New member
- Joined
- May 1, 2025
- Messages
- 8
- Thread Author
- #1

தூரம் 06
தாய் வீட்டிற்குச் சென்றிருந்தாள், அனுபமா. எங்கு சென்றாலும், மாடமாளிகையில் வாழும் சந்தர்ப்பம் கிட்டினாலும் கூட, பிறந்த வீடு என்பது யாவர்க்கும் என்றுமே முக்கியமான இடம் தான்.
"அம்மா" என்று தாயை அணைத்துக் கொள்ள, "வா அனு" மகளின் தலையைக் கோதி விட்டார், மங்களம்.
"அப்பா எங்கம்மா?" தந்தையைத் தேட, "அப்பா வேலைக்குப் போயிருக்கார். வரும் போது அகல்யாவ க்ளாஸ் விட்டு கூட்டிட்டு வருவார்" என்றார்.
"சரிம்மா. என்ன சாப்பாடு இன்னிக்கு?" என சமயலறைக்குள் நுழைய, "ஏன்டி சாப்பிடாமலா வந்த? எத்தனை மணியாச்சு பாரேன்" என்று அவர் திட்ட,
"அத்தை சாப்பிட சொன்னாங்க. நான் தான் இங்க வர்றதா சொல்லிட்டேன். உங்க கையால சாப்பிடனும் போல இருந்தது. என்ன இருந்தாலும் அம்மா சமையல் போல வருமா?" என்றவளைப் பார்த்து புன்னகைத்தவர் தட்டில் உணவைப் போட்டுக் கொடுக்க சமையல் கட்டில் அமர்ந்தவாறு சாப்பிட்டாள்.
"இந்த பொரியல் நானும் செய்யறேன். ஆனா இது மாதிரி வராது" என அவள் ரசித்து சாப்பிட, "இன்னும் கொஞ்சம் வெச்சுக்கோ" இன்னும் எடுத்து வைக்க வயிறும் மனமும் நிறைய உண்டாள்.
"அடிக்கடி வரலாம்ல? மாப்பிள்ளையும் வீட்டுல இல்ல தானே. இங்கேயும் வந்துட்டு போ அனு" மகள் தன் சமையலை ரசித்து சாப்பிடுவதைப் பார்த்துக் கூற,
"இப்போ இப்படி சொல்லுவீங்க. மனசு மாறி இங்க நின்னா மாப்பிள்ளை வீட்டையும் பாக்கனுமேனு அங்கே விரட்டி விடுவீங்க. உங்களை பத்தி எனக்கு தெரியாதா?" முறைப்போடு பார்த்தாள், மகள்.
"இங்க இருக்கக் கூடாதுன்னு விரட்டல அனு. ரொம்ப நாள் இங்க நின்னா உன் அத்தை என்ன நெனப்பாங்க? மாப்பிள்ளை இல்லாத குறையை நீ தானே தீர்த்து வைக்கனும். அதனால சொல்லுவேன். மத்தபடி நீ இங்க எப்போ வேணாலும் வரலாம்"
"ஓகேமா புரியுது. நமக்கு புடிக்குதேனு அதையே புடிச்சிட்டு இருக்கவும் கூடாது. புடிக்கலனாலும் கடமையை விட்டுக் கொடுக்கவும் கூடாது. ரெண்டையும் பேலன்ஸ் பண்ணி போகனும்ல?"
"அதான் வாழ்க்கையோட யதார்த்தம். எல்லாத்திலேயும் நடு நிலைமையா இருந்தா எந்த பிரச்சினையும் இல்லாம வாழலாம்" என்றவரோடு உரையாடிக் கொண்டிருந்தாள், அனு.
"அனும்மா" என்றவாறு வந்த தந்தையைக் கண்டு அவள் முகம் விகசிக்க நிற்க, "இந்தா டா" அவள் கையில் பையொன்றைத் திணித்தார், ராஜசேகர்.
அதனைப் பிரித்துப் பார்த்தவளுக்கு உதடுகளில் ஒட்டிக் கொண்டது, ஒய்யார நகை. அவளுக்குப் பிடித்த இனிப்பு வகைகள், மாங்காய் மற்றும் ஐஸ்கிரீம் இரண்டும் இருந்தது.
"மகள் வந்துட்டானு அம்மா கால் பண்ணதும் இவருக்கு தரையில கால் படல. கடையவே காலி பண்ணிட்டு வந்துட்டாரு பாத்தியாக்கா?" செருப்பைக் கழற்றி வைத்து விட்டு உள்ளே வந்தாள், அகல்யா.
"ஏய் வாயாடி. அப்பாவுக்கு நீயும் மகள் தான். இதோ உனக்கும் சேர்த்து எல்லாம் ரெண்டு ரெண்டா தான் இருக்கு" என்றாள், அனு.
"அது எனக்கு தெரியாது. உன் கையில தானே கொடுத்தாரு. அதென்ன நியாயம் அப்போ?"
