ஸ்டூடண்டுடா.. ஸ்டூடண்டுடா” என்று எக்கோ கொடுக்க, மகளின் தலையில் ஓங்கித் தட்டிய ராகினி, “ஏன்டி கத்துற? எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க” என்றார்.

“இப்படித் தலையில் தட்டித்தட்டியே குள்ளபுஸ்காவா ஆக்கிட்டீங்கம்மா. வளர்ந்து ஐபிஎஸ் ஆக வேண்டிய என்னை, ஒரே இடத்தில் உட்கார வச்சிட்டீங்க” என்றாள் மூக்கைச் சுருக்கி.

“உங்கம்மா கூப்பிடுறாங்க பாரு” என்றதும் அழைத்தவரைப் பார்த்தவள், “நான் வர்றேன் ஆன்ட்டி. அப்புறமா பார்க்கலாம்” என்று சென்றுவிட்டாள்.

“என்ன பொம்மு நீ? முன்னப்பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவியா? பாவம் புள்ள பயந்துட்டா” என்றார் கண்டிப்புக் குரலில்.


 
Last edited:
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“மீ! அந்தப் பொண்ணுக்கு நிஜமாவே பிரச்சனையிருக்கு. சின்னச்சின்ன விசயத்துக்கே ரொம்பப் பயப்படுறா. ஜாக்கிரதையா இருக்கணும்ன்ற பெயர்ல சின்னச்சின்ன சந்தோசத்தையும் இழந்துட்டிருக்கா.”

மேடையில் நின்றிருக்கும் பவானியைப் பார்த்த ராகினிக்கு மகள் சொல்வது உண்மையென்றே தோன்றியது. “சரி வா பொம்மு. சாமியம்மா பேசப்போற நேரம் வந்துட்டதா மைக்ல சொல்றாங்க. அவங்க பக்கத்துல போக முடியுமா பார்க்கலாம்” என்றார்.


“அம்மா அவங்க பேசினாலும் நமக்குக் கேட்காது. பனிரெண்டு வருடம் பேசாம இருந்திருக்காங்க. குரல்வளை ரொம்ப பலகீனமாயிருக்கும். மைக் வைத்தால் கூட அவங்க பேசுறதை நம்மளால புரிஞ்சிக்க முடியாது” என யதார்த்தத்தைச் சொன்னாள்.

“ஆமாம்ல. சரி விடு ரொம்ப ஆராய வேண்டாம்” என்று முடித்துவிட்டார்.

சற்று நேரத்திற்கெல்லாம் சாமியம்மா பேச ஆரம்பிக்க, அவரின் குரல் மிக மெல்லியதாகக் கேட்டது. முதலில் கடவுளுக்கும் கடமைப்பட்டவர்களுக்கும் நன்றியுரைத்து, பின் அங்கிருந்தவர்களுக்குக் குறி சொல்ல, சண்டா மேளம் அவரின் குரலை இன்னும் குறைவாகக் காண்பிக்க, பத்து நிமிடம் முடியும் வேளையில் கோவிலுக்குள் சென்று அம்மனை மனதார வேண்டி பூஜை செய்து, மீண்டும் மௌனத்திற்குத் தன்னைக் கொடுத்தார்.

சன்னிதானம் முன் அலங்கரிக்கப்பட்ட பெரிய நாற்காலியில் அவர் அமர, ஆண் பெண் பேதமில்லாது அனைவரும் அவர் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்க ஆரம்பிக்க, புன்னகை மாறாது அனைவரையும் ஆசீர்வதித்து விபூதி பூசினார் ராஜேஸ்வரி.

தாயுடன் கோவிலினுள் நுழைந்த அன்பழகிக்கு, அக்காட்சிகள் யாவும் உவப்பானதாக இல்லை.

பால் முட்டை கொடுத்து புற்றைச் சுற்றி கும்பிட்டு முடித்த ராகினி, அங்கிருந்த சாமியம்மா காலில் விழப்போக, தாயைத் தடுத்த அன்பழகி, “அம்மா என்ன பண்றீங்க? படிச்சவங்கதான நீங்க?” என்ற குற்றச்சாட்டில், சாமியம்மா புருவம் உயர்த்த, பக்கத்தில் நின்றிருந்த கூட்டம் அவர்கள் புறம் திரும்ப, கேமராக்களும் அவர்களை வஞ்சனையில்லாமல் உள்வாங்கியது.

