- Joined
- Aug 31, 2024
- Messages
- 687
- Thread Author
- #1
ஓம் சரவண பவ
சொர்ணா சந்தனகுமார்
செந்தூர அழகி
1
சொர்ணா சந்தனகுமார்
செந்தூர அழகி
1
அம்மன் கோவிலில் பாடலொன்று மிதமான சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அக்கோவிலில் ஆட்கள் நடமாட்டம் இருந்தாலும் எப்பொழுதும் ஒரு அமைதி இருக்கும். விதிவிலக்காய் சில நேரம் சப்தங்களும் கேட்பதுண்டு.
“சாமியம்மா! என் பொண்ணு நாலுநாளா வயிறு வலியில் துடிக்கிறா. ஹாஸ்பிடல்ல பார்த்தும் எதுவும் சரியாகலை. என் பொண்ணைக் காப்பாற்றிக் கொடுங்கம்மா” என்று கதறியபடி கண்ணில் நீருடன், தன்முன் அம்மனின் அவதாரமாக அமர்ந்திருந்த பெண்மணியின் காலில் குழந்தையுடன் விழுந்தாள் அப்பெண்.
மஞ்சள் நிற ஆடையில் கெண்டைக்கால் வரை சடாமுடியுடன், நெற்றி நிறைய விபூதியைப் பட்டையாக அடித்து, கழுத்தில் ருத்திராட்ச மாலைகள் சில கிடக்க, நாற்பத்தெட்டு வயதில் ஐந்தரையடி உயரத்தில் புன்னகை முகமாய் நின்றிருந்தார், மக்களால் சாமியம்மா என்றழைக்கப்படும் ‘ராஜேஸ்வரி.’
காலில் விழுந்த பெண்ணின் தலையைத் தொட்டு எழுப்பி உட்காரவைத்து, “என்னாச்சி?” என்றார் சைகையில்.
தன் பிரச்சனையைச் சொல்லி அவரிடம் அருள்வாக்கு கேட்க, துளசி நீர் கொடுத்து, விபூதியை தன் நடுநெற்றியில் வைத்து மந்திரம் ஜெபித்து குழந்தைக்குப் பூசிவிட்டு, அப்படியே சிறிது குழந்தையின் வாயில் வைத்து, “இரண்டு நாட்களில் நடக்கவிருக்கும் விழாவிற்கு பால் முட்டையுடன் வா. அதற்குள் குழந்தைக்கு சரியாகிவிடும்” என்று கரும்பலகையில் எழுதிக்காண்பித்து நம்பிக்கையளித்து விபூதியைக் கையில் கொடுத்தார்.
மறுபடியும் அவர் காலில் விழுந்தெழுந்து நன்றியுரைத்துச் செல்ல, அடுத்தடுத்து வந்தவர்களுக்கும் அவர்கள் பிரச்சனை கேட்டு நிவர்த்தி செய்து கொண்டிருந்தார் ராஜேஸ்வரி.
ராஜேஸ்வரி பேசமாட்டார். பேசமாட்டார் எனில் ஊமையில்லை. கடவுள் மேலுள்ள பக்தியில் சித்தர்களின் ஆசீர்வாதத்தில் தன்னைத்தானே அமைதிப்படுத்திக் கொண்டார். பனிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறையே அவர் பேசுவதைக் கேட்கலாம். அவர் சன்னியாசம் வாங்கிய முதல் பனிரெண்டாவது வருட பூஜையைத்தான் அப்பெண்ணிடம் சொன்னது.
திருவள்ளுரில் இருந்து சென்னை செல்லும் வழியில் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் உள்ளது நாகனூர். அங்கிருக்கும் சின்ன புத்துக்கோவில்தான் ராஜேஸ்வரி இருப்பது. பதினைந்து வருடங்களுக்கு முன்னர் ஆரம்பித்த ஆன்மீகம், படிப்படியாக முன்னேறி பனிரெண்டு வருடத்திற்கு முன் அவர் குருவின் ஆசியுடன், முழுதாக தன்னை ஆன்மீகத்தில் இணைத்து முழு சன்னியாசம் வாங்கிவிட்டார்.
