• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஓம் சரவண பவ

சொர்ணா சந்தனகுமார்


காதலிக்கும் ஆசையில்லை



1



பெங்களூர் வி.ஆர்.சாப்ட்வேர் கம்பெனியின் ஜி.எம் அறையைத் தட்டி, “மே ஐ கம் இன் சார்?” என அறைக்குள் வர அனுமதி கேட்டான் ஆனந்த்ராஜ்.

“வாங்க ஆனந்த். உட்காருங்க.”

“தேங்க் யூ சார்” என்று எதிரிலிருந்த சீட்டில் அமர்ந்தபடி, “என்ன சார் திடீர் அழைப்பு? டென் மினிட்ஸ் முன்னாடி வந்தப்ப எதுவும் சொல்லல? எதாவது நியூ ப்ராஜெக்டா?”

“நியூ ப்ராஜெக்ட் இல்ல ஆனந்த். நம்ம கம்பெனியோட நியூ ப்ராஞ்ச். மும்பை, பெங்களுர் தாண்டி நம்ம கம்பெனியை தமிழ்நாட்டுல ஆரம்பிக்கணும்னு ப்ளான்ல இருந்தாங்கள்ல. இப்ப அதுக்கான நேரம் வந்திருக்கு.”

“குட் நியூஸ் சார்.”

“எஸ் ஆனந்த். அதுக்கு லேண்ட் மார்க் பார்த்தீங்கன்னா, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் இந்த இடங்கள்ல பார்த்து முடிக்கச் சொல்லியிருக்காங்க.”

“ஏன் சார் குறிப்பிட்டு அந்த ஏரியாக்கள்? நிலத்தின் விலை கம்மியாயிருக்கும் என்பதாலா?” மேல்மருவத்தூர் என்றதும் மனதில் ஒரு தயக்கம் ஆனந்திற்கு.

“அதுவும் ஒரு காரணம் ஆனந்த். அதைவிட சென்னையிலிருந்து கொஞ்சம்தான் தூரம். நமக்கு ஏக்கர் கணக்குல இடம் வேணும். அது அந்த சைடு கிடைக்கும்.”

“சென்னையை நெருங்கின திருவள்ளுர் மாவட்டம் இருக்கே சார். அங்க பார்க்கலாமே. பெரிய மாவட்டம் கூட?”

“அந்த டிஸ்ட்ரிக்ட் ரேட் ஹையா இருக்கு ஆனந்த். சின்னதா சர்வே பண்ணியாச்சி. அதுவுமில்லாம அங்க அதிகம் விவசாய நிலங்கள்தான் இருக்கு. விவசாய நிலம் சேல் பண்ணக்கூடாதுன்னு அரசு அறிக்கை விட்டதால, இப்ப எந்த இடமும் விற்பனைக்கு வரல. அதுக்கு முன்னாடி விற்ற இடங்கள் ரேட் கேட்டா, அமௌண்ட் நார்மலைவிட அதிகம் சொல்றாங்க. அதுவுமில்லாம அங்க கம்பெனிக்கு ஏத்த இடமும் சரியா அமையல.”

“ஓகே சார். இப்ப நான் என்ன செய்யணும்?”

“நீங்கதான் ஆனந்த் எல்லாத்தையும் செய்யப் போறீங்க” என்றார் மர்மமாக.

“புரியல சார்?”

“நீங்கதான் அங்க போய் இடம் பார்த்து, அந்த இடம் கம்பெனிக்கு சரியாயிருக்குமான்னு ரிப்போர்ட் தரணும். உங்களுக்கு உதவியா நட்ராஜையும் கூட்டிட்டுப் போங்க. நீங்க தமிழ்நாடுன்றதால உங்களை அனுப்பணும்ன்றது எம்.டி உத்தரவு. ரிப்போர்ட் பக்காவா இருக்கணும் ஆனந்த். இடத்துல எந்த வில்லங்கமும் இருந்திடக்கூடாது. எல்லாத்தையும் எல்லா ஆங்கில்லயும் விசாரிச்சி ரிப்போர்ட் மெய்ல் பண்ணுங்க. எம்.டியோட ஒரு கான்பரன்ஸ் போட்டு கன்பார்ம் பண்ணிக்கலாம். ட்ராவல் டூ மத்த செலவெல்லாம் கம்பெனி பொறுப்பு. இதுல எதாவது டௌட்னா கேளுங்க. இல்ல விருப்பமில்லன்னாலும் தயங்காம சொல்லிடுங்க.”