"இந்தாங்கப்பா. அவ கையில கொடுங்க" அனு தந்தையிடம் பையை நீட்ட, "சும்மா சொன்னேன்கா. ஒரு சண்டை போட தெரியாதா உனக்கு? தர மாட்டேன், நான் தானே முதல் குழந்தை அப்படினு சண்டைக்கு வரனும். நீ என்னன்னா விட்டுக் கொடுத்துட்டு நிக்கிற" முகத்தை உப்பிக் கொண்டாள், தங்கை.
"அனுவுக்கு சண்டை போட வராது. சின்ன வயசுல இருந்தே அவ எல்லாமே உனக்காக விட்டுத் தருவா. ஏதாவது ஒரு சாமான் கொண்டு வந்தா உனக்கும் அவளுக்கும் பாதி கொடுக்க சொல்லுவேன். ஆனா அவ வேணானு சொல்லி மறுப்பா. அது சரியில்ல, கொஞ்சமா இருந்தாலும் பரவாயில்லை ரெண்டு பேருக்கும் சமனா கொடுக்கனும்னு பிரிச்சு தருவோம்.
அப்பவும் அவ சாப்பிட மாட்டா. நீ சாப்பிட்டு முடிச்ச பிறகு சும்மா இருந்தா சாப்பிடுவா. இன்னும் வேணும்னு நீ கேட்டா அவளோட கையில இருக்கிறதை உனக்கே தந்துடுவா. மத்தவங்களுக்கு கஷ்டம் கொடுக்கக் கூடாதுன்னு எல்லாத்தையும் தானே தாங்கனும்னாலும் அதை ஏத்துக்க கூடியவ தான் என் மக" ராஜசேகரின் விழிகள் மூத்தவள் மீது படிந்தன.
"அப்போ நான்?" அகல்யா அவரைப் பார்க்க, "நீயும் என் மக தான். அவ மூத்த பொண்ணு இல்லையா? பொறுப்பான மகளா எப்பவும் இருந்தானு சொல்றேன். நீ கடைக்குட்டி தானே? நீ இந்த வீட்டோட இளவரசியா இருந்த. அனு உன்னை விட வித்தியாசமானவ.
அவளை நான் படிக்க வைக்காம கல்யாணம் பண்ணி கொடுத்துட்டேன். உன்னை படிக்க வைக்க சொல்லி என் கிட்ட சொன்னதே அவ தான். படிப்போட அருமை அவளுக்கு புரிஞ்சுது. அதை எனக்கும் புரிய வெச்சதால தான் இன்னிக்கு நீ படிக்கிற.
அவ பெருமைய பாடுறேன்னு நினைக்கக் கூடாது. அது என் நோக்கம் இல்ல. அவளால உனக்கு என்ன நல்லது நடந்திருக்குன்னு உனக்கு அப்பப்பவே சொல்லிடனும். அப்போ தான் நீ அவளை புரிஞ்சுப்ப. ஒரு நாளும் தப்பா நெனக்க மாட்ட. என் பொண்ணுங்க ரெண்டு பேரும் ஒற்றுமையா வாழனும். அதான் என் ஆசை" என்றார், அவர்.
"எனக்கு புரியுதுப்பா. நான் அக்காவ நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன். அவ மேல என்னிக்கும் கோவப்பட மாட்டேன். ஐ லவ் ஹர்" தமக்கையின் தோளில் சாய்ந்து கொண்டாள், அகல்யா.
"கார்டூன் ஒன்னு இருக்கு டி. பாக்கலாமா?" என்று அனு கேட்க, "ஹய்ய் ஜாலி" தங்கையும் அவளோடு சுவாரசியமாக பார்க்க ஆரம்பித்து விட்டாள்.
இரவு வரை இருவரும் கதைத்துக் கொண்டும், விளையாடிக் கொண்டும் இருக்க நேரம் போனதே தெரியவில்லை. சாப்பிட்டு முடித்த அனு கடிகாரத்தைப் பார்த்து விட்டு தோட்டத்திற்குச் சென்று அங்கிருந்த ஊஞ்சலில் அமர்ந்து கொண்டாள்.
கதிர் அழைக்கும் நேரம் அல்லவா இது? ஆன்லைன் சென்றவுடன் அவனது தவற விடப்பட்ட அழைப்புகள் இரண்டு அவளைப் பார்த்து கண் சிமிட்டின.
உடனே அழைக்க, அவனும் அந்நொடியே அழைப்பை ஏற்று "அம்மு! எங்கம்மா போன?" என்று பதற்றமாகக் கேட்டான்.
"கதிர்" என்று அவள் அழைக்க, "எங்கடி போற? எவ்வளவு துடிச்சு போயிட்டேன் தெரியுமா? ரெண்டு தடவை எடுத்தும் ஆன்ஸ்வர் இல்ல. ஒரு நாள் நீ உடம்பு சரியில்லாம இருக்கும் போது இப்படி பண்ணுன. இப்போவும் என்னவோ ஏதோனு பதறிட்டேன்" மூச்செடுக்க மறந்து பேசிக் கொண்டே சென்றான், காளை.
"எனக்கு ஒன்னும் இல்ல. இதோ பாருங்க" என்றவள் வீடியோ அழைப்பில் வர, அவள் முகத்தை உன்னிப்பாக சோதித்தவன் ஒன்றும் இல்லை என்றதும் தான் ஆசுவாசமடைந்தான்.
அவள் இருந்த இடத்தைப் பார்த்தவன், "வீட்ல இல்லையா?" என்று கேட்க, "அம்மா வீட்டுக்கு வந்தேன். வரும் போதும் மேசேஜ் போட்டுட்டு தான் வந்தேன்" என்றாள், அவள்.
"பாக்கல டா. வந்த உடனே உனக்கு கால் பண்ணிட்டேன். சாட்குள்ள போய் பாக்கல. நீ நேத்தும் சொல்லிக்கிட்டு தானே இருந்த. நான் தான் மறந்து போயிட்டேன். சாரிம்மு"
"எதுக்கு சாரி? நீங்க பதறாதீங்க. எனக்கு என்னவானாலும் உங்க கிட்ட சொல்லுவேன். பயப்பட வேண்டாம். என்னால முடியும் போதெல்லாம் உங்க கிட்ட பேசுறேன் தானே? டென்ஷன் ஆகாதீங்க சரியா?" என்று அவள் கேட்க, தலையை இரு பக்கமும் ஆட்டி வைத்தான்.
"நான் உன் பக்கத்துல இருந்தா இப்படி எல்லாம் ஃபீல் ஆகாது. நீ கொஞ்ச நேரம் வர லேட்டானாலும் எனக்கு என்னமோ பண்ணுது. உனக்கு முடியும்னா பேசுவ தானே. இப்போ பேசலனா சுகமில்லாம இருப்பாளோ, கிட்ட பாத்துக்க வேண்டிய நாம தூரமா வந்துட்டோமே, என் தங்கத்த கஷ்டப்பட விடுறோமோனு ஏகப்பட்ட யோசனை வந்துடும். உனக்காக வெயிட் பண்ணுற ஒரு நிமிஷம் கூட ஒரு நாள் போல இருக்கும். என்னையே என்னால கண்ட்ரோல் பண்ண முடியலம்மு" அவனது குரலில் இருந்த வருத்தம் அவளை வெகுவாய்த் தாக்கியது.
"ஒன்னும் இல்ல. ஒன்னும் இல்லங்க. ரிலாக்ஸ்! நான் நல்லா தான் இருக்கேன். வீட்டுல சமைக்க லேட்டாகிடுச்சு. சாப்பிட்ட உடனே ஓடி வந்தேன்ங்க. சாரி" என்றவள் கைகளை விரிக்க, அவனோ தவிப்போடு பார்த்தான்.
"வாங்க. ஹக் மீ கதிர்" என்று கண்களால் அழைக்க, அலைபேசியை எடுத்து நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான், கணவன்.
கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்கள் இருவரும் பேசவேயில்லை. மௌனம் பேசியது. ஏறி இறங்கிய நெஞ்சாங்கூட்டினுள் மளமளவென முகிழ்த்த நேசங்கள் உறவாடிக் கொண்டன. உஷ்ணமாய் ஏக்கம் சுமந்து வெளிப்பட்ட சுவாசங்கள் கதை பேசின.
கதிரின் முகத்தைப் பார்த்த அனு, "என் தங்கம்" என்று அவன் நெற்றியில் முத்தமிட, "செல்லம் டி நீ" அவளை அன்போடு பார்த்தான்.
"நீ நல்லா இருந்தா அது போதும் அம்மு. உன் வீட்டுக்கு போனா நீ சந்தோஷமா இருப்பனு எனக்கு தெரியும். எப்படி போச்சு இன்னிக்கு நாள்?"
"ஆமாங்க. அப்பா, அம்மா, அகல்யானு எல்லார் கூடவும் பேசிட்டு இருந்தேன். அம்மா ஊட்டி விட்டாங்க. அகல்யா கூட கார்ட்டூன் பாத்தேன், பேட்மின்டன் விளையாடினேன். அப்பா ஸ்நாக்ஸ் வாங்கி கொடுத்தார். என் கூட ரொம்ப நேரமா பேசினார்" என்று அவள் பேசிக் கொண்டே செல்ல,
"உன் வாய திறக்கனும்னா அப்பாவ பத்தி பேசினா சரி. திறந்த வாய் மூடாம பேசிக்கிட்டே இருப்ப. சரியான அப்பா பொண்ணு" என்று அவன் சொல்ல, அவளும் மெல்லச் சிரித்தாள்.
"அனுபமா எப்போவும் அப்பா பொண்ணு தான்"
"ம்ஹூம். அனுபமா இந்த கதிரோட பொண்டாட்டி" அவன் பொய்யாக முறைக்க, "ரெண்டு பேருமே எனக்கு முக்கியம் தான். உங்களுக்கு எப்படி நானும், உங்க அம்மாவுமோ எனக்கும் நீங்க ரெண்டு பேரும் அப்படித் தான்" என்று சொன்னாள்.
"நீ எனக்கு ஏத்தவள் அம்மு. எனக்காகவே பிறந்த என் தேவதை" அவளைக் காதலாக நோக்கினான், கதிர்.
தூரம் தொடரும்........!!
ஷம்லா பஸ்லி
2024-05-28