அவர் இருக்கும் கோவில் செல்பவர்களுக்கென்று சில சட்டதிட்டங்களும் உண்டு. அதில் முக்கியமானது உடை பற்றியது. திருமணமான பெண்கள் கண்டிப்பாக புடவை அணிந்தே வரவேண்டும். திருமணமாகாத பெண்கள் எனில், பாவாடை தாவணி அல்லது சுடிதாருக்கு அனுமதியுண்டு. உடல் மறைக்கும் ஆடைகள் மட்டுமே அவர் வரையில் சரி. இதர ஆடைகளுக்குத் தடாதான்.
இதோ ஒருபுறம் அன்னதானமும் தாகதானமும் நடக்க, கேரள சண்டா மேளம் ஒலிக்க, பதினேழடி உயரம் ஓங்கி வளர்ந்திருந்த புற்றைச் சுற்றிலும் மஞ்சள் குங்குமமும் தெளிக்கப்பட்டு, பாலும் முட்டையும் வைக்கப்பட்டிருக்க, முகப்பில் இருந்த அம்மன் பூ அலங்காரத்தில் ஜொலித்துக் கொண்டிருந்தார்.
கோவிலின் வெளியே மேடையிட்டு சுற்றிலும் பந்தல் போட்டு, மேடையெங்கும் உள்ள பூ அலங்காரத்தின் நடுநாயகமாக சாமியம்மாள் அமர்ந்திருக்க, அவர் பேசுவதைக் கேட்கப்போகும் அந்த பத்து நிமிடத்திற்காக நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அதை நேரடி ஒளிபரப்பாக்கச் சில தனியார் ஊடகமும் இருந்தது.
அந்தப் பத்து நிமிடம் யார் என்ன கேட்டாலும் அவர்களுக்கு சொல்லப்படும் வாக்கு பழிக்குமென்ற நம்பிக்கையில் குறி கேட்க முண்டிக்கொண்டிருந்தனர் மக்கள்.
“என்னம்மா இவ்வளவு கூட்டமாயிருக்கு?” என்று கேட்டவளுக்கு அக்கூட்டத்தைக் கண்டு ஒரு ஆர்வம் எழுந்தபோதிலும், கூடவே சற்று எரிச்சலும் உண்டானதென்னவோ உண்மை.
“நான்தான் சொன்னேன்ல பொம்மு. பனிரெண்டு வருஷம் கழித்து சாமியம்மா இன்னைக்குதான் பேசப்போறாங்க. நாமெல்லாம் ஒருநாள் பேசலைன்னாலே பைத்தியம் பிடிச்சிரும். இவங்களைப் பா...”
“அம்மா! அவங்க விருப்பப்பட்டு இருக்காங்க. குடும்பத்துல உள்ள நாம விருப்பப்பட்டாலும் அப்படி இருக்க முடியாது” என்றாள் தாயை இடையிட்டு.
“ம்.. நாகமுனி சித்தரோட சிஷ்யையாம் இவங்க. குறைந்த காலத்திலேயே ஆன்மீகத்துல தன்னை முழுமையா அர்ப்பணிச்சிருக்காங்க. சொல்றதெல்லாம் பழிக்குது. குழந்தை வரம் தேடி வந்த நிறைய பேர் மடி நிறைந்து போயிருக்கிறாங்கன்றது சத்தியமான உண்மை. ரொம்ப நாள் வரணும்னு பார்த்து இப்பதான் நேரம் கிடைச்சிருக்கு. அதுவும் விசேஷ நாள்ன்றப்ப சந்தோசமாயிருக்கு பொம்மு.”
“பார்த்தும்மா பல்லு ரொம்ப வெளியில தெரியுது. வீட்டுல எங்கப்பாகிட்டப் பேசணும்னா மட்டும் உம்முணாமூஞ்சியைக் காட்டுறது. அப்பா வரட்டும் உங்களை மாட்டிவிடுறேன்.”