“நோ ப்ராப்ளம் சார். நானே போறேன். தேங்க்யூ சார்” என்று எழுந்தான்.

“ஆல் தி பெஸ்ட் ஆனந்த்” என்று அவரும் எழுந்து கைகொடுத்தார்.

“சார் இதெல்லாம் டூ மச். இடம் பார்க்கிறதுக்கு எல்லாம் ஆல் தி பெஸ்டா” என்று சிரித்தபடி அவனின் இடம் வந்து அமர, “கே.ஆனந்த்ராஜ் எம்.பி.ஏ. மேனேஜர்” என்ற அடையாள பலகை அவன் முன்னே.

தமிழ்நாடு! அதிலும் மேல்மருவத்தூர் என்ற பெயரைக் கேட்டதும் தனக்குள் வந்த அதிர்வு. என்ன முயன்றும் அன்றைய நிகழ்வை மறக்க முடியவில்லை. அதைத் தொடர்ந்து தான் செய்த தவறும் இல்லை தப்பும்.

அந்த சம்பவத்தின் பின் இன்று வரை தாய் தன்னிடம் ஒரு வார்த்தை கூட பேசியதில்லை. தன்னை முழுவதுமாக ஒதுக்கி வைத்துவிட்டது புரிந்தாலும், சிறு அயர்வென்றாலும் மனம் தாயைத் தேடியது. தன் தந்தை இறந்து பதிமூன்று ஆண்டுகளில் தன்னையும் தங்கையையும் எந்தவித குறையுமில்லாமல் வளர்த்தவர். இன்று யாரோ போல் தன்னைத் தவிர்க்கிறார்.

‘திருமணத்திற்கு பெண் பார்க்கவா?’ நண்பன் ஒருவனின் அண்ணன் அடிக்கடி கேட்கும் கேள்வி இது. அது என் தாயின் பொறுப்பு என்று சொல்லி அமைதியாகிவிடுவான். ஒரு முறை திருமணம் பேசி கடைசியில் தானே அதை நிறுத்தி, ஒரு பெண்ணிற்கு செய்த பாவம் போதும் என்றது மனது. எவ்வளவு சுயநலமாக இருந்திருக்கிறேன். தான் மறுத்த பெண்ணிற்கு நல்ல கணவன் குடும்பம் என்று கிடைத்ததால் பாதிப்பில்லை. அப்படி இல்லாது போயிருந்தால்? அதை உணர வைக்கத்தான் அடுத்து இன்னொரு பெண் என் வாழ்வில் வந்தாளோ!

தன்னால் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் அவள் கணவனிடமும் மன்னிப்பு கேட்டுவிட்டான்தான். இருப்பினும் அதற்குத் தண்டனையாக தாய் பேசாதது இன்றும் மனதை அறுக்கிறது. என் சொல் எத்தனை பேரை காயப்படுத்தி என்னையும் நிம்மதியில்லாமல் செய்துவிட்டது.

தங்கை அனுபமாவிற்கு மாப்பிள்ளை பார்த்தாகிற்று என்று செய்தி மட்டுமே அனுப்பி, பத்திரிக்கையை பார்சல் கட்டிவிட்டார்கள். அவளும் சரியாக பேசுவதில்லைதான். திருமணம் முடிவான பின்பே எப்பொழுதாவது பேசுகிறாள். தாயைப் பற்றி விசாரிக்க, அவரின் கோபம் குறையவில்லை என்ற பதிலே கிடைக்கிறது. திருமணத்திற்குச் சென்றால் தாய் முகம் கொடுத்துப் பேசுவாரா? மனம் முழுக்க கேள்விகள் மட்டுமே!

திருமணம் அடுத்த மாதம் என்றிருக்க, இப்பொழுது கம்பெனி சார்பாக தமிழ்நாடு பயணப்படப் போகிறேன். இனி வாழும் வாழ்க்கை இப்படியே கழிந்து விடுமோ? எனக்கென ஒரு வாழ்வு கிடையாதா? உள்ளுக்குள் ஒரு பயம் ஆனந்திற்கு.

