• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.
New member
Joined
May 1, 2025
Messages
8
🩶 தூரம் வேண்டாம் தங்கமே! 🩶

தூரம் 03

கார்மேகங்கள் நிலவு மகளைத் தன் மடி மீது தாலாட்டிய இரவு வேளையது. வீட்டு வேலைகளை முடித்துக் கொண்டு அறையினுள் முடங்கினாள், அனுபமா.

கட்டிலில் சாய்ந்தவளுக்கு அலைபேசியில் அழைப்பு வருவது போல் ஒரு உணர்வு. பதறியடித்துக் கொண்டு அமர்ந்தவளின் கை அலைபேசியை ஏந்திய கணம் அவளுள் ஏமாற்றம் சூழ்ந்து கொண்டது.

அழைப்பு வந்தது அவள் தோழியிடம் தான். தன்னவனுக்காக அல்லவா அவள் காத்திருந்தாள்?

காலையில் அழைப்பேற்று அரை மணி நேரம் உரையாடும் கதிர், மீண்டும் இரவில் தான் அழைப்பான். பதினொரு மணிக்கு அவன் வருவான் என்பதால் அதற்குள் சாப்பிட்டு, இதர வேலைகளை முடித்து விட்டு வந்து விடுவாள்.

இன்று பதினொரு‌ மணி தாண்டியும் வரவில்லையே என்று நினைத்தவள் மனதோரம் துளிர்த்த சோகத்தை புறந்தள்ளி வைத்து விட்டு தோழியின் அழைப்புக்கு பதில் தந்தாள்.

"ஹாய் டி! எப்படி இருக்க?" என்று எதிர் முனையில் சுகம் விசாரித்தாள், அனுவின் சகபாடி சுமித்ரா.

"இருக்கேன் டி. என்ன இந்த நேரத்துல?" என்று அவள் கேட்க, "பண்ணக் கூடாதா? நீ உன் ஹஸ்பண்ட் கூட பேசும் போது நான் டிஸ்டர்ப் பண்ணிட்டேனா?" அவள் சற்றே பதற,

"இல்ல இல்ல. நீ பேசு. என்ற விஷயம்?" என்றாள், அனு.

"நாளைக்கு நம்ம ஃப்ரெண்ட் நிம்மிக்கு வெடிங். உனக்கு ஞாபகம் இருக்கா? வந்துருவ தானே?"

"வருவேன் சுமி. நீ எத்தனை மணிக்கு வருவ? எப்படி வருவ? எனக்கு வர யாரும் இல்ல. அதான் யோசிக்கிறேன்" யோசனையோடு அவள் சொல்ல,

"என் ஹஸ்பண்ட் கூட பைக்ல வர்றேன். நீ வேற‌ யார் கிட்டயாவது பேசி பாரு. சாரிடி ஒன்னும் நெனச்சுக்காத" சுமித்ரா இறைஞ்சும் குரலில் கூறினாள்.

"சாரி கேட்க என்ன இருக்கு? நான் பாத்துக்கிறேன். வேற எப்படியாவது வர ட்ரை பண்ணுறேன்" என அனு கூற,

"ஓகேடி நான் வெச்சிடறேன். நாளைக்கு மீட் பண்ணுவோம்" அழைப்பைத் துண்டித்தாள், சுமித்ரா.

அனுவிடம் பெருமூச்சொன்று வெளிப்பட்டது. தனியாக செல்ல அவளுக்கு பயமில்லை. முன்பு யாருமின்றி தனியாக செல்ல பயப்படுவாள். இந்த இரு மாதங்களில் கொஞ்சம் பழக்கப்பட்டிருந்தாள்.

கதிர் வெளிநாடு சென்ற பிறகு அவளுக்கான தேவைகளுக்கு அவள் வேறு யாரையும் எதிர்பார்க்காமல் தனியே செய்ய பழகிக் கொண்டாள். விரைவில் ஸ்கூட்டர் ஒன்று வாங்கிக் கொண்டால் நல்லது என்றும் நினைத்திருந்தாள்.

நண்பியின் திருமணம் தான். அவளோடு பழக்கம் என்றாலும் அவள் குடும்பத்தினரோடு இல்லையே. தனக்குத் தெரிந்த யாராவது உடன் வந்தால் நன்றாக இருக்குமே என்பதால் தான் சுமித்ராவை அழைத்தாள்.

அவள் சிந்தனையைக் கலைக்கும் விதமாக மீண்டும் அலைபேசி அலறியது. கணவனின் எண்ணைப் பார்த்ததும் அவளிதழ்கள் அனிச்சையாக விரிந்தன.

அழைப்பை ஏற்ற கணம், "ஹலோ மை டியர் பொண்டாட்டி" என்ற உற்சாகமான குரலில் அவளது கவலைகள் அத்தனையும் சூரியனைக் கண்ட பனி போல நொடிப் பொழுதில் விலகிப் போயின.

"என்ன பண்றீங்க? இப்ப தான் வேலை முடிஞ்சுதா?" என அவள் கேட்க, "இல்லம்மு. இன்னிக்கு சம்பளம் எடுத்தேன். அதை அக்கவுண்ட்ல போட்டு வரும் போது கொஞ்சம் லேட்டாகிடுச்சு" என்றவன், உடனே வீடியோ அழைப்பில் வர, இன்னும் மலர்ந்து போனாள், பாவை.

"அடடா! என் முகத்த பாத்தா அவ்ளோ ஆனந்தமா உனக்கு?" என்ற கதிருக்கும் அவள் சிரிப்பில் வேலைப்பளுவினால் ஏற்பட்ட அழுத்தம் மொத்தமாய் நீங்கிப் போனது.

"இல்லாம இருக்குமா? என் நாளோட சந்தோஷமே உங்களோட பேசுறது தான். உங்க முகத்த பாத்தா தான் சந்தோஷம் வருது" என அவள் சொல்ல,

"அது சரி டா. ஆனா நீ எப்பவும் சந்தோஷமா இருக்கனும். எனக்கு அது தான் வேணும். என்ன? எனக்காக சந்தோஷமா இருப்ப தானே?" புருவம் உயர்த்தினான், அவன்.

"சந்தோஷத்த நான் துரத்தி விடல. அது வந்தா எனக்கும் நல்லா தான் இருக்கும். கவலைப்பட்டுட்டு இருக்க எனக்கு ஆச இல்ல. சந்தோஷத்த வா வானு கூப்பிட்டாலும் வர மாட்டேங்குதே. நான் என்ன பண்ணட்டும்?" உதட்டைப் பிதுக்கினாள்.

"சந்தோஷம் உன்னோட கோபமாகிடுச்சு போல. கவலை சந்தோஷத்துக்கு எதிரி தானே? நீ கவலையோட ஃப்ரெண்ட்டா இருந்தா சந்தோஷம் உன் கிட்ட வருமா? எதிரியோட நண்பன் நமக்கும் எதிரின்னு நெனச்சு உன்ன விட்டு தூரமாகிடுச்சு. நீ கவலையை விட்டுத் தள்ளிட்டா சந்தோஷம் உன்ன தேடி வந்து அணைச்சிடும்" கதிர் பேசுவதைக் கேட்டவள்,

"இப்ப நீங்க கவலைக்கும் சந்தோஷத்துக்குமான உறவை பத்தி பாடம் எடுக்கவா கால் பண்ணீங்க? நம்ம உறவைத் தவிர எல்லாமே நல்லா பேசுறீங்க" கோபத்தில் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள், மனைவி.

"நம்ம உறவையும் பேசலாமே. சும்மா சொன்னதுக்கு போய் கடுப்பாகுவியா?" என்று கேட்டவனுக்கு அவள் தன்னைப் பிரிந்ததால் நொடிக்கு நொடி கவலைப்படுவது புரியவே செய்தது.

அதையெண்ணி மனதினுள் வருந்துவதைத் தவிர, அவனால் எதுவும் செய்ய முடியவில்லை. அவன் சென்ற நாளில் இருந்து அவள் அழுவதை அறிந்து அதைப் பற்றிப் பேசி சமாதானப்படுத்தும் போது இன்னும் கவலை கொள்வாள், அவள். அதனால் இப்போதெல்லாம் அவள் கவலைப்பட்டாலும் இன்னுமின்னும் அதைப் பேசாமல் பேச்சைத் திசை திருப்பி அவளை சந்தோஷப்படுத்த ஏதாவது பேசுவான்.

முன்பு அவள் பேச இவன் கேட்டுக் கொண்டிருப்பான். ஆனால் இப்போது அவன் தான் நிறையப் பேசுவான். அவளுக்காக அவன் தன் இயல்பு மீறிப் பேச, அவனிடம் அதிகம் பேசி தன் கவலையைக் கூறி அவனையும் வருத்தக் கூடாது என்பதால் அவள் தன் இயல்பைத் தொலைத்து அமைதியைக் கடைபிடித்தாள்.

"சரி சொல்லுங்க. சாப்பிட்டாச்சா?" என அவள் வினவ, "இதோ சாப்பாடு வாங்கிட்டு வந்தேன். கொஞ்சம் இரு" என்றவன் சென்று கை கழுவி வந்தான்.

ஃபோனை மேசை மீதுள்ள பூச்சாடியில் நிறுத்தி வைத்து விட்டு அவளோடு பேசிக் கொண்டே சாப்பிட ஆரம்பித்தான்.

"கேட்க மறந்துட்டேன் பாரு. நீ சாப்பிட்டியா அம்மு?" என்று அவன் கேட்டான்.

"சாப்பிட்டேன். இன்னிக்கு அத்தைக்கு சுகமில்ல. நான் சமைச்சு அவங்களையும் சாப்பிட வெச்சு மாத்திரை கொடுத்துட்டு வந்தேன்" என்றாள், அவள்.

"சரிடா. அம்மாவ பாத்துக்க. பாவம்"

"சரிங்க. இதெல்லாம் நீங்க சொல்லனுமா? உங்கம்மா எங்கம்மா கிட்ட உங்கள பத்தி நல்லா சொல்லுறாங்க"

"என்ன சொன்னாங்க? நல்லா தான் சொல்லிருப்பாங்க"

"எனக்கு கால் பண்ணா அத்தய பாத்துக்க சொல்லுறீங்க. அத்தை கிட்ட என்னை பாத்துக்க சொல்லுறீங்க. அதைத் தான் சொல்லி சிரிக்கிறாங்க. அவங்களுக்கு சந்தோஷம் நீங்க என்னையும் அவங்களையும் சரிசமமா பார்த்துக்குறது" அவள் முகத்தில் மகிழ்வு முகிழ்த்தது.

"அப்படி தான் இருக்கனும். இல்லனா தாயா தாரமானு கேட்டு நீங்க ரெண்டு பேரும் என்னை அங்கேயும் இங்கேயும் றப்பர் மாதிரி இழுப்பீங்க. மாமியார் மருமகள் சண்டைக்கு வேற நான் பஞ்சாயத்து பண்ண வேண்டி வரும். இதெல்லாம் எனக்கு தேவையா?"

"ரொம்ப தெளிவா தான் இருக்கீங்க. சந்தோஷம்" அவனது முகம் போன போக்கைக் கண்டு சிரித்து விட்டாள்.

"என் செல்லம்" அவளின் சிரிப்பை மனம் நிறைய ரசித்தான்.

"இன்னிக்கு ரொம்ப டயர்டா இருக்கு. அவ்வளவு வேலை" என்று அவன் சொல்ல, "அப்போ தூங்குறீங்களா?" எனக் கேட்டாள்.

"தூங்கட்டுமா? வெச்சுடவா?" என்று கேட்டதும் அவள் முகம் கூம்பியது.

"ஏய் போக மாட்டேன் டி. முகத்த அப்படி வெச்சுக்காத"

"போங்க போங்க. போறதா சொன்னீங்க" அவள் முறுக்கிக் கொள்ள, "நீ தானே போக சொன்ன" என்றான், கதிர்.

"நான் சொன்னா போயிடுவீங்களா?"

"போயிடுவேன். மன்னவன் பேச்சுக்கு மறுபேச்சு இருந்தாலும் மகாராணி பேச்சுக்கு மறுபேச்சு இருக்குமா? நான் பொண்டாட்டி சொல் தட்டாத நல்ல புருஷன்" அடக்கமாகப் பார்த்தவனை முறைத்தாள்.

"என்னது?" உஷ்ணப் பார்வை தன்னைத் தாக்க, "ஒன்னும் இல்லயே‌. சொல்லுங்க மேடம். நான் எங்யும் போகல" பவ்யமாக அவன் நின்ற தோரணையில் இதழ் கடையோரம் குறுநகை அரும்பியது.

"நல்லாவே பேசுறீங்க" என்றவள், "உங்களுக்கு டயர்டா இருக்குமேனு கவலை வர்றது உண்மை தான். அதனால தான் போங்கன்னு சொல்லுறேன். ஆனாலும் போகக் கூடாதுன்னு நெனக்கிறேன். ஏன்னா எனக்கு உங்க கூட பேசனும்.

நைட்ல மட்டும் தான் பேச கிடைக்குது. அதுவும் பேசலனா இந்த நாள் என்னவோ மாதிரி இருக்கும். என் நாளோட மனநிறைவு உங்க கூட பேசுற அந்த நிமிஷங்கள் தான். உங்கள போக சொல்லி இதையும் இழக்க நான் விரும்பல" தன்னுள்ளத்தில் தோன்றிய உணர்வுகளை வார்த்தைகளாக கோர்த்தாள்.

"எனக்கு புரியுது அம்மு. நானும் போகனும்னு நெனக்கல. டயர்ட்னு சொன்னேன் அவ்வளவு தான். என்ன கஷ்டமா இருந்தாலும் உன் கூட பேசுனா சரியாகிடும். இல்லனா தான் கஷ்டமா இருக்கும்"

"வேற என்ன?"

"நீ தான் சொல்லனும்"

"உங்களுக்கு சொல்ல ஒன்னும் இல்லையா?" என்று கேட்டவள், "நாளை எனக்கு கல்யாண வீடு. அங்கு போகனும்" என்றாள்.

"எப்படி போற?" என விசாரித்தான்.

"அதான் யோசிக்கிறேன். சுமி கிட்ட கேட்டேன். அவங்க அவங்க ஹஸ்பண்ட் குழந்தைங்க கூட போறாங்களாம். அவங்க கூட எனக்கு போக முடியாது இல்லையா?" எனக் கேட்டவளுக்கு தன்னையும் மீறி கவலை வெளிப்பட்டது.

"கண்டிப்பா போகனுமா அம்மு?" தனியாக செல்வது கவலையாக இருக்குமே என்பதால் கேட்டான்.

"ம்ம். எங்க கல்யாணத்துக்கு அவ வந்தா தானே? நான் போகலனா சரியா இருக்காது. நான் எப்படியாவது போயிட்டு வர்றேன்" என்றவளை வருத்தத்தோடு பா
ர்த்தவன், வேறு கதை பேச, அவளும் அதனை மறந்து பேசத் துவங்கினாள்.

தூரம் தொடரும்.......!!


ஷம்லா பஸ்லி
2025-05-25

 

Latest profile posts

பேய் விளையாட்டு
திகட்டாத நேசம்

அத்தியாயம் 3.

எனக்கு உன்ன சுத்தமா பிடிக்கல. நான் என் அம்மாக்கு வேண்டிதான் உன்ன தி௫மணம் பண்ணி௫க்கேன்.தேவையில்லாம உன்மனசுல எந்த ஆசையும் வளர்த்திக்காத.இந்த உலகத்திற்குதான் கணவன் மனைவியா தவிர நமக்குள்ள எதவும் கிடையாது."என்று தன் மனதில் உள்ள அனைத்தையும் அவளிடம் கொட்டிவிட்டு குளிக்கச் சென்றான் அதியன்.
Top