“போடி! போயி முதல்ல அதைச் செய். எப்பப்பாரு அப்பாவுக்கு கூஜா தூக்கிட்டிருக்கிறது. என்னோட இருக்குறப்பவாவது என்னைப் பாரேன்டி” என நொடித்தார் ராகினி.
“ஹான்! பார்த்தாச்சி பார்த்தாச்சி. கொஞ்சம் அழகாகத்தான் இருக்கீங்க. அதுக்காகல்லாம் உங்களுக்கு சப்போர்ட் பண்ண முடியாது. மை டேடி வெரி பெஸ்ட் டேடி. யூ பேடி” என ரைமிங்காக இழுக்க,
“நான் பேடா? யூ போடி” கோவித்துத் திரும்பிக்கொண்டார்.
“ர..ரா..ராகினி! இப்படி முகத்தைத் திருப்பலாமா நீ” என்று தாயிடம் செல்லம் கொஞ்ச,
“என்ன திமிரு இருந்தா மரியாதையில்லாம பேசுவ? கொழுப்புப் பிடிச்சவளே.. கொல்லுறேன் பாரு உன்னை” என்று மிரட்டினார் ராகினி.
“அது ரைமிங்ல வந்திருச்சிமா. நீங்க எப்பேர்ப்பட்ட ஆளு. உங்களையெல்லாம் மரியாதைக் குறைவா பேசிர முடியுமா? இல்லை பேசத்தான் விட்டுருவீங்களா?”
“எப்பேர்ப்பட்ட ஆளுங்க மேடம்” என்று மகளின் நக்கல் புரிந்து வலுக்கட்டாயப் புன்னகையை வரவழைத்துக் கேட்டார்.
“தி கிரேட் சதாசிவம் ஐயரோட...”
“அடியே!” என்றலறி நங்கென்று மகளின் தலையில் ஒரு கொட்டு வைத்து, “அது ஐயர் இல்லைடி லாயர். இதையே ரைமிங்கா சொல்லத் தெரியலை. இதுல பந்தா கேட்குதா உனக்கு? ஹாஹா உங்கப்பாவுக்குக் குடுமி வச்சா நல்லாத்தான் பொம்மு இருக்கு.” கற்பனையில் கணவனை குடுமியில் கண்டு சிரித்தார்.
‘இன்னைக்கு அப்பாகிட்ட உங்களை மாட்டிவிடலை..’ என மனதில் தாயைத் திட்டி, வலித்த தலையை முடி கலையாது லேசாகத் தடவியபடி, “அடிக்கடி வன்முறையைக் கையில் எடுக்குறீங்கம்மா. இது நல்லாயில்லை பார்த்துக்கோங்க. துணைக்கு வந்த பிள்ளையைத் துன்புறுத்துவது மகா மெகா தவறு” என்று அப்பொழுதும் விடாது வாய் பேசினாள்.
“பதிலுக்குப் பதில் பேசிரணும் உனக்கு. இல்லைன்னா தூக்கம் வராது” என்றபடி மகளைச் சற்று வேகமாகத் தன்னருகில் இழுத்தவர் தங்களைத் தாண்டிச் சென்ற வாலிபனிடம், “பார்த்துப் போ தம்பி. இல்லை எங்கேயாவது விழுந்து வாரிக்குவ” என முறைக்க, பதிலுக்கு அவனும் அவரை முறைத்துச் சென்றான்.
“கோவில்ல கூட பொண்ணுங்களை இடிச்சிரணும். அந்த ஒரு நொடி உரசல்ல என்ன சுகம் கிடைக்குதோ இந்த எருமைகளுக்கு. இடிக்க வந்ததுமில்லாமல் முறைச்சிட்டு வேற போறான் ராஸ்கல். இவனை மாதிரி பையன்களை எல்லாம் இதுங்களைப் பெத்த ஆத்தாக்களே சோத்துல எதையாவது வைத்துக் கொல்லணும். அப்பதான் பொண்ணைத் தொடணும்னு நினைக்கிறவன் எல்லாரும் பயப்படுவான்” என்றார் கோபத்தில்.