“பயம் தீர்க்க வருவாளா! அவனவள்!”

சுற்றிலும் அமர்ந்திருந்த தாய்க்குலங்கள் நடுவில் ஒற்றையாக ஒலித்துக் கொண்டிருந்தது அவனின் சோககீதம்.

என் சோகக் கதையைக் கேளு

தாய்க்குலமே.. அம்மா தாய்க்குலமே!

அதைக் கேட்டாலும் தாங்காதம்மா

உங்க மனமே.. அம்மா உங்க மனமே!

“என் சோக...”

“டேய் நிறுத்து. என்ன சோகக் கதைன்னு சொல்லாம, என் சோகக் கதையை கேளு தாய்க்குலமேன்னா நாங்க எதைன்னு கேட்கிறது. சொன்னால்தான எங்களுக்குத் தெரியும்? அதை விட்டுட்டு புலம்பிட்டிருக்க” என்று அதட்டினார் அந்த வயதான பெண்மணி.

அழாது அழுது வராது வடிந்த கண்ணீரைத் துடைத்தவன், “அதுவா பாட்டீஸ், நான் எங்கேயோ... எப்படியோ இருக்க வேண்டியவன். அநியாயமா இங்க வந்து மாட்டிக்கிட்டேன். என் சோக...” என திரும்பவும் ஆரம்பித்தான்.

“அடடடடா போதும் நிறுத்துப்பா. ஒரு வாரமா சோககீதம் பாடிகிட்டிருக்க. என்ன நடந்தது, ஏது நடந்ததுன்னு எதுவும் சொல்லாம எங்க ப்ரஷரை வேற எகிற வைக்கிற. இந்த வயசுல எங்களை கொஞ்சம் நிம்மதியா இருக்க விடமாட்டியா. இங்க வந்ததுக்குப் பதிலா பார்க் பீச்னு பாடியிருந்தன்னா கையில சில்லரையாவது தேறியிருக்கும்.” அவனின் டார்ச்சர் தாங்காமல் பாய்ந்தார் அந்தப் பெண்மணி.

“தேனு பாட்டி யூ டூ.. உங்களை எல்லாம் என் உறவா, உரிமையா நினைச்சி என்னோட சோகக் கதையை சொல்ல வந்தேன் பாருங்க என்னைச் சொல்லணும். இது வேலைக்காகாது என் கதையைக் கேட்க உங்களுக்கு குடுத்து வைக்கல” என்றான் வீராப்பாக.

“ஆமா இந்த வெட்டி வீராப்புக்கு மட்டும் குறைச்சலில்ல. ஏன்டாப்பா சுபாஷு.. உனக்கு கல்யாணம்தான பண்ணிவைக்கப் போறாங்க. என்னவோ கழுத்துல சுருக்குக்கயிறை மாட்டி பத்துமாடிக் கட்டிடத்திலிருந்து தள்ளி விடுறாமாதிரி சீன் போடுற. முடியலடா. இப்ப உனக்கு என்னதான் வேணும்னு காலையிலிருந்து இப்படிப் புலம்பிட்டிருக்க?”

“முத்துப்பாட்டி இப்ப கேட்டீங்களே இது பாய்ண்ட். அவ கழுத்துல முடிச்சி போடுறதும், என் கழுத்துல சுருக்கு போடுறதும் ஒண்ணுதான். என் கல்யாணக் கதையைக் கேட்டா எங்க வீட்டு சுவர்கூட கண்ணீர் வடிக்கும். அவ்வளவு கொடுமையானது தெரியுமா?”

“ஓஹ்.. அவ்வளவு நல்லவனா நீ. சரி பொண்ணு பெயரென்ன?”

“எந்த பொண்ணு? ஓ..அவளைக் கேட்குறீங்களா? உங்களுக்குத் தெரிஞ்ச பொண்ணுதான் பாட்டீஸ். அநேகமா இந்நேரம் உங்களுக்கு தெரிஞ்சிருக்கணுமே. என்கிட்ட போட்டு வாங்குறீங்களா என்ன?” என்றான் சந்தேகத்தோடு.

