New member
- Joined
- Dec 1, 2024
- Messages
- 4
- Thread Author
- #1
ஹீரா நிலவனின்
அன்பின் ஆழம்
அன்பின் ஆழம்
“அப்பா எனக்குக் கண்டிப்பா லேப்டாப் வேணும். இன்னும் ஒரு வாரத்துக்குள்ள நீ எனக்கு வாங்கித் தர. இல்லனா நான் என்ன பண்ணுவேனு எனக்கே தெரியாது.”
“என்னடா பயமுறுத்துறியா? கொஞ்சமும் யோசிக்கமாட்டியா ஹரீஷ்? உன்னை படிக்க வைக்கவே லட்சக்கணக்குல செலவாகுது. அதுவே கடன்மேல கடன்னு ஏறிட்டேபோகுது. மேலமேல வாங்க முடியாது. கொஞ்சம் அப்பா சூழ்நிலையையும் புரிஞ்சிக்கோடா. இப்ப கழுத்தை நெறிக்கிற அளவு கடன் இருக்கு. இன்னும் வாங்கினா தாங்கமாட்டேன். இருக்கிறதை வச்சி படிப்பா.”
“என்னப்பா கதை சொல்லிட்டிருக்க. எல்லாருமே லேப்டாப் வச்சிருக்காங்க. என்னிடம் மட்டும் இல்ல. அவனவன் இதையே வாங்க முடியலனு கேவலமா பார்க்கிற பார்வையே ரொம்ப அவமானமாயிருக்கு.”
“அவங்கவங்க வசதிக்கு வாங்கிக்கறாங்க. நாம நமக்கு வசதிப்படுறப்ப வாங்கிக்கலாம். அடுத்தவங்கள பார்த்தா அவமானம்தான் மிஞ்சும். நீ அப்பா, அம்மாவைப் பாரேன்டா.”
“உன் லாஜிக்கை கேக்குற மனநிலையில நான் இல்லப்பா. படிக்கிறதுக்குதான கேக்குறேன். கண்டதுக்கும் கேக்கலையே. பெத்த புள்ளைக்கு செய்ய முடியலனா எதுக்காக பெத்துக்கறீங்க? கோபத்தில் கத்தியவன், ‘ஆ’ என்ற அலறலோடு கன்னத்தைப் பிடித்து, “ஏன்மா அடிக்கிற? நான் என்ன தப்பா கேட்டேனு அடிச்ச?” என்றான் அதிகபட்ச கோபத்தில்.
“நீ தப்பா கேக்கலடா. நாங்கதான் தப்புப் பண்ணிட்டோம். பக்கத்துல இருக்கிற கவர்ன்மெண்ட் காலேஜ் சேர்க்காம, ஒரே பையனுக்கு இன்னும் நல்ல படிப்பைக் குடுக்கனும்னு தகுதிக்கு மீறின காலேஜ்ல படிக்க வைக்கிறோம்ல எங்களை சொல்லனும்.”
“படிக்க வைக்கிறது உங்க கடமை. அதைச் செய்ய ஏன் அலுத்துக்கறீங்க?”
“ஓ... கடமை? அப்ப உன் கடமையை நியாபகப்படுத்தவா.. மகனுக்கான கடமை என்னென்னனு?”
“சும்மா பேசிட்டே இருக்காதம்மா. எனக்கு லேப்டாப் வேணும்னா வேணும்தான். இல்ல முடியாது இப்ப என்னிடம் பணம் இல்லனு எதாவது காரணம் சொன்னா, உங்க பையன் உங்களுக்கு இருக்கமாட்டான். முடிவு உங்க கையில. நான் தூங்குறேன்” என்று பொதுவில் சொல்லிவிட்டு வராண்டாவில் பாய்விரித்து படுத்துக்கொண்டான்.
அவனது பெற்றோரோ மகன் அள்ளித்தெளித்த வார்த்தையின் வலிதாளாமல் அதிர்வில் அப்படியே நின்றிருந்தனர். மனதே ஆறவில்லை அவர்களுக்கு. ஆசையாசையாய் பெற்று வளர்த்த மகனின் வாயிலிருந்து இப்படிப்பட்ட வார்த்தை வந்ததில் பாதி செத்துவிட்டனர்.
வந்த அழுகையை வாயை மூடி அழுத விஜயா கணவனின் கண்ணீர் கண்டு துடித்துப்போனார். யாரும் யாரிடமும் ஆறுதல் சொல்ல முடியா நிலை. தாயின் தேம்பல் சத்தம் மகன் காதில் கேட்கிறதுதான். தன் பிடிவாதத்திலிருந்து இறங்கினால் கேட்டது கிடைக்காது என்ற எண்ணத்தில் கண்ணை இறுக்க மூடிக்கொண்டான்.