“ஏன் பொம்மு தடுக்குற? பெரியவங்க கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்குறது புண்ணியம்டா. அதுவும் கடவுள்கிட்ட தன்னை அர்ப்பணிச்சவங்ககிட்ட இருந்து கிடைக்குற ஆசீர்வாதம் கடவுளே நம்மளை வாழ்த்துற மாதிரி” என்றார்.

“புண்ணியம் யாருக்கும்மா?” என்றாள் நிதானமாய்.

“நமக்குதான்டா. இதென்ன கேள்வி கேட்குற? சாமி விஷயத்துல விளையாடக்கூடாது” என்றார் கண்டிப்புடன்.

“நீங்கதான்மா சாமி விஷயத்துல விளையாடுறீங்க” எனும்போது ஒலித்துக் கொண்டிருந்த பாடல் நிற்க, அவள் சத்தம் மட்டுமே ஓங்கி ஒலித்தது.

“கண்ணுக்கு முன்ன சாமி இருக்கும்போது ஆசாமி கால்ல ஏன் விழுறீங்க? அப்ப சாமின்னு எதுக்கு இருக்கு? உள்ள வந்ததிலிருந்து பார்க்கிறேன். அந்த அம்மன் கால்ல யாரும் விழுந்து வணங்கியதை நான் பார்க்கலை. ஆனா, சாமியோட பூசாரியா நியமிக்கப்பட்ட இவங்க கால்ல எல்லாரும் விழுறாங்க? கோவில் வெளியில விழுந்ததைத் தப்புன்னு சொல்ல மாட்டேன். ஆனா, சன்னிதானத்துல சாமிக்குப் பதிலா இவங்க கால்ல விழுறதெல்லாம் கொடுமையோட உச்சக்கட்டம்மா” என்றவள் குரல் மட்டுமே அங்கு ஒலித்துக் கொண்டிருக்க சுற்றிலும் அத்தனை அமைதி.

தன் பக்தியையும், கௌரவத்தையும் பொதுயிடத்தில் கப்பலேற்றிக் கொண்டிருக்கும் பெண்ணை, புன்னகை மாறாது நிதானமாகப் பார்த்திருந்தார் ராஜேஸ்வரி.

கூட்டத்தில் இருந்த ஒருவனோ, ‘யார்டா அது? இந்த சாமியம்மாவை பப்ளிக்ல வைத்து விளாசுறது?’ என்ற கேள்வியோடு அன்பழகி இருக்குமிடம் நோக்க, அவளின் பின்புறம் மட்டுமே தெரிய, சாமியம்மா முகமோ புன்னகைக்குள் கடுமையை ஒழித்திருப்பதை சுவாரசியமாகக் கண்டான் அவன்.

“பொம்மு எல்லாரும் பார்க்கிறாங்க. சரி தப்புன்னு பார்க்கிற இடமில்லை இது. சாமி கும்பிட்டாச்சில்ல வா போகலாம்” என்றழைத்தவர் குரலில் ஒருவித பதட்டம்.

“ஒரு நிமிஷம்மா. சரி தப்புப் பார்க்கிற இடமில்லைதான். அவங்க கால்ல விழுந்தா நமக்குப் புண்ணியம்னு சொன்னீங்கள்ல, உண்மை அது கிடையாது. இங்க வர்ற ஒவ்வொருத்தரோட புண்ணியத்தையும் இவங்கதான் வாங்கிக்குறாங்க” என்று அனைவரையும் திகைக்க வைத்தாள்.

“என்னமா ஏதேதோ உளறிட்டிருக்க? சின்னப் பொண்ணாச்சேன்னு பார்க்கிறோம். எங்க நம்பிக்கையைக் குலைக்கப் பார்க்காத. நாத்திகம் பேசுற உனக்கு இங்க என்ன வேலை?” என்றார் அங்கிருந்த வெள்ளை வேஷ்டி மனிதரில் ஒருவர்.

“ஹலோ சார்! நான் நாத்திகவாதியில்லை. தினமும் காலையில் சாமி கும்பிடாம வீட்டை விட்டு வெளியில போகமாட்டேன். நான் வேலை பார்க்கும் இடத்தில் பெருசா ஒரு முருகர் படமிருக்கும். இங்க நான் பேசுறது நீங்க செய்யுற சில முட்டாள்தனங்களை விடச்சொல்லி.”