“கரெக்ட் ஆன்ட்டி” என்ற குரலில் அம்மா மகள் இருவரும் திரும்ப, “ஹையோ! நீங்க சூப்பர் போங்க. இதே எங்க வீட்டுலன்னா, கண்ணை எங்க வச்சிட்டிருக்க? ஒருத்தன் நம்மைப் பார்க்கிறது நம் அகக்கண்ணுக்குத் தெரியும். உரச வர்றான்னா சுதாரித்து விலகமாட்டியான்னு கேட்டு என்னை வாட்டி எடுத்துருவாங்க. அவன் இடிச்சிட்டு என்ஜாய் பண்ணிட்டு போயிட்டேயிருப்பான். அதெல்லாம் அவங்களுக்குத் தெரியாது.” ஒருவித இயலாமையில் பேசியவள் நிதானித்து, “அப்புறம் ஆன்ட்டி.. நான் பவானி!” என்று புன்னகைத்தாள் அப்பெண்.
“அந்த பெரியபாளையத்தம்மன் பெயர் வச்சிருக்காங்க. தனியாவா வந்த? உன் அம்மா எங்கே?” என்றதும் சட்டென்று எழுந்த மௌனத்துடன், அங்கிருந்த மேடைப் பகுதியில் புன்னகையுடன் நின்றிருந்தவரைக் காண்பித்தவளுக்கு உள்ளுக்குள் சொல்ல முடியா சோகம்.
“அழகாயிருக்காங்க” என்றதில் புன்னகைத்தவள், “ஆமாம் ஆன்ட்டி. பட் உங்களை மாதிரி ஜாலி டைப் கிடையாது. ஓவர் ஸ்ட்ரிக்ட்! ஓவர் ரூல்ஸ்! ஓவர் கண்டிசன்! இன்னும் நிறைய ஓவர் சொல்லலாம். நில்லுன்னா நிற்கணும். உட்காருன்னா உட்காரணும்” என்றவள் பார்வை மேடையில் இருப்பவரைத் தொட்டு வர, வலிதாங்கிய அப்பார்வையைக் கண்டாள் அன்பழகி.
தாய்க்கு ஆதரவாகப் பேசியதில் எழுந்த கோபம், மேடையைப் பார்த்து சோகத்தைப் பொழியும் அப்பெண்ணின் கண்கள் கண்டு பரிவு எழுந்தது அன்பழகிக்கு.
“வேணும்னா எங்கம்மாவை நீயே வச்சிக்கோ. எங்கப்பாவுக்கு வேற பார்த்துக்குறோம்” என்றாள் அலட்டாது.
“கம்முன்னு இரு பொம்மு” என்று மகளின் தலையில் தட்ட,
“இந்த அம்மா உனக்கு வேண்டாம் பவிக்குட்டி. வேணும்னா ஒரு மூணு வருஷம் கழித்து என் தம்பியைக் கல்யாணம் பண்ணி, இவங்களுக்கு மருமகளா வந்து கொடுமைப்படுத்து” என்றாள் முகம் சுளித்தபடி.
“அச்சோ! என்ன இப்படிப் பேசுறீங்க? உங்கம்மா எவ்வளவு அன்பானவங்களா இருக்காங்க. அவங்களைப்போய் கொடுமை செய்யச் சொல்றீங்க?” என்று படபடத்தாள் பவானி.
