• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
ஓம் சரவண பவ


சொர்ணா சந்தனகுமார்

யாசிக்கிறேன் நின் இதயத்தை


1


IMG-20241104-WA0002.jpg
கோவில் தூணில் சாய்ந்தமர்ந்து சற்றுத் தள்ளி அமர்ந்திருந்த குடும்பத்தினரை வெறித்தபடி பார்த்திருந்தவளின் தோளைத் தட்டி, “யாரைப் பார்க்கிற பூரணி? உனக்குத் தெரிஞ்சவங்களா?” என கேட்டாள் சண்முகி.

“இல்ல சண்மு. அந்த சின்னப்பையன் அழகாயிருக்கான். அதான் ரசிச்சிட்டிருந்தேன்.”

“ரசனையா பார்க்கிறதுக்கும், வெறிக்கிற மாதிரிப் பார்க்கிறதுக்கும் வித்தியாசம் தெரியாமலா இருக்கேன். என்ன விஷயம்னு சொல்லு?”

“குழந்தையைத்தான் பார்த்துட்டிருந்தேன் சண்மு. அப்படியே யோசனை எங்கெங்கோ போயிருச்சி.”

“வேற எதுவும் இல்லையே?” என்றாள் சந்தேகமாக.

“அட இல்லைன்றேன். திரும்பத்திரும்ப கேட்டா என்னன்னு சொல்றது? வேணும்னா பொய்யா ஒரு கற்பனைக் கதை புனைந்து சொல்லவா?” என்று புன்னகைத்தாள்.

“இப்பதான் என் சந்தேகமே வலுக்குது” என்ற தோழியை முறைத்து, “வா போகலாம்” என்று எழுந்தவள், சண்முகி எழுவதற்கும் கரம் கொடுத்து அவள் எழுந்ததும் இருவரும் கோவில் வாசல் வரும் நேரம், தன்னை யாரோ பார்ப்பதுபோல் தோன்ற வேகமாகத் திரும்பிப் பார்த்தாள் பூரணி. அங்கு யாருமில்லை என்றதும் நடக்கவாரம்பிக்க அதே உணர்வு திரும்ப எழ திரும்பிப் பார்த்தாள்.

“யாரும் ஃபாலோ பண்ற மாதிரி ஃபீலாகுதா பூரணி?” என்று தானும் திரும்பிப் பார்த்தபடி கேட்க...

“ம்.. ஆமா சண்மு.”

“ஓ.. சரிவிடு எதாவது பொறுக்கியா இருப்பான். ரோட் சைட் ரோமியோக்களுக்குப் பஞ்சமா என்ன? ஆமா ரோட் சைட் ரோமியோன்னு ஏன் பெயர் வந்தது?” தனது நீண்ட நாள் சந்தேகத்தைக் கேட்டாள்.

“ம்.. ரோடு ரோடா பொறுக்குறதாலயா இருக்கும்.” கடுப்பாக பதிலளித்தாள் பூரணி.

“ஹான்! இருக்கும் இருக்கும்” என்றதில் பூரணி முகம் இன்னும் கடுப்பைக் காண்பிக்க, “சரி சரி விட்டுருறேன். நீ இப்படி அடிக்கடி முறைக்கிறது கடுப்பாகுறதுன்னு செய்.. உன் மூஞ்சிக்கு அதான் அழகாயிருக்கு” என்று வாய் கன்னம் தொடுமளவு இழுத்துப் புன்னகைக்க...

“அடங்கவே மாட்டடி நீ.”

“அடக்கதான் வீட்டுல ஆள் தேடிட்டிருக்காங்க. பேரம் படியலைன்றதால அடக்க வர்றவன்லாம் ஐயோன்னு ஓடிருறான்” என்று கண்சிமிட்டிக் கூறினாள்.

“ஹாஹா உன்மேல அவ்வளவு பயம்.”