“ஏய்! நாங்க முட்டாளா?” என ஒரு கோஷ்டியினர் எகிறியபடி வர,

“தப்பைத் தப்புன்னு சொன்னா கோபம்தான் வரும். அந்தப் பொண்ணு என்ன சொல்றாங்கன்னு முழசா கேளுங்கையா” என்ற குரல் வந்த திசையை அன்பழகி பார்க்க, அங்கிருந்த கூட்டத்தில் யாரென்றே தெரியவில்லை. அவன் யாரெனத் தெரிந்த சாமியம்மாவிற்கோ பல்லைக் கடிப்பதைத் தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை.

சன்னியாசத்தில் ஒன்று கோபம் தவிர்த்தல். இங்கோ?

“சரிமா சொல்லு?” என்றார் வெள்ளை வேஷ்டி.

“சார் நம்ம ஒவ்வொருத்தருக்கும் ஏதோ ஒரு வகையில் ஒவ்வொரு விதமான கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். அதையெல்லாம் கோவிலுக்கு வந்து சாமிகிட்டக் கொட்டி, அந்நேரக் கஷ்டத்தை மறந்து, கடவுள் மீது மட்டுமே பற்று கொண்டு கொஞ்சமே கொஞ்சம் புண்ணியத்தோட வெளில வர்றோம். வந்த உடனே இவங்க காலடியில் விழுந்து, சாமிகிட்ட கிடைத்த புண்ணியத்தை இவங்களுக்குக் கொடுத்திருறோம். இவங்க புண்ணியக் கணக்கு ஏற, நாம எதுக்குக் கோவிலுக்கு வந்தோமோ அதே பாரத்தோடதான் திரும்பவும் வீட்டுக்குப் போறோம்.”

“சாமி கண்முன் காட்சி தர்றப்ப அவரை விட்டுட்டு ஆசாமி கால்ல விழுறது நியாயமில்லைன்றது என்னோட கருத்து. இதில் நீங்க கவனிக்காத இன்னொரு விஷயம், அவங்க கால்ல விழும்போது அவங்க பாதத்துல உங்க விரல் படாம விலகி நிற்கிறாங்க. ஏன் தெரியுமா?”

சிலர் தெரிந்துகொள்ளவும், சிலர் எரிச்சலிலும், சிலர் ஆர்வத்திலும் ஏனென்பதாய்ப் பார்க்க, “அவங்க புண்ணியம் நம்ம கையில் வந்திரும்ன்ற எண்ணமா இருக்கலாம்” என்றான் அவன்.

“நிஜம்தான். அந்த எண்ணம் வந்திருக்கு அப்படின்னா, சாமியம்மாவுக்குப் புகழ்போதை இருக்குதா?” என்று அந்த முகமறியாதவன் வார்த்தையை ஒத்துக்கொண்டு பதில் கேள்வியாக முடித்தாள் அன்பழகி.

பவானியோ திறந்த வாய் மூடாது அன்பழகியையேப் பார்த்துக் கொண்டிருந்தாள். அப்படியே தூக்கி வைத்துக் கொண்டாடத் தோன்றியது. அதைச் செயல்படுத்த முடியா நிலையில் அவளின் ரசிகையாகிவிட்டாள் பவானி.

“பகுத்தறிவுன்றது சாமியே இல்லைன்னு சொல்றதுல கிடையாது. இப்படிப்பட்ட மூடப்பழக்கத்தை விட்டுட்டு கடவுள்கிட்ட மட்டும் சரணடையுங்கன்னு சொல்றேன். கோவில் வெளியில வைத்து நீங்க என்ன வேணும்னா செய்யலாம். சாமி முன்ன வேண்டாம் சொல்றேன். முடிஞ்சா திருத்திக்கோங்க” என்றவள் தாயிடம் திரும்பி “வாங்கம்மா போகலாம்” என தாயைக் கூட்டிக்கொண்டு வெளியே செல்ல, தன் இருசக்கர வாகனத்தை எடுக்கையில் ராகினியிடம் வந்த ஒருவர் சாமியம்மா அழைப்பதாகச் சொல்லிச் சென்றார்.