இரவெல்லாம் தூக்கமில்லை பெற்றவர்களுக்கு. எங்கே மகன் சொன்னதை செய்துவிடுவானோ என்ற பயம் அவர்களை கலங்கடித்திருந்தது. தங்கள் தூக்கம் கெடுத்து அவனைப் பார்த்துக்கொண்டனர். அவன் ஆழ் உறக்கத்திற்குச் சென்றதும் மகனின் தலைவருடிய விஜயா, “நீ எப்படி எல்லாம் வரனும்னு கனவு கண்டேன். நல்லா படிச்சி வேலைக்குப்போயி உன் அப்பா சுமையைக் குறைப்பனு நினைச்சதுக்கு மாறா, நீ...” சட்டென்று அழுகை வந்தது. கண்ணீர் துடைத்து, “இப்ப என்னங்க செய்யப்போற மாமா? அதை வாங்கவே எழுவதாயிரம் வேனும் சொல்லுறான்.”
“என்ன செய்யனு தெரியல விஜயா. எப்படியும் பணத்தை ரெடி செய்துதான ஆகனும். கிடைக்குதா பார்க்கிறேன்.”
“எப்படி?” அவருக்கு தெரியுமே குடும்ப சூழ்நிலை.
“எப்படியோ கடவுள் மேல பாரத்தைப் போட்டு தெரிஞ்சவங்களிடம் கேட்டுப்பார்க்கிறேன். நாம வாழுறதே இவனுக்காகதான். அவன் அந்த வார்த்தையை சொல்லும்போது மூச்சே நின்னுடுச்சி விஜயா. என்ன வார்த்தை சொல்லிட்டான்” என்று குலுங்கி அழுதவரின் கண்ணீர் கல்நெஞ்சையும் கரைத்துவிடும்.
அப்பொழுதுதான் முழிப்பு தட்டியவனுக்கு, இதுவரை பார்த்திராத தந்தையின் அழுகை சின்னதாய் நெருடினாலும், தன் தேவை பெரிதென கண்திறக்காது படுத்திருந்தான்.
“அவன் சின்னப்பையன்பா. சீக்கிரமே நம்மளை புரிஞ்சிப்பான். ஆம்பளை அழக்கூடாதுனு சொல்லி வளக்கலையா என்ன? கண்ணைத் தொடைச்சிட்டு வேலைக்கு கிளம்பு” என தன் வேதனையை மறைத்து கணவனை சமாதானப்படுத்தி அனுப்பினார் விஜயா.
அடுத்த நான்கு நாட்கள் கண்சிமிட்டும் நேரத்தில் ஓடிப்போக, பணம் கிடைக்காத விரக்தியில் இருந்தார் சத்தியநாதன். சென்னையில் மளிகை கடையில் மாதம் பனிரெண்டாயிரம் சம்பளத்தில் இருப்பவருக்கு செலவுகள் அதைவிட அதிகம் இருக்கும் என்பதை சொல்லவும் வேண்டுமா. இருந்தும் மகனுக்காக குருவிபோல் சேர்த்து தனியார் பள்ளியில் படிக்க வைத்து அவன் தகுதியை வளர்க்க, அவனோ அவரை தாழ்த்திக் கொண்டிருந்தான்.
கடை முதலாளி காலில் விழுந்தும் பார்த்துவிட்டார். ஏற்கனவே லட்சதிற்குமேல் கொடுத்திருப்பதாக சொல்லி, இனி முடியாதென்று மறுத்துவிட்டார். தெரிந்த இடத்தில் வட்டிக்கு கேட்க, அங்கும் மறுப்பு மட்டுமே பதிலாக வந்தது அவருக்கு. “பத்து ரூபாய் வட்டி என்றாலும் பரவாயில்லை” என்றவரிடம், “அதை கட்டும் வசதி உனக்கில்லை என்று நிராகரித்துவிட்டனர்.
சோகத்தில் தாடி வளர்த்து பார்க்கவே என்னவோ போலிருந்த கணவனைக் கண்ட விஜயாவின் இதயம் இரத்தக்கண்ணீர் வடித்தது. “பணம் புரட்ட முடியலனா விட்டுவிடு” என்று சொல்லியும் பார்த்துவிட்டார்.
மகன் சொன்ன வார்த்தையிலேயே நின்றிருந்த சத்தியநாதனோ, எதாவது செய்து மகன் கேட்டதைக் கொடுத்துவிடும் முடிவுடன் இருந்தார்.