“ஆமா உன்கிட்ட போட்டு வாங்கிட்டாலும். முதல்ல யார் பொண்ணு? அவ பெயர் என்ன சொல்லு?” என்றார்கள் அங்கிருந்த அனைவரும்.

“பாட்டீஸ் வேண்டாம்” என்றவன், “ஹையோ எப்பேர்பட்ட பொண்ணு பார்த்து, எப்படியெல்லாம் சர்ப்ரைஸ் கொடுத்து, எப்படியெல்லாம் கல்யாணம் முடிக்கணும்னு நினைச்சேன். ஐயோ! போச்சே! போச்சே!” என புலம்பியவனை என்ன சொல்லி திட்டுவதென்று தெரியாமல் அனைவரும் முறைத்திருந்து, “அப்ப பெயரைச் சொல்லமாட்ட?” என்றனர் கடுப்பாக.

“ஆமா பெரிய பேரு கார்த்திகாவாம். பேரைப்பாருங்க சுருக்கினா கார்த்தி. பையன் பேரு மாதிரியிருக்கு. உவ்வே...” என்றான்.

“டேய் வேண்டாம் உன் பேரு கூடதான் சுபாஷ். இதுல ‘ஷ்’ எடுத்துட்டா உன்னோடது அக்மார்க் பொண்ணு பெயர். இதுல நீ அவளோட பேரை கிண்டலடிக்கிறியா. கார்த்திகா எங்க செல்லப் பொண்ணு. அவளை எதாவது சொன்ன..” என வயதானவர்கள் அவனிடம் சீறிக் கொண்டிருக்கும் போது,

“என்னம்மா இங்க ஒரே சத்தமாயிருக்கு? இவன் எப்ப வந்தான்?” என்ற கேள்விகளோடு அங்கு வந்தார் சுபாஷிணி.

“அதையேன்மா கேட்கிற. இந்த சுபாஷு பையன் தொல்லை தாங்கலைமா. நாங்களும் அவன் சோகக் கதையைச் சொல்லுவான்னு எவ்வளவு நேரம்தான் காத்திருக்கிறது. இவன் என்னடான்னா பாடியே கழுத்தறுக்கிறான்” என்று போட்டுக் கொடுக்க, பல்லை மட்டுமே கடிக்க முடிந்தது சுபாஷால்.

“என்னடா பிரச்சனை உனக்கு?” என குரலை உயர்த்தி அதிகாரமாக கேட்டார்.

‘ம்க்கும்.. பிரச்சனைக்கு பிள்ளையார் சுழி போட்டவருக்குத் தெரியாது. நான் என்ன சொல்ல வந்திருப்பேன்னு. இதை நாங்க நம்பணுமாக்கும்’ என்று மனம் தன்போக்கில் யோசிக்க..

“என்னடா கேட்டுட்டிருக்கேன் பேச்சையே காணோம்? கேட்டா பதில் சொல்லணும்ன்ற பேசிக் நாலெட்ஜ் உனக்கு இருக்குல்ல” என்றதும் கடனே என்று அவன் தலையசைக்க, “அப்ப சொல்லு என்னதான் உன்னோட பிரச்சனை?” என்றார் அதிகாரமாய்.

“பிரச்சனை எல்லாம் எதுவுமில்ல. எனக்கு பாட்டீஸைப் பார்க்கணும் போல இருந்ததால வந்தேன். இப்ப நா..நான் வர்றேன்” என்று அமைதியாக கிளம்பியவனிடம், “ஏய் சுபாஷ் நில்லு. அதென்ன மொட்டையா நான் வர்றேன்னு யார்கிட்டயோ சொல்ற மாதிரி சொல்ற. முதல்ல பேசுறதை தெளிவா பேச கத்துக்கோ” என்று மீண்டும் ஒரு அதட்டல் போட்டார்.

மனதிற்குள் எதையோ முணுமுணுத்தாலும், “நான் போய்ட்டு வர்றேன் அத்தை” என்று அழுத்திச் சொல்லி கிளம்பினான்.

“டேய் சுபாஷு உன் சோகக்கதையை சொல்லாமலே போறியேப்பா. உன் கதைக்காக நாங்க காத்திருக்கோம்” என்று அங்கிருந்த முதியோர்கள் அனைவரும் அவனை கலாய்க்க...

“ரொம்பத்தான் அக்கறை. நான் என்னோட சிஷ்ய பிள்ளைங்ககிட்டயே சொல்லிக்கறேன். வேணும்னா அவங்ககிட்ட கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்றான் வேகமாக.

“டேய் அதுங்க சின்னப் பிள்ளைங்க. அதுங்ககிட்டச் சொல்வ எங்ககிட்டச் சொல்ல மாட்டியா? போடா! எப்பயிருந்தாலும் இங்க வந்துதான ஆகணும்” என்றார்கள்.

“அதெல்லாம் வரமாட்டேன். வருவேன்னு கனவு காணாதீங்க” என்று அந்த பில்டிங்கின் மறுபுறமிருந்த குழந்தைகளைத் தேடிச் சென்றான். குழந்தைகளைப் பார்த்ததும் சாக்லேட்டைக் காண்பித்து அவர்களுக்குக் கொடுக்காமல் தன் கையை பின்னே இழுத்து, “இல்ல என் கதையைக் கேட்டா மட்டும்தான் சாக்லேட்” என்று பேரம் பேசினான்.

குழந்தைகள் ஏமாற்றத்தில் சாக்லேட்டையே பார்த்திருந்து மனமில்லாமல், “சொல்லுங்க கேட்போம்” என்றார்கள் சலித்தபடி.

‘நீங்க எப்படி வேணும்னா சலிச்சிக்கோங்க. முக்கியம் என் கதையை உங்ககிட்ட சொல்லணும். அதை நீங்க கேட்கணும் அவ்வளவுதான்!’ என்பதுபோல் அவர்களின் சாக்லேட் நினைவுகளை அலட்சியப்படுத்தி தன் கதையை ஆரம்பித்தான்.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
“பிள்ளைங்களா! எங்க வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் ரொம்ப வருஷ பகை. அந்த வீட்டுல பொண்ணு இருக்குன்றதே எனக்கு மறந்து போச்சி. நானும் அவளும் எதிரியும் இல்ல நண்பர்களும் இல்ல. நேர்ல பார்த்தா கூட யாரோன்னு போற ஆளுங்க. ஆனா பாருங்க, எங்களுக்கு கல்யாணமாம். அதுவும் நான் தெரியாம செஞ்ச ஒரு சின்ன, ரொம்ப சின்ன தப்புக்காக!” என்று விரல் வைத்து காண்பித்து வருத்தமாக சொன்னான்.

“அச்சச்சோ!” என குழந்தைகள் சாக்லேட்டைத் தரமாட்டேன்றானே என்று அதைப் பார்த்தபடியே சொன்னார்கள்.

அதை தனக்கானதாக எண்ணியவன், “ம்.. நான் பாவம்தான!” என்றான் அப்பாவியாக.

“அப்புறம் என்னாச்சி அண்ணா?” என்ற குழந்தைகளின் அவசரம் கவனம் முழுவதும் கதையை முடித்து எப்பொழுது சாக்லேட் தருவான் என்பதிலேயே இருந்தது.

“போன வாரம் லீவுக்கு வந்தேனா...”

“அண்ணா சுருள் வேண்டாம். நீங்களே சொல்லிடுங்க. அப்பத்தான் சீக்கிரம் முடியும்” என்றார்கள் கோரஸாக.

“அவ்வளவு ஆர்வமா குட்டிங்களா. இதோ...” என்றவன் சென்ற வாரம் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

அதே நேரம் அங்கே கார்த்திகா கொதித்துக் கொண்டிருந்தாள். “என்ன திமிர் இருந்தா என்னைப் பார்த்து அப்படிச் சொல்வான். இவன் பண்ணின தப்புக்கு எனக்கு தண்டனையா? அதுவும் வாழ்நாள் தண்டனை. ராஸ்கல் சரியான தூங்கு மூஞ்சி. இது தூங்கி என் வாழ்க்கையையும் சேர்த்துல்ல தூங்க வச்சிருச்சி. பேரைப்பாரு சுபாஷ். இருக்கிற மூணெழுத்துல இரெண்டெழுத்து அக்மார்க் பொண்ணு நேம். இவனையெல்லாம்...” எனும்போதே அளவிட முடியா கோபம் வந்தது. அன்று தன்னைப் பார்த்துச் சொன்ன வார்த்தை அவன் மேல் இன்னுமே கோபத்தை கிளறியது.

சுபாஷோ அங்கேயிங்கேயென்று தன் ஆதங்கத்தைக் கதை கதையாக கொட்ட, கார்த்திகாவோ அனைத்தையும் மனதிற்குள்ளேயே போட்டு பொருமிக் கொண்டிருந்தாள் என்றால் அதற்கு தூபம் போட்டார் அவளின் தந்தை தணிகாசலம்.

“அப்பா இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தணும்பா. அதுக்கு ஐடியா சொல்லுங்க. அவனையெல்லாம் நான் கல்யாணம் பண்ணிக்க முடியாது. என்னைப் பார்த்து என்ன வார்த்தை சொன்னான் தெரியுமாப்பா. அவனை...” எனும்போது,

“அடி வச்சேன்னா பாரு. அடுத்தவாரம் கல்யாணத்தை வச்சிக்கிட்டு என்ன பேச்சி பேசுற நீ. அப்பா பொண்ணு ரெண்டு பேருக்குமே அறிவில்லாமல் போயிருச்சி. நீ பண்ற தப்பு உன் தங்கையை பாதிக்கும்னு நினைப்பு வேண்டாம். வாயை மூடிட்டு ஒழுங்கா மணமேடையில் உட்கார்ற வழியைப்பாரு. இனிமேல் எதாவது அபசகுனமா பேசின உன்னைக் கொன்னுருவேன்” என்று அதட்டினார் சுபாஷிணி.

“இந்தக் கல்யாணம் பண்றதுக்கு நீங்க சொன்னதையே செய்யலாம். எனக்கு அவனைப் பிடிக்கலம்மா. என்னை எவ்வளவு இளக்காரமா பார்க்கிறான் தெரியுமா? என்ன வார்த்தை சொல்லி கூப்பிட்டான் தெரியுமா? உங்களுக்கென்ன அண்ணன் பையன்ற பாசத்துல, உங்க பொண்ணை பிடிச்சி தள்ளி விடுறீங்க” என தன் பங்கிற்கு கத்தினாள் கார்த்திகா.

“அப்படின்னா அந்த டைம் வார்த்தைகளை யோசிச்சி, குறைச்சி பேசியிருக்கணும். அத்தனை பேர் முன்னாடியும் உண்மையை சொன்னது யாரு.. நானா? அவன் நல்ல பையன்தான். இந்தக் கல்யாணம் எல்லா வகையிலும் எல்லாருக்கும் நல்லதுதான். உன்னையும் சேர்த்து.”

“எனக்கு எந்த நல்லதும் வேண்டாம்மா” என்றவள் குரல் வீராப்பாக ஒலித்தது.

“அடிச்சேன்னா பாரு.” அவளை அடிக்க கை ஓங்கியவர், “உன்னை மட்டும் நினைக்காம உன் தங்கையை நினைச்சிப் பாரு. இப்படி ஒரு விஷயம் வெளியில போனா அவளை யார் கல்யாணம் பண்ணிக்க வருவாங்க? இல்ல அவனோட தங்கை வித்யாவுக்குமே யார் வருவாங்க? தப்பு நடந்திருச்சி அதுக்காக அதையே பிடிச்சி தொங்கிட்டிருக்கணும்னு எதுவும் இல்லையே. போய் ஒழுங்கா கல்யாணப் பொண்ணா லட்சணமா இருக்கப் பாரு. நீ என்னதான் குட்டிக்கரணம் அடிச்சாலும் இந்தக் கல்யாணம் நடந்தே தீரும்” என்றார் கறாராய்.

‘அந்த குரங்குக்காக (தங்கை கீர்த்திகா) நான் ஏன் அவனைக் கட்டிக்கணும். தப்பு அவன் செய்வான். தண்டனை நான் அனுபவிக்கணுமா? எந்த ஊர் நியாயம் இது. இல்ல அதெல்லாம் முடியாது.’ மனம் முரண்டியது கார்த்திகாவிற்கு.

“ம்... எல்லாம் நம்ம ஊர் நியாயம்தான். அவங்க என்ன வேணும்னா பண்ணினாங்க. சூழ்நிலை அப்படியாகிருச்சி. அதை ஊரே வேடிக்கையும் பார்த்திருச்சி. அதை பத்தை நூறாக்கி ஊருக்கே பரப்பியும் விட்டுருச்சி. இனி வேற ஒருத்தன்கிட்ட உன்னைக் குடுத்தா சந்தேகப்பட்டே உன்னை சாகடிக்கமாட்டானா. பேசாம அம்மா சொன்னதை கேட்டு கல்யாண லைஃபை என்ஜாய் பண்ணுக்கா.” பெரியவளாய் மாறி அட்வைஸ் மழை பொழிந்தாள் கீர்த்திகா.

கீர்த்திகா கல்லூரி இரண்டாமாண்டு மாணவி. சுபாஷின் தங்கை வித்யாவோ மூன்றாமாண்டு மாணவி. கல்லூரி முடிய இன்னும் ஒன்றிரெண்டு மாதங்களே இருக்கிறது. இருவரும் ஒரே கல்லூரியில் படிப்பதால் குடும்பப் பகை தாண்டி அவர்களுக்குள் ஒரு நட்பிருந்தது. கார்த்திகா இது எதையும் அறிந்திருக்கவில்லை. அவள் அறிந்ததெல்லாம் குடும்பப் பகை ஒன்றுதான்.

“அவளை ரொம்ப கட்டாயப்படுத்தாத சுபா. அவன் நம்ம எதிரி பையன்றது உனக்கு தெரியும்தான?” என்ற கணவரிடம்,

“அது உங்களுக்கு மட்டும்தான். எனக்கும் உங்க பகைக்கும் எந்த சம்பந்தமுமில்லை” என்றார் நேராகப் பார்த்து. தணிகாசலத்திற்கு தணிந்து செல்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை.

“அம்மா.. அப்பாவுக்கு எதிரினா, நமக்கும்தானம்மா?” எதையாவது சொல்லி இந்த கல்யாணத்தை நிறுத்தி விடமாட்டார்களா என்ற எண்ணம் கார்த்திகாவிற்கு.

“ஏன் எதிரியா இருக்கணும்? இவங்களுக்குள்ள என்ன பகைன்னு தெரியுமா? தெரியாம எதுவும் பேசக்கூடாது சொல்லிட்டேன்.”

“சுபா அவளுக்குத்தான் பிடிக்கலை சொல்றாள்ல. அப்புறமும் ஏன்?” மனைவியிடம் தணிவாகவே சொன்னார்.

அவரை முறைத்து, “அவனை நேருக்கு நேரா பார்த்து ஒரு பத்து நிமிஷம் பேசினா, இவளுக்கும் பிடிக்கும். அவன் என் அண்ணன் மகன். விட்டுக்கொடுக்குற குணம் அவனுக்கு நிறையவே இருக்கு. ஆனா, அந்த குணம் இங்கிருக்கிற சிலருக்கு எள்ளளவு கூட கிடையாது.” கணவனை ஜாடை பேசி உள்ளே சென்றார்.

அவரோ, ‘ம்க்கும் விட்டுக் குடுத்துட்டாலும், அண்ணனும் தங்கச்சியும் அப்படியே என்னை தலையில தூக்கிவச்சிட்டு ஆடப்போறீங்க. நான் விட்டுருந்தேன்னா இன்னைக்கு என்னோட மனைவியாவா இருந்திருப்ப? உன் அண்ணனுக்கு தங்கையா மட்டும்தான் இருந்திருப்ப’ என்றார் மனதினுள்.

“அப்பா! ஹெல்ப் பண்ணுங்கப்பா. அந்த சுப்பு எனக்கு வேண்டாம்பா” என்றாள் கெஞ்சலாக.

“அட நீ வேற ஏன்மா? சும்மா சும்மா அப்பா அப்பான்னுட்டு எரிச்சலைக் கிளப்புற.” தன் எரிச்சலை மகளிடம் காண்பித்து அவர் கிளம்பினார்.

“ச்சே.. இவங்களைப் போய் நம்பினேனே என்னைச் சொல்லணும்” என தலையிலடித்தபடி நகர்ந்தாள்.

“என்ன கார்த்தி மாம்ஸை நினைச்சா இவ்வளவு அழகா வெட்கப்படுற. பாரு முகமெல்லாம் சிவந்திருக்கு. இதுக்குப் பேருதான் கல்யாணக்களையா?”

கிண்டலாக கேட்ட தங்கையை முறைத்து, “ஏய் வேண்டாம்டி. நான் ஏற்கனவே செம கடுப்புல இருக்கேன். மாம்ஸா! அவன் சரியான.. ச்சீ அவனைத் திட்டக்கூட தமிழகராதியில் புதுசா ஒரு வார்த்தை கண்டுபிடிக்கணும்” என மொத்த கடுப்பையும் குரலில் கொண்டு வந்தாள்.

“ஹான்.. கண்டுபிடி கண்டுபிடி.”

“ஹேய் கீர்த்தி எனக்கு ஒரு ஐடியா தோணுது. அதை மட்டும் செஞ்சோம்னு வையி இந்த பிரச்சனையிலிருந்து நான் எஸ்கேப்பாகிடுவேன். சொல்லட்டுமா?” என்றாள் ஆர்வத்துடன்.

“ஆத்தா! மகமாயி! ஆளைவிடு தாயே! நீ என்ன சொல்ல வர்றேன்னு எனக்கு புரியுது. அவங்களை கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் ஒர்த் கிடையாது. அதுக்கான வயசும் எனக்கில்ல. அதுக்கு ஒரே தகுதியான ஆள் நீதான். நானில்லை. கொஞ்சம் உன்னை கலாய்க்கணும்னு பார்த்தா, நீ கால்கட்டையே மாத்துறியே. வெரிபேட்.”

“ச்சீ போடி” என அவளுக்கொரு அடிபோட்டு படுக்கையில் விழுந்தாள். அருகில் வந்த கீர்த்தி, “அவருக்கு என்ன குறைன்னு வேண்டாம்ன்ற அக்கா. பகைதான் காரணம்னு சொல்லாத. வேறெதோ காரணமிருக்கும்னு தோணுது. சொல்லுக்கா அவர் ஆளும் அழகு. நல்ல பெர்சனாலிட்டி. சரி அன்னைக்கு உன்கிட்ட நடந்துக்கிட்டது தப்புத்தான் அதை அவரும் தெரிஞ்சி செய்திடலையே. அப்புறம் ஏன் அவரைப் பிடிக்கலைன்ற?” என்றாள் அக்காவின் மேலுள்ள அக்கறையில்.

“அவன் என்னைவிட கலராயிருக்கான் கீர்த்தி.”

‘அட லூசே! கலராயிருக்கிறது ஒரு பிரச்சனையா?’ என அக்காவைப் பார்த்து கேவலமாக பார்த்து வைத்தாள்.

“என்ன லுக்கு? நீ என்ன நினைக்கிறன்னு புரியுது. எனக்கு கருப்பா இருக்கிற பையன்தான் வேணும். அவன்தான் என்னை கேலி செய்யமாட்டான்.”

“உன்னைவிட உன் புருஷன் கலரா அழகாயிருந்தா பெருமைதானக்கா” என்றாள் அக்காவிற்கு புரிய வைப்பதற்காய்.

“எருமைதான் போ லூசு. அவன் என்னைப் பார்த்து உன்னை மாதிரி கருவாச்சியை என்னால கல்யாணம் பண்ணிக்க முடியாது சொன்னான் தெரியுமா? எனக்கு அவ்வளவு அசிங்கமாகிருச்சி” என்றாள் கோபமாக.

“என்னது கருவாச்சியா?” அதிர்ந்து சத்தம் போட்டு சிரித்து, “வாவ் இன்ட்ரெஸ்டிங். அப்புறம்?” என்றவளுக்கு கதை கேட்கும் ஆர்வம் வந்திருந்தது.

“மண்ணாங்கட்டி!”

“அதெல்லாம் நீயே வச்சிக்கோ. நான் வேணும்னு கேட்கமாட்டேன். பட், நீ கருவாச்சியா? ஹையோ.. ஹையோ அக்கா என்னால முடியல” என விழுந்து விழுந்து சிரித்தவளை, கொலை வெறியில் பார்த்தாலும், ‘இப்படி மத்தவங்க சிரிக்கிற நிலைமையிலதான நாம இருக்கிறோம்’ என தன் விதியை நொந்தபடி அமைதியானாள்.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top