New member
- Joined
- May 1, 2025
- Messages
- 8
- Thread Author
- #1


தூரம் 05
வேலை முடிந்து வந்து அலுப்பு தீர குளித்து விட்டு வந்த கதிர் வாட்சப்பினுள் நுழைய, அனுவின் எண்ணிலிருந்து ஸ்டேட்டஸ் காட்ட, அதனை சொடுக்கினான்.
"உன்னருகினில் வாழ்வது சுகம் சுகம்
என் இருதயம் உருகுதே அணுதினம்.." என்ற பாடல் ஒலித்தது.
அவள் எப்போதும் இப்படி போட மாட்டாள். மற்றவர்கள் இப்படிச் செய்வார்கள் என்று அவன் கேட்டால், "ஸ்டேட்டஸ் வெச்சு தான் உங்கள மிஸ் பண்றத, லவ் பண்றத காட்டனும்னு இல்ல. ஆனா நல்லா ஃபீல் ஆச்சுன்னா போடுவேன்" என்பாள், அவள்.
ஆக, இன்று அவள் ஏதொவொரு கவலையில் இருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான். திருமண வீட்டில் யாராவது ஏதாவது சொல்லி விட்டார்களோ? தன்னைப் பற்றி விசாரித்ததால் ஏங்கிப் போய் விட்டாளோ என நினைத்தவன் உடனடியாக அவளுக்கு அழைப்பு விடுத்தான்.
அடுத்த நொடி அழைப்பு ஏற்கப்பட்டது. அவனுக்காகத் தான் காத்திருந்தாள் போலும்.
"அம்மு" அவனது அன்பு நிறைந்த குரலில் அகம் குளிர்ந்தது, காரிகைக்கு.
"சொல்லுங்க தங்கம்" என்றவளைப் பார்த்து, "அடடா. என் செல்லம் எடுத்த உடனே அழகா கூப்பிடறா? என் மேல அம்புட்டு பாசமா?" ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கினான்.
"பாசம் தான். ரொம்ப ரொம்ப ரொம்ப பாசம். எனக்கு உங்கள அவ்ளோ புடிக்கும்ங்க"
"அப்போ மாமாவைக் கொஞ்சு பாப்போம்"
"என் செல்ல மாமா. தங்கக்கட்டி. என் பட்டுக்குட்டி. என் கண்மணி" என்று அவள் கொஞ்ச, "என் உசுருடி நீ" அவளுக்கு முத்தம் கொடுக்க,
"நானும் நானும்" என்றவளோ திரையில் தெரிந்த தன்னவனுக்கு முத்தங்களை வாரி வழங்கினாள்.
"ஓய் வெட்கமா வருது டி. இன்னிக்கு மேடமுக்கு லவ் கொட்டுது போல" என சிரிக்க, "ம்ம் லவ் கொட்டுதுன்னா நான் உங்கள அளவுக்கு அதிகமா மிஸ் பண்ணுறேன்னு அர்த்தம்" என்றாள், ஏக்கமாக.
"என் தங்கத்துக்கு என்னாச்சு? ஃப்ரெண்ட்ஸ் கூட ஜாலியா பேசுனியா? சந்தோஷமா இருந்தியா?" என்று வினவினான்.
"அவங்க கூட நெறய பேசினேன். போட்டோஸ் கூட எடுத்தோம். நானும் ஃபோட்டோ எடுத்தேன்"
"நீ அனுப்பி இருந்த போட்டோவ பார்த்தேன். கியூட்டா இருந்த தெரியுமா? எவ்ளோ அழகு என் பொண்டாட்டி" என்று சொல்ல, "அய்யோ நான் சொல்லுறத கேளுங்க" என சிணுங்கினாள்.
"சரி சொல்லு. நான் ஒன்னுமே பேசல" வலது கரத்தால் வாயை மூடிக் கொண்டு நின்றான்.