“இருக்கலாம். நானோ கொஞ்சம் சுமார் மூஞ்சியா இருக்கேன். அழகும், வசதியும் இல்லைன்னா ஒரு பொண்ணோட நிலை? அதைவிட அவளைப் பெத்தவங்க நிலை? ப்ச்..” என சலிப்பாகச் சொல்ல,

“என்ன நிலை நிலைன்ற? அப்பவும் அதிக நகைபோட்டு நீதான் அவனைக் கட்டிக்கப்போற. அவன் கிடையாது. கலர் கம்மியா இருந்தா அழகில்லைன்னு யார் சொல்றது? கருப்புதான்டி அழகே. கருப்பாயிருந்தாலும் உனக்கிருக்கிற முகலட்சணம் யாருக்கு வரும். என்னையே பாரு உன்னோட கம்பேர் பண்ணினா, கலரைத் தாண்டி அழகுன்னா அது நீதான் சண்மு. என் சண்முவோட அழகைப் பார்த்து அடக்க ஒருத்தன் வராமலா இருப்பான்.”

“ம்க்கும் வந்துட்டாலும் போவியா!” என அலுத்துக்கொள்ள,

“அது எப்படிடா வராமல் இருப்பேன். முருகன் வள்ளியைத் தூக்கின மாதிரி, கூடிய சீக்கிரமே வந்து உன்னைத் தூக்குறேன்டா” என்ற குரலில் நடந்து கொண்டிருந்த தோழியர் இருவரும் சட்டென்று சிரித்தபடி திரும்பிப்பார்க்க, “அவன் உன்னைத் தூக்காமலிருந்தா போதும்டா தினா” என்றபடி இருசக்கர வாகனத்தில் இருவர் செல்ல அவர்களின் பின்பக்கம் மட்டுமே இவர்களுக்குத் தெரிந்தது.

“சண்மு டைமிங் டயலாக். சீக்கிரமே வந்து தூக்குறாப்லயாம்” என்று சண்முகியைச் சீண்டினாள்.

“ஆமாமாம் தூக்க விட்டுட்டு வேடிக்கை பார்த்துட்டு நிற்கிறாங்க. வீட்டுக்குப் போயி வேலையை முடிச்சிட்டு சீக்கிரம் கிளம்பி வா” என்ற சண்முகி பூரணியிடமிருந்து விடைபெற்று தன் வீடு நோக்கி நடந்தாள்.

“இவ்வளவு நேரம் கோவில்ல என்ன பண்ணிட்டிருந்த பூரணி? இப்படி ஆடி அசைந்து வந்தா வீட்டு வேலையை யார் பார்ப்பாங்க? அவசர அவசரமா பார்த்துட்டு கடைக்குப் போகணும்னு வேற நிற்ப” என்று அதட்டினார் தாய் மைதிலி.

“அம்மா எப்படியும் எந்நேரமானாலும் நான்தான. பார்க்கப்போறேன். நீங்க அங்கயிங்கன்னு நடமாடாம அமைதியா உட்காருங்க. ஆமா அப்பா எங்க?” என்றாள் அவர் வேறெதுவும் பேசுமுன்.

“கோழிப்பண்ணையில் இருக்காங்க. முட்டை எடுக்க ஆள் வந்திருக்காங்கன்னு நினைக்கிறேன். இப்ப வந்திருவாங்க. அதுக்குள்ள நீ சமையலை முடி.” சாய்ந்து நடக்கும் தன் பாதங்களை மெல்ல நகர்த்தி சுவற்றைப் பிடித்தபடி ஹாலிற்கு சென்று தரையில் அமர்ந்தார்.

அடுத்த முக்கால்மணி நேரத்திற்கெல்லாம் சமையலை முடித்துத் தனக்கு காலைக்கும் மதியத்திற்குமான உணவை டிபன் பாக்ஸில் அடைத்து, சைக்கிள் சாவியையும், கடைச் சாவியையும் எடுத்து வெளியே வர, “என்ன பூரணி கிளம்பிட்டியா? நான் சொன்ன விஷயம் என்னாச்சி? நானே வந்துதான் கேட்கணுமா? நீயா சொன்னா குறைஞ்சி போயிருவியா?” கேள்விகளை அடுக்கியபடி வந்தாள் பூரணியின் அக்கா ஜனனி.

காலையிலேயே தாய் வீட்டில் விடச்சொல்லி கணவனை இழுத்து வந்து, அவனை வீட்டினுள் நுழையவிடாமல் அனுப்பியும்விட்டாள்.

“நீ என்ன சொன்னன்றதே எனக்கு ஞாபகமில்லைக்கா. நைட் வரை காத்திருந்து சொல்ல முடியும்னா சொல்லு. இல்லையா இதோட விட்டுரு” என்று சைக்கிளில் ஏறிச்சென்றுவிட்டாள்.

“சொந்த சம்பாத்தியம்ன்றதால ரொம்பதான் ஆடுறா உங்க சின்னப்பொண்ணு.” தாயிடம் தன் கோபத்தைக் கொட்டி, “சமையல் முடிச்சிட்டாளா? பசிக்குதும்மா” என சாப்பிடவே வந்தாற்போல் கிச்சனுக்குள் சென்றாள்.

சைக்கிளில் சென்றவளுக்கோ தன் குடும்பப் பிரச்சனைகளுடன் காலையில் பார்த்த சில வேண்டாத முகங்கள் கோபத்தைக் கொடுத்தது. ‘அந்தக் குடும்பம் இங்க எப்படி? ஒரு பெண்ணுக்கு துரோகம் பண்ணிட்டு குடும்பமே நிம்மதியாயிருக்கு. ஜெயில்ல களி திங்க வேண்டிய கேஸ்ங்க எல்லாம் கடவுளைத் தேடி வந்திருக்கு. கடவுளே இன்னுமே அவங்களுக்கு ஆசீர்வாதம் செய். இன்னுமின்னும் அடுத்தவங்களைக் கெடுக்கட்டும்.’

மனதிற்குள் புலம்பியபடி ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள தங்கள் கடைக்கு வந்து சைக்கிளை ஓரங்கட்டி, பூட்டைத் திறந்து ஷட்டரைத் தூக்க, அந்நேரம் சண்முகி வந்து உதவி செய்ய முதலில் கடையைப் பெருக்கி சுத்தம் செய்து சாமிக்கு அகர்பத்தி காண்பித்து வணங்கி அமர்ந்தார்கள்.

‘பி.எஸ் மருந்தகம்!’ தொள்ளாயிரம் சதுர அடியில் கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் அது. அருகே பிரபல ரோஜா மருத்துவமனை இயங்கிக் கொண்டிருக்கிறது. மருத்துவமனைக்கும் மருந்தகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் கிடையாது. ஆனால், இருவருக்குமிடையே வியாபார ரீதியான தொடர்புண்டு. மருத்துவமனை பில்கள் எல்லாம் வருவது பி.எஸ் மருந்தகத்திற்கே!

இன்னொரு தொடர்பு மருத்துவமனையும், மருந்தகமும் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஒரே நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

பூரணியும் சண்முகியும் டி.பார்ம் முடித்த கையோடு அரசு வேலைக்கு முயற்சித்தபடி, ஒரு தனியார் மருத்துவமனையிலுள்ள மெடிக்கலில் சண்முகியின் அப்பா சண்முக சுந்தரத்திற்குத் தெரிந்தவர் மூலம் சிபாரிசு பிடித்து சேர்ந்திருந்தார்கள். சிலபல சோதனை நிறைய யோசனைக்குப் பின்னர் இருவரின் முதல் எழுத்திலும் ஆரம்பித்ததுதான் பி.எஸ் மருந்தகம்.

ஒருசில நேரத்தைத் தவிர மற்றைய நேரங்கள் யாவும் சுழலும் பம்பரங்கள்தான் அவர்கள். இரவு பத்துப் பதினோரு மணிவரை மருந்தகத்திலேயே நேரம் போய்விடும். இடையில் பூரணி சென்று சமையல் செய்து திரும்பவும் மருந்தகம் வர என வேலைப்பழு அதிகமானதால், சமீபமாகத்தான் வினோத் என்ற பையனைச் சேர்த்திருக்கிறார்கள்.

அதுவும் மாலை ஆறுமணி முதல் இரவு பதினோரு மணி வரை மட்டுமே அவன் இருப்பான். தனியார் மருத்துவமனை ஒன்றில் இதே வேலையில் வினோத் இருப்பதால் இந்த நேரமாற்றம். அதன்பின் கடையை மூடி பூரணி வீட்டில் சாவி கொடுத்ததோடு அவன் வேலை முடிந்துவிடும். தேவைப்பட்டால் அங்கு விடுமுறை விட்டு இங்கு வருவான். அங்கு விடுமுறையெனில் பகலிலும் இங்கே வருவது அவனின் வழக்கம்.

பூரணி, சண்முகி இருவரும் இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு செல்வதாக ஏற்பாடு. அதிக வேலை நாளில் பூரணி உடனிருந்து சண்முகியை வீட்டிற்கு அனுப்பிவிடுவாள். இதோ காலை ஒன்பது மணிக்கெல்லாம் மருத்துவமனையும், மருந்தகமும் சுறுசுறுப்பாக இயங்க ஆரம்பித்தது.

“என்னடா பொண்ணு பிடிச்சிருந்ததா? பக்கத்துல வச்சிப் பார்க்க பொண்ணோட அப்பா அனுமதிக்கலை. இல்லைன்னா வீட்டுக்கே போய் நிதானமாப் பார்த்துட்டு வந்திருக்கலாம். இப்ப தேவையில்லாம இருபது கிலோமீட்டர் தள்ளி உள்ள கோவிலுக்கு வரவழைச்சிட்டாங்க. இதுல அப்பாவுக்குத் தூரத்து சொந்தமாம்” என அங்கலாய்த்து, “உனக்கு சம்மதம்னா சொல்லுவியாம். மேற்கொண்டு பேசலாம்னு அம்மா சொல்றாங்க?” என்று தங்களை அலைய வைத்ததற்கு தம்பியிடம் பாய்ந்தான் சுவீகரன்.

“ஏன்? தம்பிக்காக ஒருநாள் அலைய மாட்டியா? அவ்வ்வளவு டைட் பிசினஸ்மேனோ?”

“டைட்டோ, லூஸோ நீ என்ன சொல்ற?” என நிற்க,

“நான் பார்த்த பெண்ணை பிடிச்சிருந்தது” என்று சற்று அழுத்தமாகச் சொன்னான் வசீகரன்.

“நிஜமாவாடா? ஷப்பா!” என ஆசுவாச மூச்சுவிட்டு, “அம்மா என் வேலை முடிஞ்சது. உங்க சின்னப் பையனுக்கு சம்மதமாம்.” அடுப்படியிலிருந்த தாய்க்குக் கேட்கவென்று கத்தி சொன்னான்.

வேகமாக உள்ளிருந்து ஹால் வந்த ஆனந்தி, “எப்படான்னு காத்துக்கிட்டிருக்கேன். கரன் அப்பாவைக் கூப்பிடு. நாளைக்குப் பொண்ணு வீட்டுல போய்ப் பேசிட்டு வர்றோம்” என்றார்.

“வசீ இன்னைக்குப் பார்த்த பெண்ணை நிஜமாவே பிடிச்சிருக்கா?” சுவீகரனின் மனைவி ஐஸ்வர்யா கேட்க,

“நிஜமாவே நான் பார்த்த பெண்ணைப் பிடிச்சிருக்கு அண்ணி” என்றதில் ஐஸ்வர்யாவின் முகம் மாற, அதைக் கவனியாது தன் அறைக்கு சென்று கட்டிலில் விழுந்தவன் மனமெல்லாம் இன்று பார்த்த பெண் மீதே!
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
கிட்டத்தட்ட ஆறு மாதங்களாய் திருமணம் செய்யக்கேட்டு அவன் மறுக்க, அவர்கள் கேட்க என ஆட்டம் காட்டி, இரண்டு நாட்கள் முன்தான் திருமணத்திற்கான தன் சம்மதத்தைத் தெரிவித்திருந்தான்.

அதற்காகவே காத்திருந்தாற்போல் உடனடி பெண்பார்க்கும் படலம் செய்தாகிவிட்டது. தந்தை வழி பெண் என்றாலும், வீட்டிற்கு அவர்களை வரவழைக்காமல் கோவிலில் வைத்துப் பார்க்கலாம் என்று பெண்ணின் தந்தை சொல்ல, அதில் சற்று கோபம்தான் வசீகரன் வீட்டினருக்கு. ஒருசில காரணங்களால் இறங்கிச் சென்றார்கள் எனலாம்.

“வசீ அதோ அவள்தான் பொண்ணு” என்று கொழுந்தனுக்குக் பெண்ணைக் காண்பித்துக் கைநீட்டுகையில், மடியிலிருந்த மகன் கிருஷ்கரன் தாயை எதற்கோ அழைக்கவும் அவனுக்குப் பதில் சொல்லத் திரும்பினாள் ஐஸ்வர்யா. கோவில் நுழைந்ததுமே மருமகளிடம் பெண்ணைக் காண்பித்த ஆனந்தி, சின்ன மகனுக்கு அவளைக் காட்டச் சொல்லிவிட, சரியென்று தலையாட்டியிருந்தாள்.

அவள் கைநீட்டிய திசை நோக்கிப் பார்த்தவனின் கண்களில் விழுந்தாள் அப்பெண். தான் பார்த்த நொடி அவளின் தன் மீதான பார்வை வேறுபுறம் மாறியதோ! சந்தேகத்தில் பார்வை அவள் மீதே நிலைத்திருக்க, அவளோ அருகிலிருந்த பெண்ணிடம் மென்புன்னகையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.

“பார்த்துட்டீங்களா வசீ?” என்று தன் கை நோக்கியிருந்த பெண்ணைக் கண்டு மனதிற்குள் ‘ஐயோ’ என்றலறி, “அதோ அந்த எல்லோ சுடிதார் பொண்ணு வசீ” என்று வேகமாகச் சற்றுத் தள்ளியிருந்த பெண்ணைக் காண்பித்தாள்.

அண்ணியவள் கையை மாற்றி இன்னொரு பெண்ணைக் காட்டியதும் அவன் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாய்த் தெரிய, ஏதோ சொல்ல வந்து வாய் மூடியவன் அப்பெண்ணைப் பார்த்து சடுதியில் திரும்பியவனுக்கு, முதலில் பார்த்த பெண்ணின் மீதே கண்களும் மனமும். ஏனோ அவளும் தன்னைப் பார்ப்பதுபோல் ஒரு தோற்றம் அவனுள். ‘இது தன் எண்ணமா! பிரமையா! இல்லை உண்மையா!’ தெரியவில்லை அவனுக்கு.

ஐஸ்வர்யாவின் “பிடித்திருக்கா?” என்ற கேள்வியில் மையமாய் தலையாட்ட, “ஆனா, வசீ...” என ஏதோ சொல்ல வந்தவள், அவன் முதலில் பார்த்தப் பெண்ணைக் கனிவோடு பார்க்கையில் பெருமூச்சொன்று எழுந்தது.

“என்ன அண்ணி?”

“ப்ச்.. ஒண்ணுமில்லை” என்றவள் குரலில் ஏதோ ஒரு ஏமாற்றம். அதைக் கவனிக்காது எதிரிலிருந்தவள் அங்கிருந்து நகரும் வரை பார்த்தபடியிருந்தான் வசீகரன்.

இதோ வீட்டில் கேட்கவும் அப்பெண்ணை மனதில் கொண்டே சம்மதித்துவிட்டான். யாரென்றே தெரியாத பெண்ணை நினைப்பது தவறென்று மனசாட்சி உரைக்க, இன்று தனக்காகப் பார்த்த பெண்ணை மனக்கண்ணில் கொண்டுவர, அதில் முழுவதும் தோற்றுத்தான் போனான்.

‘டேய் பொண்ணு முகம் கூட ஞாபகம் வரலை. அவங்களோட கல்யாணமாம். நல்லா பொண்ணு பார்த்த போ. நீ பொண்ணு பார்த்த லட்சணம் மட்டும் வெளியில தெரிஞ்சது...’ தன்னைத்தானே எண்ணி சிரிக்கத்தான் தோன்றியது வசீகரனுக்கு.

இரவு எட்டு மணிக்கெல்லாம் வீடு வந்தவளைப் பிடிபிடியென்று பிடித்துக் கொண்டாள் ஜனனி.

சில நிமிடங்கள் பொறுத்தவள் முடியாமல், “அக்கா நைட் சமையல் செய்தியா?” எனக்கேட்க,

“இல்லையே. எப்பவும் நீதான பண்ணுவ. அப்புறம் ஏன் என்னைக் கேட்கிற?” என்றாள் புரியாது.

“தெரியுதுல்ல. அப்புறம் ஏன் வந்ததும் வராததுமா போட்டுப் படுத்தி எடுக்கிற? உட்கார்ந்து டிவி பாரு. நான் வேலையை முடிச்சிட்டு வர்றேன்” என்றவள் கால் கையைக் கழுவி நைட்டியை மாற்றி அடுப்படி செல்ல, பாத்திரம் கழுவுமிடத்திலுள்ள அத்தனை பாத்திரங்களும்; அவளுக்குத் தன் இருப்பைக் காட்டியது.

ஏதோ ஒரு கோபம் பெற்றவர்கள் மீதும், உடன் பிறந்தவள் மீதும். சில நொடிகள் கண்மூடி அனைத்தையும் ஜீரணித்து கோபம் அடக்கி வேகவேகமாகப் பார்த்திரங்களைத் தேய்த்துக் கழுவி அதை அடுக்கி, சாதத்திற்கு அரிசி கழுவி அடுப்பில் வைத்து, உலை கொதிப்பதற்குள் குழம்பிற்குத் தயார் செய்து மற்றொரு பகுதியில் வைத்தாள். சாப்பாடு வடிக்கையில் குழம்பு கொதித்துக் கொண்டிருக்க, அதற்குள் துவைத்த துணிகளை மடித்து அங்கிருந்த மர அலமாரியில் அடுக்கி, வீடு பெருக்க ஒன்பதரைக்கும் மேலாகிவிட்டது.

அதன்பின் சாப்பாடு எடுத்து வைக்க, “கர்ப்பமாயிருக்கிற பொண்ணுக்கு இப்படி நேரங்கெட்ட நேரத்தில் சாப்பாடு தர்ற? என் ஹஸ்பண்டுக்கு மட்டும் இது தெரிஞ்சது...” என்று தங்கையைத் தாளிக்க...

“ப்ச்.. இப்ப என்ன பனிரெண்டு மணிக்கா தந்துட்டாங்க. இப்படிப் புலம்புறவ அப்பவே சமையல் செய்து சாப்பிட்டிருக்கலாம்ல?” என்றார் அவர்களின் அப்பா மலையரசன்.

மலையரசன் எப்பொழுதாவது ஒரு முறைதான் சின்ன மகளுக்கு ஆதரவாக இப்படி நியாயம் பேசுவார். வெகு அரிதான இந்நிகழ்வை விரல் எண்ணிக்கையில் அடக்கிவிடலாம்.

அதை எண்ணி சிறு இகழ்வுப் புன்னகை மட்டுமே பூரணியினுள்.

உணவு முடித்ததும் பாத்திரம் தேய்த்துப் படுக்கை விரித்துப் படுத்தவளிடம் வந்த ஜனனி, “நான் பேசணும் சொன்னேன்ல பூரணி? நைட் பேசலாம்னு சொல்லிட்டு படுத்தா என்ன அர்த்தம்?” என்றாள் கோபமாக.

“அக்கா ப்ளீஸ். ரொம்ப டயர்டாயிருக்கு. இப்பவே பதினொண்ணாகப் போகுது. நீயுமே டிராவல் பண்ணின அலுப்பு இருக்கும். அதோட மாசமாயிருக்கிற பொண்ணு இவ்வளவு நேரம் முழிச்சிட்டிருக்கிறது சரியில்லை. போய்த் தூங்குக்கா. காலையில சீக்கிரம் எழுந்துக்கணும்” என்றாள் தூங்கச் சொல்லிக் கெஞ்சிய மனதையும் உடலையும் நினைத்து.

“காலையில நீ கிளம்புறப்ப நான் தூங்கிட்டிருப்பேன். அப்புறம் பேசவே முடியாது. முதல்ல எழுந்திரு பேசிக்கலாம்” எனவும் சிறு எரிச்சலுடன் எழுந்தமர்ந்து, “என்ன பிரச்சனை ஜனனி?” என்றாள் கடுப்பாக.

“என் ஹஸ்பண்ட் ஒரு வரன் கொண்டு வந்திருக்கார். பையன் இ.பில வேலை பார்க்கிறானாம். அப்படி இப்படின்னு நிறைய வருமானம் வர்ற வேலை. அங்கேயே குவாட்டர்ஸ் தந்திருவாங்க. கரண்;ட்டிலிருந்து எல்லாம் ஃப்ரீ. உன் லைஃப் ப்ரைட்டாயிருக்கும்” என்றாள் தனக்கே கிடைத்தாற்போல்.

“கரண்ட்ல கைவைச்சா ப்ரைட்டா இருக்காது ஜனனி, ஷாக்தான் அடிக்கும். சம்பளத்தோட கிம்பளமும் வாங்குறவன்னு நீயே சொல்ற. நாம சம்பாதிக்கிறதே நமக்கு நிற்கிறதில்லை. இதுல அடுத்தவனை ஏய்த்து வாங்கி... ச்சே.. ஏன் உன் புத்தி இப்படிப் போகுது?” கோபத்தில் பல்லைக்கடிக்க,

“பழைய பஞ்சாங்க கதை பேசாத பூரணி. காலத்துக்கு ஏத்தாப்ல நாமளும் மாறிக்கணும். கலிகாலத்துல பாவம் புண்ணியம்னு எதுவும் கிடையாது. அதிலும் உன் நிலையையும் கொஞ்சம் யோசிச்சிக்கோ” என்றவள் குரலில் சற்று ஏளனம் இருந்ததோ!

‘என்ன என் நிலை? கை கால் ஊனமா? இல்லை கண்ணு குருடா? இல்ல நான் பெண்ணில்லையா?’ கேட்கத் தோன்றிய மனதை அடக்கி, “நீ பார்த்திருக்கிற மாப்பிள்ளைப் பையனுக்கு எத்தனை வயசு?” சகோதரியைப் புரிந்தாற்போல் ஆழ்ந்து பார்த்தபடி கேட்டாள்.

“பையனா? அவருக்கு முப்பத்தேழு வயசுடி” என்று சிரிக்க, பெற்றோர்களோ அதில் தலையிடாது வேடிக்கை பார்த்திருக்க, பூரணிக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

“நீயே பையன் கிடையாது ஆளுன்னு சொல்ற. அந்தாளை நான் எப்படி? அதை விடு. அந்தாளுக்கு நான் இரண்டாவதா? மூன்றாவதா?”

“இரண்டாவதுதான். அவர் பொண்டாட்டி சமீபத்துலதான் இறந்திருக்காங்க” என்றாள் எந்தவித சங்கோஜமும் இல்லாமல்.

“பொண்டாட்டி செத்ததும் அந்தாள் புதுமாப்பிள்ளையாக என்னைப் பலியிடப்போற அப்படித்தான?” என்றாள் கோபத்தை அடக்கி.

“அவரைப்பற்றி நல்லவிதமாதான்டி பேசுறாங்க. உன்னைக் கல்யாணம் செய்துக்கிட்டா அவருக்கும் ஒரு சப்போர்ட். உனக்கும்தா...”

“நிறுத்துறியா” என அதட்டி, “யாருக்கு சப்போர்ட்னு அந்தாளுக்கு நீ சப்போர்ட் செய்யுறதிலிருந்தே தெரியுது. எனக்கு யாரோட சப்போர்ட்டும் வேண்டாம். கல்யாணமும் வேண்டாம். ஆளை விட்டா போதும் ஜனனி. இனி இதுமாதிரி பேசிட்டிருக்காத சொல்லிட்டேன்.” சற்று அழுத்தமாகவே சொன்னாள்.

“சரி அந்த இடம் இல்லைன்னா விடு. நெக்ஸ்ட் ஒரு வரன் இருக்கு. வயசு இருபத்தொன்பதுதான். என் ஹஸ்பண்டுக்குச் சொந்தம். அவரைப் பேசலாமா?”

“எனக்குக் கிறிஸ்துவப் பையன் வேண்டாம்” என்றாள் பட்டென்று.

“மறுக்கிறதுக்குக் காரணம் தேடாத பூரணி. உனக்கு நல்லது செய்யணும்னுதான் நினைக்கிறோம்” என்ற ஜனனியின் பேச்சுக்கும் நடப்பிற்கும் சம்பந்தமில்லாமல் இருக்க,

“நீங்க செய்த நல்லதெல்லாம் போதும் தாயே! இப்ப நல்லாதான் இருக்கேன். இந்த வாழ்க்கை கடைசிவரை நிலைச்சிருந்தாலே போதும்.”

“ஒரு பொண்ணுக்குக் கல்யாணம் முக்கியம் பூரணி. உன்னை நினைச்சி அம்மா எவ்வளவு ஃபீல் பண்றாங்க தெரியுமா? நீ என்னடான்னா விதண்டாவாதம் பேசிட்டிருக்க” என்று தங்கையை முறைத்தாள்.

“அம்மா! எனக்காக.. ஃபீல்... ஹாஹா போ ஜனனி. ஸ்ஸ்.. இல்லையில்ல ஜாஸ்மின். போய் உன் புருஷனைக் கவனி. இப்படியே பேசிட்டிருந்த அவருக்கு வேற கல்யாணம் பண்ணி வச்சிருவேன். ஏதோ புண்ணியம் செய்திருக்க. அதனாலதான் இவ்வளவு தகிடுதத்தம் பண்ணியும் மனுஷன் நல்லவரா கிடைச்சிருக்கார். அவரோட நிம்மதியா வாழப்பாரு” என்றாள்.

“இவளைப் பார்த்தீங்களாம்மா? இவ்வளவு நேரம் எடுத்தெறிஞ்சி பேசினவ இப்ப என்னன்னா எங்களைப் பிரிக்கப் பார்க்கிறா” என்று அழ ஆரம்பிக்க,

தாய் பேசுமுன், “நீயே சொல்லு ஜாஸ்மின்.. அந்த இ.பிகாரன், சொந்தக்காரன்லாம் உன் ஹஸ்பண்ட் எனக்காகச் சொன்னவங்களா?” என்று அழுத்தமாகக் கேட்க,

“யார் சொன்னா என்ன... எல்லாம் உனக்காகத்தான?” என்று மழுப்பல் பதிலளித்தாள் ஜனனி.

“ஜனனி! ஏற்கனவே உடல் அசதியாயிருக்கு. இதுல நீ வேற என்னைப் போட்டு...” என நிறுத்தி பின், “கடவுள் கணக்குல எனக்குக் கல்யாணம் நடக்குறதாயிருந்தா அதை யாராலும் தடுக்க முடியாது. எதுவாயிருந்தாலும் அப்பப் பார்க்கலாம். போய்த் தூங்கு” என்று பாயில் படுத்து போர்வை எடுத்து இழுத்து மூடிக்கொள்ள, பெற்றவர்கள் ஹாலில் படுக்கச் சென்றார்கள்.

“ஏய் பூரணி! ஏய்..” எந்தப் பதிலும் இல்லாமல் போக, அந்த அறையை விட்டு வெளியே வந்தவள், “அம்மா என்ன பொண்ணு பெத்து வச்சிருக்கீங்க? எதுக்கும் அசைவேனான்றா. நான் முடிஞ்சவரைப் பேசிப் பார்த்துட்டேன். இனிமேல் மாப்பிள்ளை பாரு அப்படி இப்படின்னு சொன்னா கொன்னுருவேன்” என்று தங்கையின் மீதுள்ள கடுப்பைத் தாயிடம் காட்டினாள்.

“அதுக்காக இப்படியே வச்சிட்டிருக்க முடியுமா ஜனனி? ஊர்ல பலவிதமா பேச்சு வருதுல்ல. சரி விடு உங்க பெரியப்பா பொண்ணு கல்யாணம் முடிஞ்சதும் பார்த்துக்கலாம்” என்றார்.

வெளியே பேசுவது உள்ளே படுத்திருந்தவளுக்குக் கேட்க, அவர்களை நினைத்து சிரிப்புதான் வந்தது. உண்மையான அன்பிலோ, அக்கறையிலோ இப்பேச்சுகள் எழவில்லை. ஊர் என்ன பேசும்? அதிலும் மகளுக்குச் செய்யும் திருமணத்தில் தங்களுக்கு எதாவது ஆதாயம் இருக்கிறதா என்று மட்டுமே பார்ப்பவர்கள். இதில் இன்னொரு விஷயமாக, ‘என் பொண்ணுங்களை லட்டு மாதிரி பெத்து வச்சிருக்கேன். மாப்பிள்ளையா வர்றவன் நகை போட்டு கட்டிட்டுப் போவான்’ என்ற மலையரசனின் பெருமைப் பேச்சு வேறு.

இதனால் மகளின் மனமும் தன்மானமும் எவ்வளவு பாதிக்கப்படுமென்று அவர்கள் உணரவில்லை. அவர்களின் பாசத்தின் அளவு அவ்வளவே!

ஒவ்வொருவனையாகச் சொல்லி தன்னை ஏலமிடுபவர்களைத் கண்டிக்கவோ தண்டிக்கவோ வழியில்லாமல் கண்கலங்க மட்டுமே முடிந்தது. மனதின் வலியை ஒதுக்கி சின்னப் பெருமூச்சுடன் கண்மூடிக் கொண்டாள் பூரணி.
 
Administrator
Staff member
Joined
Aug 31, 2024
Messages
687
Lovely update baby
Good family mkum .hero avaru
Intha ponna parthutare enna nadakum
பொண்ணு மாத்தி பார்த்தா சண்டை நடக்குமோ?
நன்றி.
 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top