“ஹேய்! அப்ப எங்கம்மாவுக்கு மருமகளா வர்றது பிடிச்சிருக்கு சொல்லு.” குறுகுறுவென்று பவானியைப் பார்த்து புருவம் உயர்த்த,
“அச்சோ! நிச்சயமா அப்படியில்லைங்க. நீங்க என்னென்னவோ சொல்றீங்க? நான் போறேன் ஆன்ட்டி” என நகரப் போனவளைத் தடுத்து, “பவிமா எப்பவும் போறேன்ற வார்த்தையை சொல்லக்கூடாது. போயிட்டு வர்றேன் இல்ல கிளம்புறேன்னு சொல்லணும்” என்று ராகினி சொன்னதும் சம்மதமாகத் தலையசைத்தாள் பவானி.
“இவள் என்னோட பொண்ணு அன்பழகி. பெயரில் மட்டுமில்ல நிஜத்திலும் அன்பானவள். என்ன அதை வெளிக்காட்டுற விதம்தான் வேற மாதிரியிருக்கும்.” ராகினியின் குரலில் மகளைப் பற்றிய பெருமையே!
மேடையிலிருந்த பவானியின் தாய் சற்று புருவம் சுருங்கப் பார்த்தாலும், இடமறிந்து எதுவும் சொல்லாமல் விட்டார்.
“பவிக்குட்டி! உன்கிட்ட போன் இருந்தா நம்பர் கொடு” என்றாள் அன்பழகி.
“எதுக்குக் கேட்குறீங்க?” என்றவளுக்குத் திடீர் பதற்றம்.
“அட வருங்கால தம்பி மனைவிகிட்டப் பேச எதாவது இருக்கும்” என்று கண்சிமிட்ட, அவளோ இன்னும் பயந்து விழிக்கவும், சட்டென்று புன்னகைத்த அன்பழகி, “சும்மா சொன்னேன் பவிக்குட்டி. உனக்குள்ள பெரிய சோகம் இழையோடுறது தெரியுது. என்கிட்டப் பேசுனா இரண்டு டம்ளர் பூஸ்ட் குடித்த மாதிரி ஆகிருவ” என்றாள் வாஞ்சையாக.
“எனக்கென்ன சோகம்? நான் சோகமால்லாம் இல்லை” என்று முறுக்கிக்கொள்ள,
“உன் சந்தோசத்தை உன் கண்ணு சொல்லணும். எனக்கு அப்படி சுத்தமா தெரியலை. காலேஜ் போற பொண்ணுங்க பட்டாம்பூச்சியா சுத்தும்போது, நீ எதையோ தொலைச்சிட்டுத் தேடுற மாதிரியிருக்கு பவிக்குட்டி” என்றாள் மென்மையான குரலில்.
பவானியின் கண்கள் கலங்க அதை மறைத்தவள், “நான் காலேஜ் படிக்குறது உங்களுக்கு எப்படித் தெரியும்?” என கேட்க,
“நீ படிக்கிற காலேஜில் நான் ஓல்ட் ஸ்டூடண்டுடா.. ஸ்டூடண்டுடா” என்று எக்கோ கொடுக்க, மகளின் தலையில் ஓங்கித் தட்டிய ராகினி, “ஏன்டி கத்துற? எல்லாரும் நம்மளையே பார்க்குறாங்க” என்றார்.
“இப்படித் தலையில் தட்டித்தட்டியே குள்ளபுஸ்காவா ஆக்கிட்டீங்கம்மா. வளர்ந்து ஐபிஎஸ் ஆக வேண்டிய என்னை, ஒரே இடத்தில் உட்கார வச்சிட்டீங்க” என்றாள் மூக்கைச் சுருக்கி.
“உங்கம்மா கூப்பிடுறாங்க பாரு” என்றதும் அழைத்தவரைப் பார்த்தவள், “நான் வர்றேன் ஆன்ட்டி. அப்புறமா பார்க்கலாம்” என்று சென்றுவிட்டாள்.
“என்ன பொம்மு நீ? முன்னப்பின்ன தெரியாத பொண்ணுகிட்ட இப்படித்தான் பேசுவியா? பாவம் புள்ள பயந்துட்டா” என்றார் கண்டிப்புக் குரலில்.
Last edited: