New member
- Joined
- May 1, 2025
- Messages
- 8
- Thread Author
- #1

தூரம் 04
அதிகாலையிலேயே எழுந்து விட்டான், கதிர். கண் விழித்தவன் கட்டிலில் இருந்து எழாமலே அலைபேசியை உயிர்ப்பிக்க, திரையில் விழுந்தது அவர்களது திருமணப் புகைப்படம்.
புன்னகை முகமாக அவனது தோள்களில் சாய்ந்து நின்றிருந்தாள், அனுபமா. அவள் எப்பொழுதும் அவன் தோள்களில் தஞ்சம் கொண்டிருப்பாள்.
"என்னடி குரங்குக் குட்டி மாதிரி தோள்ல தொங்குற?" என்று அவன் கேட்டால், "நான் தோள்ல தொங்குவேன். தொட்டில் கட்டி ஆடுவேன். எனக்கான தோள், என் புருஷன், என் உரிமை" என்று கறாராக சொல்வாள்.
"மிஸ் யூ அம்முக்குட்டி" என்று சொன்னவனுக்கு அவள் வாசம் தன்னில் வேண்டும் போல் இருந்தது.
அதேசமயம் அவளிடம் வீடியோ அழைப்பு வர, புன்னகையுடனே அழைப்பை ஏற்றான்.
கண்களை மூடிக் கொண்டிருந்தவளைக் கண்டு, "குட் மார்னிங் அம்மு" என்று சொல்ல, மெதுவாய் இமை பிரித்தாள், பாவை.
"குட் மார்னிங் புருஷா" தலையணையில் கன்னம் வைத்தவாறு சாய்ந்தவளின் இதழ்களில் தாராளமாய் ஒட்டிக் கொண்டது, மலர்ச்சி.
"என் பொண்டாட்டி காலையிலே உற்சாகமா இருக்கா. கல்யாண வீட்டுக்கு போற அவசரமா?" என்று அவன் வினவ, "இல்லன்னு சொல்ல மாட்டேன். ஃப்ரெண்ட்ஸ் எல்லாரையும் ரொம்ப நாள் கழிச்சு பாக்க போறேன்ல? வேற நாளைக்கு நீங்க கால் எடுத்தா தான் எழும்புவேன். இன்னிக்கு தானாகவே முழிப்பு வந்துடுச்சு" என்றாள், சிரிப்போடு.
"இதுக்கு தான் ஆர்வக் கோளாறுன்னு சொல்லுறது. தெரியுமா?"
"நீங்க என்ன சார்? இங்கே இருக்கும் போது கெட்டுகெதர், பார்ட்டி, ஃப்ரெண்ட் மீட்னு அடிக்கடி போயிடுவீங்க. உங்களுக்கு எங்க தெரியப் போகுது வருஷக் கணக்கா காத்திருந்து கெடக்கிற இந்த மாதிரி திடீர் சந்திப்போட அருமை" என்று அவள் சொல்ல,
"சரிம்மா. உடனே சண்டைக்கு வராத. காலையிலே எனக்கு அதுக்கு தெம்பில்ல. சூடா ஒரு டீ குடிக்கனும்" என்றவன் எழுந்து அமர்ந்து கொள்ள,
"குடிங்க குடிங்க" கொட்டாவி விட்டபடி சொல்ல, "என்னடி தூங்கலயா?" என்று கேட்டான்.
"தூங்கினேன். ஆனாலும் தூக்கம். கல்யாண வீட்டுக்கு தனியா தான் போகலாம்னு இருக்கேன். அங்க போயிட்டு ஃப்ரெண்ட்ஸ் வந்ததும் அவங்க கூட சேர்ந்து உள்ள போவேன்"
"சரிடா. கவனமா போயிட்டு வா" என்றான், அக்கறையாக.
மௌனித்து இருந்தவளைப் பார்த்து "சரி நான் போகட்டுமா?" என்று வினவினான்.
"போகாதீங்க" என தலையை அவசரமாக ஆட்டினாள்.
"வேலைக்கு போகனும்ல? நைட் பேசுறேன் அம்மு" என எழுந்தவன் ஸ்பீக்கர் போட்டு ஃபோனை மேசையில் வைத்தவன் பெட்சீட்டை உதறி நேர்த்தியாகப் போட்டான்.
அனுபமா அவனையே பார்த்துக் கொண்டிருக்க, "எனக்கு எந்த வேலையும் ஒழுங்கா பண்ணத் தெரியலன்னு சொல்லுவ தானே? இப்ப பாரு எவ்ளோ அழகா செய்றேன்னு" என்று அவன் சொல்ல,
"அம்மா இந்த வேலைய பண்ண சொன்னா பெட்சீட் பாறாங்கல்ல விட சுமையா இருக்குன்னு தொடவே மாட்டீங்களாம். இதையெல்லாம் உங்கம்மா கண்டா நாள் முழுக்க இதையே சொல்லிக் காட்டுவாங்க" என சிரித்தாள்.
"அது சரி" என்றவனின் பார்வை கடிகாரத்தின் மீது படிவதைக் கண்டவள், "சரிங்க. போய் ரெடியாகுங்க. நைட் வந்து பேசலாம்" என்றாள்.
"எனக்கு ஏதாவது சொல்லு. போறேன்" என்று அவன் சொல்ல, "டேக் கேர்" என்றவளைப் பார்த்து இடம் வலமாக தலையசைத்து "வேற" என்றான்.
வேற வேற என்று நாடியில் விரல் தட்டி யோசித்தவள் "ஐ லவ் யூ தங்கம்" என்று சொல்ல, முகம் மலர்ந்து போனான்.
"இது போதும். எனர்ஜி பூஸ்ட் கிடைச்ச மாதிரி இருக்கு. இன்னைக்கு ஃபயரா வேலை பாத்துட்டு நைட்டுக்கு வரேன். பத்திரம் டா" என்று அவன் அழைப்பைத் துண்டிக்க எத்தனிக்க, "எனக்கு எதுவும் சொல்ல மாட்டீங்களா?" என்று கேட்டாள், அனுபமா.
"லவ் யூ. லவ் யூ. லவ் சோ மச் அம்மு" திரையில் தெரிந்தவளுக்கு முத்தமிட்டுச் செல்ல, முத்தத்தின் இனிமையில் அவள் கண்கள் மூடித் திறந்தன.
நேரங்கள் அதோ இதோவென்று கடக்க, திருமண வீட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தாள், அனு.
"எப்படி போகப் போற அனு?" என்ற அத்தையின் கேள்விக்கு, "ஆட்டோல போவேன். ஃப்ரெண்ட்ஸ் வந்ததும் அவங்க கூட சேர்ந்துக்கிறேன்" என பதிலளித்தாள்.
"யாரோ சுமித்ரா கிட்ட கேட்கிறதா சொன்ன. என்னாச்சு?"
"அவ ஹஸ்பண்ட் கூட போறதா சொன்னா"
"அதென்ன அப்படி? நீ கேட்டா உன் கூட வர்றதா சொல்லி இருக்கலாமே. ஹஸ்பண்ட் கூட தான் போகனுமோ?" என்று அவர் சொல்ல,
"அவங்களுக்கும் சொல்லி இருக்காங்க. அதனால ஒன்னா போறாங்க. அது அது அவங்க விருப்பம் அத்தை. இதையெல்லாம் பெருசா எடுத்துக்க முடியுமா?" என்று கூறினாள்.
"ஒரு நாள் அந்த பொண்ணுக்காக தானே நீ கதிரை தனியா போக சொல்லிட்டு அவ கூட போன. இப்போ நீ கேட்டு மறுத்துட்டாளேனு ஒரு ஆதங்கத்துல கேட்டேன்"
"எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கள்ல? அதுவும் நாம பண்ணதையே அவங்க பண்ணனும்னு எதிர்பார்க்கவும் கூடாது. அவ என் கூட கண்டிப்பா வரனும்னு நெனச்சு கேட்டிருந்தா அது எனக்கு ஏமாற்றமா இருந்திருக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாம தான் கேட்டேன். அவ வேற போறதா சொல்லிட்டா. நான் தனியா போறேன். என்னால போக முடியும் அத்தை. நான் கிளம்புறேன்" என சென்றவள் ஆட்டோவில் திருமண மண்டபத்தை அடைந்தாள்.
ஏற்கனவே அவளது நண்பிகள் வந்து கதைத்துக் கொண்டிருக்க, அவளைக் கண்டதும் "ஹே புதுப்பொண்ணு வாடி. எப்படி இருக்க?" என்று வினவினாள், ஒருத்தி.
"நான் புதுப்பொண்ணு இல்ல. பழைய பொண்ணு தான்" என பேச ஆரம்பித்து விட்டாள்.
நண்பிகள் நீண்ட நாள் கழித்து சந்தித்தால் கேட்கவும் வேண்டுமா? வீட்டுக் கதையில் தொடங்கி ஊர்க்கதையைத் தொட்டு உலகக்கதை வரை பேசித் தீர்த்தனர்.
"நாம கல்யாண வீட்டுக்கு வந்திருக்கோம். ஞாபகம் இருக்கா இல்லையா? வந்த வேலைய மறந்து இங்க பேசிட்டு இருக்கோம்" என ஒருத்தி நினைவுபடுத்த, "அது கூட மறந்து போச்சு பாரேன். எத்தனை நாள் கழிச்சு மீட் பண்ணுறோம். கல்யாணம் பண்ணி குழந்தை குட்டின்னு வந்த பின்னாடி யாரோடவும் அவ்வளவு க்ளோஸா பழகி டைம் ஸ்பெண்ட் பண்ண முடியல" என்றாள், இன்னொருத்தி.
"அது உண்மை தான். ஸ்கூல் டைம்ல எல்லாரும் இப்படி இருக்கிறது பார்த்து நாம இந்த மாதிரி தூரமாகிட கூடாது. அடிக்கடி சந்திக்கனும், பேசிக்கனும்னு சொல்லிக்கிட்டோம். ஆனா காலமும் சூழலும் நம்மள அது பாட்டுக்கு கொண்டு போகுது" பெருமூச்சு விட்டாள், சுமித்ரா.
அனைவரும் பேசிக் கொண்டே உள்ளே செல்ல, சுமித்ராவின் குழந்தையைத் தூக்கிக் கொண்டாள், அனு.
"உன் ஹஸ்பண்ட வெளிநாடு போக விட மாட்டேனு சொன்ன. இப்போ ஏன்?" என்று சுமித்ரா கேட்க, "சில இக்கட்டான சூழ்நிலைகள் அவரை அந்த முடிவ எடுக்க வெச்சிடுச்சு. சூழ்நிலைய பக்கத்தில் இருந்து புரிஞ்சு உணர்ந்துக்கிட்ட என்னால அவரை அனுப்பாம இருக்க முடியல" மெல்லிய குரலில் கூறினாள், காரிகை.
"புரியுது டி. இதை நெறய பேரு நக்கலா பேசுனாங்க. நானும் அதான் என் டவுட்ட உன் கிட்டவே கேட்டேன். தப்பா எடுத்துக்காத"
"ஒன்னுமே தெரியாம பின்னால பேசுறத விட இப்படி கேட்டு தெரிஞ்சுக்கிறது நல்லது தான். வெளியில் இருந்து பேசுறவங்க அவங்கவங்க எண்ணத்தையும் கண்ணோட்டத்தையும் வெச்சு விதவிதமா பேசுவாங்க. அவங்க சித்திரிக்குற வாழ்க்கைய உள்ளிருந்து வாழுற என்னால மட்டும் தான் புரிஞ்சுக்க முடியும். அதனால எனக்கு அவங்க கமண்ட் தேவயே இல்ல" என்றவளுக்கு இதனை விட எதுவும் பேசத் தோன்றாமல் அமைதியானாள்.
அவளும் பிறரைப் பற்றி பேசாதவள் அல்ல. ஏதாவது நேரத்தில் பேசி இருக்கிறாள் தான். ஆனால் எப்போது அத்தகைய பேச்சுக்களால் அவள் கஷ்டப்பட்டாளோ அன்றிலிருந்து பிறர் பற்றிப் பேசுவதை இயன்றளவு தவிர்த்துக் கொண்டாள், அனு.
ஊரார், குடும்பத்தார் முதற்கொண்டு நண்பர்கள் வரை பின்னால் பேசும் பழக்கம் இப்போது வழக்கமாகவே மாறி விட்டது போலும். அவரவர்க்கு வரும் போது துடித்து விடுகின்றவர்கள், மற்றவருக்கும் அப்படித் தானே இருக்குமென நினைத்து அவ்வாறு பேசாதிருப்பது அரிது தான்.
தாலி கட்டி முடிந்ததும், மணப்பெண்ணைப் பார்த்து பேசி விட்டு சாப்பிடச் சென்றார்கள். நண்பிகள் கலகலத்துக் கொண்டே சாப்பிட்டு முடித்தனர்.
"எல்லாரும் வாங்க. செல்பீ எடுக்கலாம்" என அவர்கள் விதவிதமாக செல்பீ எடுத்தனர்.
நண்பர்களோடு இருப்பதுவும் ஒருவித மகிழ்வு தானே? அனைத்தும் மறந்து அதில் மூழ்கிப் போனாள், அனு.
அவளது நண்பிகள் தம் கணவரோடு புகைப்படம் எடுத்துக் கொள்ள, அனுவை கதிரின் நினைவு தொற்றிக் கொண்டது.
இன்று அவன் தன்னோடு இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணம் எழுந்தது. அவளையும் மீறி ஏக்கம் மனதைக் கவ்வுவதைத் தடுக்க முடியவில்லை.
"எங்கள கப்பிளா வெச்சு போட்டோ எடுத்து கொடுக்குறியா?" என ஒருத்தி தொலைபேசியை அவளிடம் திணிக்க, அனைவரையும் ஒன்றாக வைத்து புகைப்படம் எடுத்துக் கொடுத்தாள்.
"சரி. நான் கிளம்புறேன்" என வந்தவளுக்கு மனதில் ஏதோ வெறுமை சூழ்ந்தது.
அவர்கள் ஒன்றாக இருப்பதில் அவளுக்கு வருத்தம் இல்லை. ஆனால் தான் மட்டும் தனித்திருக்க, தன்னை சேர்க்காமல் தனக்கே படம் எடுத்துக் கொடுக்க சொல்கிறார்களே. அவர்கள் தன்னைப் பற்றி சிந்திக்க மாட்டார்களா என்று சிந்தித்தாள்.
"அவங்கள்ல யாராவது ஒருத்தி இப்படி வந்து நான் கதிரோட இருந்திருந்தாலும் இப்படி பண்ணி இருப்பேனோ என்னவோ? நாம நம்மள பத்தி தானே நெனப்போம். அப்படியிருக்கும் போது அவங்களை குற்றம் சாட்டுற மாதிரி நெனச்சு என்ன பயன்? விட்டுத் தள்ளி போயிட்டே இருக்க வேண்டியது தான்" என்று நினைத்துக் கொண்டவள் அலைபேசித் திரையில் தெரிந்த தன்னவனைப் பார்த்தாள்.
திருமணம் முடித்த பிறகு அவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்ற போது அவனது கைப்பிடித்து நடப்பது போல் எடுத்துக் கொண்ட புகைப்படம் அது.
அவளை அன்பு சொட்டச் சொட்ட பார்த்துக் கொண்டிருந்தான், கணவன். அவனது அருகாமைக்காக ஏங்கியது, ஏந்திழையுள்ளம்.
"மிஸ் யூ தங்கம்" அவன் முகத்தை விரல்களால் வருடிக் கொடுத்தாள்.
தூரம் தொடரும்.......!!
ஷம்லா பஸ்லி
2025-05-25