“அம்மா! கால்ல விழுந்தீங்கன்னு தெரிஞ்சது அவ்வளவுதான். போயிட்டு சீக்கிரம் வாங்க. நான் ஆக்டிவாவை வெளியே எடுக்குறேன்” என்றாள்.

அன்பழகி சென்றதும் அங்காங்கே சலசலப்புகள் இருந்தாலும் அவள் பேசியதன் நியாயத்தை உணர்ந்தவர்கள் அம்மனின் காலில் விழுந்து அவரைத் தஞ்சமடைய, அவளைப் பொறாமை பிடித்தவளாய்ப் பார்த்தவர்களும், அவரின் அருள்வாக்கில் பலனடைந்தவர்களும் ஆசாமியான சாமியம்மா காலில் விழ, “திருந்தாத ஜென்மங்கள்” என்று வெளியே வந்தவனுக்கு, ஏனோ முன்னே பின்னே பார்த்தறியாத பெண்மேல் நன்மதிப்பு உண்டானது.

தன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்தபொழுது வந்த கைபேசி அழைப்பை ஏற்றவன், “டேய்! இப்ப நான் ரொம்ப சந்தோசமா இருக்கேன்டா. இந்த சாமியம்மாவை ஒரு பொண்ணு பிரிச்சி மேய்ஞ்சிட்டாள்டா. ப்பா! சான்ஸேயில்லைடா. அதுவே சின்னப் பொண்ணாயிருந்தா தோள்ல தூக்கிப்போட்டு சுத்தியிருப்பேன். இல்லைடா முகத்தைப் பார்க்கலை. ரொம்ப காலத்துக்கு நல்லாயிருக்கணும்டா அந்தப் பொண்ணு. மீதியை வந்து பேசுறேன்டா” என்று கைபேசியை அணைத்து சட்டைப் பையில் வைத்து வண்டியை எடுத்துச் சென்றுவிட்டான்.

“அட! நம்மளைத்தான் புகழ்றாப்லயா. பரவாயில்லையே நம்ம பேச்சுக்கு இவ்வளவு வேல்யூ இருந்திருக்கு. முகம் தெரியாத அந்த ரசிகனுக்கு என்னுடைய நன்றிகள்” என புன்னகையுடன் நின்றாள். அன்பழகியின் பின்னால் பேச்சுச் சத்தம் கேட்டதால் திரும்பிப் பார்க்க நாகரீகம் தடுத்திருந்தது.

உள்ளே சென்ற சில நிமிடங்களில் வந்த ராகினியிடம், “என்னம்மா திட்டலையா?” என்க,

“ரொம்ப தன்மையா பேசினாங்கம்மா. அடுத்த வாரம் வரச்சொன்னாங்க” என்றார்.

“அவங்க உங்ககிட்ட நடிக்கிறாங்கம்மா. கண்ணுல அவ்வளவு கோபம் இருந்ததைப் பார்த்தேன். கோபம்ன்றதை விட வேற எதுவோயிருந்தது. எதுக்கும் ஜாக்கிரதையா இருங்க” என்று எச்சரிக்கை விடுத்தாள் அன்பழகி.

அந்த ஜாக்கிரதையைத் தனக்குமே சொல்லியிருக்கலாம்!
 
Last edited:
Member
Joined
Sep 8, 2024
Messages
43
Samiamma ammandra Perla villi ahhh
Lovely start sorna
Valthukal
 
Member
Joined
Sep 3, 2024
Messages
30
அன்பழகி சரியா சொல்லி இருக்கா. நிறைய பேருக்கு சாமிக்கும் ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாமலே இருக்கு. அதென்ன அன்பழகிய ஜாக்கிரதையா இருக்க சொல்றீங்க. அதான், ஹீரோ பின்னாடி இருந்து குரல் கொடுத்து இருக்கானே... 🤔
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
அன்பழகி சரியா சொல்லி இருக்கா. நிறைய பேருக்கு சாமிக்கும் ஆசாமிக்கும் வித்தியாசம் தெரியாமலே இருக்கு. அதென்ன அன்பழகிய ஜாக்கிரதையா இருக்க சொல்றீங்க. அதான், ஹீரோ பின்னாடி இருந்து குரல் கொடுத்து இருக்கானே... 🤔
பின்னாடி குரல் கொடுத்தது ஹீரோவா? யாரும் என்கிட்ட சொல்லலையேங்க
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top