"எல்லாரும் அவங்க ஹஸ்பண்ட் கூட கப்பிள் ஃபோட்டோ எடுத்தாங்க. எனக்கு உங்க ஞாபகம் வந்துருச்சு. அவங்க என் கையில் ஃபோனை தந்து அவங்க எல்லாரையும் போட்டோ எடுத்து தர சொன்னாங்க"
"என்ன இது? உன்ன பத்தி கொஞ்சமாச்சும் யோசிக்க மாட்டாங்களா? உன்ன தனியா விட்டு போட்டோ எடுத்து தர சொல்லி இருக்காங்க? மனசாட்சி இல்லையா அவங்களுக்கு?" கதிர் அழுத்தமாக தலையைக் கோதிக் கொள்ள,
"இதெல்லாம் எதிர்பார்க்கக் கூடாதுங்க. இந்த மாதிரி நெறய நடக்கும். வேணும்னு பண்ணுறாங்களா, தெரியாம நடக்குதானு தெரியல. ரொம்ப கஷ்டமா இருந்தது. உங்கள அவ்வளவு மிஸ் பண்ணேன்" அவன் முகத்தை ஏக்கத்தோடு நோக்கினாள்.
"நெறய சந்தோஷங்கள், அழகான தருணங்கள் எல்லாம் மிஸ் ஆகுதுல்ல? இந்த வெளிநாட்டு வாழ்க்கை பணத்த தந்தாலும் சந்தோஷம், நெருக்கம், இனிய நினைவுகளை பறிச்சிடுது. உன் கூட இருக்க முடியலையேனு ஏக்கமா இருக்கு. உன்ன கஷ்டப்பட விடறோமேனு குற்றவுணர்ச்சியா இருக்கு" அவனிலும் அவளுக்குக் குறையாத உணர்வு தான்.
"இப்படி பேசாதீங்க. நீங்க எதுவும் வேணும்னே பண்ணல. அது எனக்கும் தெரியும், உங்களுக்கும் தெரியும். அதனால குற்ற உணர்ச்சி அது இதுன்னு பேச வேண்டாம். எல்லாம் கடந்து போகும். ரொம்ப நாள் இல்லாம சீக்கிரமே வந்துடுங்க" என்றாள், அவள்.
"சரிடா. கடன்ல நாற்பதாயிரம் கொடுத்துட்டேன். இன்னும் அப்படியே இருக்கு. மெது மெதுவா கட்டிடுவேன். உனக்கு இந்த மாசம் செலவுக்கு அனுப்புன காசு பத்துமான்னு எனக்கு தெரியல" என்று கவலையோடு கூற,
"அதெல்லாம் போதும். அந்த பணத்தை சிக்கனமா கணக்கு பார்த்து செலவழிச்சா அது நல்லாவே போதும். நீங்க அதைப் பத்தி யோசிக்காதீங்க" என்றவளை அவனுக்கு இன்னும் பிடித்தது.
"லவ் யூ டி. என் செல்லக் குட்டி. முத்து மாணிக்கம் வைரம்" அவளைக் கொஞ்சியவன் முத்தங்களைக் கொடுக்க, "போதும் போதும்" அவளுக்கு நாணம் பீறிட்டுப் பாய்ந்தது.
"ஆஹ்ஹா. உனக்கு வெட்கம் எல்லாம் வருமா?"
"ஏன்? உங்களுக்கு மட்டும் தான் வரனுமா? எங்களுக்கும் வரும். பொண்ணுங்களுக்கு தான் அதிகமா வரும்னு கேள்விப்பட்டிருக்கேன். ஆனா என்னை விட உங்களுக்கு அதிகமா வருது" வாயில் கை வைத்துச் சிரித்தாள், வஞ்சி.