“அப்பா பணம் ரெடி பண்ணிட்டீங்களா? காலேஜ் முடிச்சி வந்ததும் நாம போயி வாங்கிட்டு வரலாம்.”
“நாளைக்கு உன் கையில் நீ கேட்டது இருக்கும். நீ காலேஜ் கிளம்பு” என்றனுப்பியவர், “விஜயா தெரிஞ்சவன் ஒருத்தன் ரெண்டாவதுல லேப்டாப் ஒன்னு இருக்கு சொன்னான். மாசம் இவ்வளவுனு குடுத்தா போதுமாம். மாலை வரப்ப கையோட வாங்கிட்டு வரேன்” என்று சட்டையை எடுத்து மாட்டியவர் யோசனையுடனேயே சென்றார்.
“அவன் புதுசுதான் வேணும்னு நின்னான். பழசுனா சம்மதிப்பானா?”
“வேற வழியில்ல. இதையாவது செய்து சமாளிப்போம். நமக்கு புள்ள முக்கியம்.”
“ம்ம்ம்...சாப்பிட்டு போ மாமா” என்று அடுப்படியிலிருந்து கண்டது வெளியே செல்லும் கணவனைதான். பெருமூச்சுடன் வேலையைத் தொடர்ந்தார்.
மாலை நான்கு மணியளவில் கல்லூரி எதிரில் பேருந்திற்காக நின்றிருந்த ஹரீஷை அவன் நண்பன் போனில் அழைக்க, ‘இப்பதான போனான். அதுக்குள்ள என்ன?’ யோசனையுடன் எடுத்தவன், “சொல்லுடா” என்றான்.
“டேய் ஹரீஷ். நம்ம காலேஜ் தாண்டி மூனாவது ஸ்டாப்ல ஒரு போலீஸ் ஸ்டேஷன் இருக்குல்ல. அங்க சீக்கிரம் வாடா.” சற்றே பயந்த குரலில் அழைத்தான்.
“என்னடா சொல்லுற? சித்தி வீட்டுக்கு போறேனுதான அவுட்பஸ்ல போன. எதாவது பிரச்சனையா?”
“பிரச்சனை என்னால இல்லடா. நீ பயப்படுற அளவுக்கு எதுவுமில்ல. எனக்கு தனியா இருக்க ஒருமாதிரி இருக்கு. நீ அவுட்பஸ்ல போறதால உன்னை கூப்பிடுறேன். நீ வா நேர்ல எல்லாத்தையும் சொல்லுறேன்.”
அடுத்த கால்மணி நேரத்திற்கெல்லாம் காவல் நிலையம் வர, அங்கிருந்த நண்பனைக் கண்டவன், “திவா என்னடா?” என்றான்.
வேகமாக வந்து ஹரீஷை அணைத்து விடுவித்தவன், “நான் பஸ்சில் இருந்து இறங்கினதும் ஒருத்தன் என் பேக்கை அடிச்சிட்டு ஓடிட்டான்டா. ஒரு செகண்ட் பயந்து போயிட்டேன். நானும் முடிஞ்சளவு துரத்தி பார்த்தேன் முடியல. அப்ப அங்கிருந்த ரோந்து போலீஸிடம் நடந்ததை சொன்னதும் அவங்க வேகமா ஆக்ஷன் எடுத்து அந்தத் திருடனைப் பிடிச்சிட்டாங்க. இங்க உள்ளதான் வச்சிருக்காங்க. அப்பாட்ட சொல்ல பயம். அதான் உன்னை கூப்பிட்டேன்.”
“நல்லவேளை என் பஸ் வரதுக்குள்ள கூப்பிட்ட. இல்லனா கஷ்டம்டா. வா உள்ள போகலாம்,” நண்பனுடன் காவல் நிலையம் உள்ளே செல்லப்போக, அங்கிருந்த ஏட்டையா வழிமறித்து, “இன்ஸ்பெக்டர் விசாரிச்சிட்டிருக்கார். அவர் கூப்பிட்டா உள்ள போப்பா” என்று நிறுத்தினார்.
‘யார் அந்தத் திருடன்?’ ஒரு ஆர்வத்தில் ஹரீஷ் உள்ளே பார்க்க, இன்ஸ்பெக்டர் அந்தத் திருடனுக்கு விட்ட அடியில் திரும்பிய திருடனின் முகம் பார்த்தவன் அதிர்ந்து நெஞ்சடைக்க, “அப்பா” என்று உச்சரித்தான் சத்தமில்லாமல். உடலெல்லாம் நடுங்கி ஒடுங்கிப்போய் நின்றிருந்த அப்பாவைக் கண்டவன் கண்கள் தன்னாலேயே கலங்கியது.