"மத்தவங்க மாதிரியே நாமளும் இருந்தா சுவாரசியம் இருக்காதே. கொஞ்சம் வித்தியாசமா இருந்தா தான் சரித்திரம் பேசும்"
"ஆஹ்ஹா. உலக சாதனை பண்ணிட்டாரு இவரு. சரித்திரம் பேசுமாம். பெரிய சாகசம் தான் பண்ணிருக்கீங்க"
"ஏன்டி இப்படி கலாய்க்கிற? நான் பாவம் இல்லையா? வெளிய யாராவது கேட்டா என்ன நடக்கும்?" பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
"என்னை பத்தி என்ன நெனச்சீங்க? உங்க கிட்ட மட்டும் தான் இப்படி எல்லாம் பேசுவேன். அது ஒரு மாதிரி ஜாலியா இருக்கும். மத்தவங்க கிட்ட உங்கள இப்படி பேசவே மாட்டேன். என் புருஷன பத்தி பெருமையா மட்டும் தான் சொல்லுவேன். மத்தவங்க கிட்ட உங்களை மரியாதையா பேசுவேன்"
"இது இதான். பக்கா வைஃப் மெட்டீரியல் அனுபமா. என் அம்முக்குட்டி"
"எனக்கு காதல் பொங்கி வழியுதுன்னு சொன்னீங்க. இப்போ உங்களுக்கு பொங்குற அளவுக்கு வெள்ளமே வந்துடும் போலிருக்கே" அவள் வியந்து சிரிக்க,
"வெள்ளம் இல்ல சுனாமியே வந்தாலும் பரவாயில்லை. மூழ்கடிக்க இது தண்ணி இல்ல, காதல். உன்னை என் அன்புல குளிப்பாட்டி, மிதக்க விட்டு, மூழ்கடிச்சு, திணற வெச்சாலும் என் மனசுக்கு போதாது. அம்புட்டு இருக்குடி உன் மேல காதல்" என்றவன் விழிகளில் அத்தனை நேசம்.
நெகிழ்ந்து போனாள், மாது. அவள் கண்களில் துளி கண்ணீர் உருண்டோட, பதறிப் போனான், கணவன்.
"அம்மு! என்னாச்சு?" அவள் கண்ணீரைக் கண்டு அவன் தவிக்க, "ஒன்னும் இல்லங்க. நீங்க என் மேல உசுரயே வெச்சிருக்கீங்க. உங்க அளவுக்கு என்னால காதலிக்க முடியுமானு தெரியல" என்று சொல்ல,
"அய்யோ அம்மு. முதல்ல கண்ண துடை. என்னால அதை பாக்க முடியாது" என்றிட, தலையசைத்தவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"சும்மா சும்மா அழாதம்மு. என்னால நீ கஷ்டப்படுறன்னு நெனச்சு நானே வருத்தப்பட்டுட்டு இருக்கேன். நீ வேற அழாத"
"நான் வேணும்னேவா அழுறேன்? அதுவா வருது. என்னால கன்ட்ரோல் பண்ண முடியல" என்றவளுக்கோ அவனது அணைப்பிற்குள் பாந்தமாக அடங்கிப் போக வேண்டும் போல் இருந்தது.
"தூக்கமா வருது" வாயில் கை வைத்தவன் கொட்டாவி விட, "சாப்பிட்டீங்களா நீங்க?" என்று கேட்டாள்.
"சாப்பிடாம வருவேனா? சாப்பிடலன்னு சொன்னா என் பொண்டாட்டி திட்டி திட்டி தீர்த்துடுவா. வீணா எதுக்கு திட்டு வாங்கனும்" என்றவனைப் பார்த்து,
"அது சரி. சாப்பிடாம வந்தா அவ்வளவு தான். முதல்ல சாப்பிடனும். அப்பறம் தான் எந்த வேலையா இருந்தாலும். சரியா?" ஒற்றை விரலை நீட்டிக் கேட்டாள்.
"தங்கள் கட்டளையே சாசனம் தேவி" என்றவனின் பாவனையில் அவளுள் சிரிப்பு.
"நீங்க என்னமோ தமிழ் ஆசான் மாதிரி பேசுறீங்க கதிர். உங்களுக்கு படிக்க புடிக்கும்னு எனக்கு தெரியும். அப்பறம் ஏன் படிக்கல?"
"பதில் சொல்லி தான் ஆகனுமா?" என்று கேட்க, "சொல்லனும்னா சொல்லுங்க. இல்லன்னா வேணாம்" என்றவளுக்கு முகம் வாடியது.
"ஏய் லூசு. உன் கிட்ட சொல்லாம வேற யார் கிட்ட சொல்லப் போறேன்? என் கிட்ட தான் சொல்லனும்னு உரிமையா சண்டை போடுவேனு நெனச்சா தலையை ஆட்டிட்டு பேசாம இருக்க"
"அப்படின்னா சொல்லுங்க" என அவன் முகம் பார்த்தாள்.
"படிக்க ஆசை தான் எனக்கு. ஆனா படிப்பு வரல அம்மு. நான் ஓரளவு படிப்பேன். ஆனா மார்க் வரலனா கஷ்டமா இருக்கும். கஷ்டப்பட்டு படிச்சும் வேல இல்லயேனு தோணும்.
மேல படிக்கலாமா வேணாமான்னு யோசிக்கும் போது அப்பாவும் என்னை பயங்கரமா திட்டிட்டார். அவர் படிச்சவர்ல? என்னை அவர் பையன்னு சொல்லவே அசிங்கமா இருக்காம். கஷ்டப்பட்டு படிக்க வெச்சும் ஒன்னுக்கும் பிரயோசனம் இல்லனு சொல்லிட்டார்.
எனக்கு படிப்பு வராததுக்கு நான் என்னம்மு பண்ணுவேன்? டீச்சரோட பசங்க எப்பவும் படிப்பாங்க. ஆனா நான் மட்டும் வித்தியாசமா இருக்கேனாம். அவங்களை அவமானப்படுத்த வந்து பிறந்திருக்கேன்னு சொன்னாரு. எனக்கு கஷ்டமா போச்சு.
படிச்சு பாக்கலாம்னு நெனச்ச எண்ணத்த கை விட்டுட்டேன். அவங்க இன்னும் படிக்க வெச்சு அப்பவும் அவங்க எதிர்பார்க்குறத கொடுக்க முடியலன்னா என்ன பண்ணுறது? அப்போ இதை விட கஷ்டமா இருக்கும்ல? அதனால எல்லாம் விட்டுட்டு வேலைக்கு போய் என் செலவை நானே பார்த்துக்கிட்டு என் பாட்டுல இருந்துட்டேன்" என்றவனுக்கு தொண்டை அடைத்தது.
"மாமா திட்டினாரு தான். அது கஷ்டமா இருந்திருக்கும். ஆனா அவர் உங்கள கஷ்டப்படுத்தனும் என்கிற நோக்கத்துல நிச்சயம் சொல்லி இருக்க மாட்டார்" என்று அனு சொல்ல,
"ஆமா அம்மு. அப்போவது புரிஞ்சுக்கிட்டு படிச்சு நல்லா வாழனும்னு தான் என்னை திட்டி இருப்பார். அப்போ ரோஷத்துல படிப்பே வேணானு வேலைக்கு போயிட்டேன். ஆனா இப்போ கவலையா இருக்கு. அப்பா சொல்றத கேட்டு படிச்சி இருக்கலாமே. அப்போ இந்த மாதிரி வெளிநாட்டுக்கு வந்து கஷ்டப்படாம நம்மூர்ல இருந்து நல்ல வேலை பார்த்திருக்கலாமோனு தோணுது. போனத நெனச்சு வருந்தி என்ன பிரயோசனம்?" பெருமூச்சு விட்டான், கதிர்.
"சரி கவலைப்படாதீங்க. இப்படி பண்ணா இந்த மாதிரி நடந்திருக்காதேனு யோசிச்சு ஒரு பயனும் இல்ல. இறந்த காலத்த நம்மளால மாத்த முடியாதே. அத நெனச்சு வருந்தாம விட்டுத் தள்ளிட்டு சந்தோஷமா இருங்க.
இது தான் உங்க வேலைனு ஆகிப் போச்சு. இதை வெச்சு எப்படி வாழ்க்கைய நிம்மதியா, சந்தோஷமா கொண்டு போகலாம்னு யோசிச்சு அதன்படி நடந்துக்கங்க. என்னை கஷ்டப்படுத்துறீங்க என்கிற கவலை வேண்டாம். நான் உங்க கூட பேசிட்டு இதோ சந்தோஷமா தான் இருக்கேன். என் தங்கம் சிரிச்சா தான் அழகு. எங்கே சிரிங்க பாப்போம்" என்று கேட்க,
"சரிம்மு" அவளுக்காக இதழ் பிரித்துப் புன்னகை பூத்தான், அனுவின் அன்பன்.
தூரம் தொடரும்.....!!
ஷம்லா பஸ்லி
2025-05-28