• Welcome to Our Site! இத்தளத்தில் எழுத விரும்புவோர் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
  • புத்தகம் பதிப்பிக்க விரும்பும் எழுத்தாளர்கள் sornasandhanakumarnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்புகொள்ளவும்.

விவாதக் காதல் - 27

Joined
Jan 15, 2026
Messages
61
விவாதக் காதல் – 27


சித்ரமகிழினி தன் பாதி முகத்தை மறைத்து இருந்த போர்வையை விலக்கியவள், “என்ன அக்கா? என்ன சொல்றிங்க நீங்க? கண்ணு, காதுன்னு பேசுறீங்க. எனக்கு ஒன்னும் புரியல” என்று குழப்பதோடு கேக்க.

"இல்ல சித்ரா. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, உன்னோட கண்ணை பார்த்து தான் என் தம்பி..." என்று சசி உண்மையை சொல்ல வருவதற்குள்,

“அக்கா” என்று சசியை அழைத்த கொடி, "வேண்டாம்" என்றபடி தலை அசைத்தான்.

கொடியின் செயலை கவனிக்காத மகிழினி, “என்னாச்சு அக்கா? எதாவது பிரச்சனையா?” என்று கேட்டாள்.

“அது, அது ஒன்னும் இல்ல சித்ரா, நீ படுத்துக்கோ. நான் போய் தண்ணி கொண்டு வரேன்” என்று சொன்னவள். அந்த அறையில் இருந்து வெளியேறினாள்.

“என்னாச்சு இவங்களுக்கு? ஏங்க, சசி அக்கா என்ன சொல்ல வராங்க?” என்று அவனிடம் கேட்டாள்.

இதுவரை, கோவம், கண்ணீர், வீம்பு, நட்பு என்று பல பரிமாணங்கள் கலந்த விழிகளுக்கு சொந்தக்காரியாக தெரிந்தவளின் விழிகள், இவனுக்கு இன்று, இந்த நொடி, தன் மனதில் ஆயிரம் மாற்றங்களை நிகழச் செய்ததை உணரத் தொடங்கினான் கொடிவீரன்.

“ஹலோ சார். உங்கள தான் கேக்குறேன். என்னாச்சு, ஏன் அக்கா ஏதோ சொல்ல வந்து. எதையும் சொல்லாமலேயே போறாங்க. எதாவது பிரச்சனையா?” என்று மீண்டும் மகிழினி கேக்க.

அவளை உள் வாங்கிய இவன் கண்களுக்கு, செவிகள் கேக்கும் திறனையும், இதழ்கள் பேசும் வார்த்தையும் மறந்து இருந்த நிலையில்,

“சரி. என்னமோ போங்க, அக்காவும் தம்பியும் என்னமோ என்கிட்ட இருந்து மறைக்கிறிங்க. ஹ்ம் கத்திரிக்காய் முத்துனா சாம்பார்ல வராமல் போகுமா என்ன?” என்று மகிழினி சொல்லிக்கொண்டே தன் காது மெஷினை கழட்டி மேசை மேல் வைத்து, “குட் நைட் சார்” என்றவள், கண்கள் மூடி கட்டிலின் ஓரமாக படுத்துக்கொண்டாள்.

சில நொடிகள் தன்னை இவள் மொத்தமாக அவள் கண்களால் சிறை பிடித்து விட்டாள் என்ற உண்மையை உணர்ந்த கொடிவீரன், மனதளவில் மகிழிச்சி அடைய, அறையின் விளக்கை அணைத்த பின், கதவை சத்தமில்லாமல் மூடிய நிலையில், சோபாவில் வந்து அமர்ந்தான்,

“டேய், என்னடா நீ. ஏன் சொல்ல வேணான்னு சொன்ன? சித்ரா தான் நீ ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி பார்த்த பொண்ணுன்னு அவகிட்ட சொல்லிருந்தா...”

“காரி என் மூஞ்சுல துப்பி இனி என்கூட சுத்தமா பேசாம இருந்துடுவாங்க.”

“என்னடா சொல்ற,?”

“ஆமா அக்கா. அவங்களுக்கு அதெல்லாம் பிடிக்காது.”

“டேய், இதுல பிடிக்க என்னடா இருக்கு.”

“அக்கா, அவங்க என்கூட சகஜமா பேச ஆரம்பித்ததே. எனக்கு ஒரு மஞ்சள் நிற ரோஜாவை அன்பளிப்பா தந்த பின்னாடி தான். அதாவது, நமக்குள்ள நட்பு மட்டுமே இருக்கனும்ன்னு அவங்க எனக்கும் தெரியப்படுத்தி, அவங்களுக்கும் அதை தெளியப்படுத்திக்குறாங்க. அப்படி இருக்கும் போது, எனக்கு அவங்க மேல அதை தாண்டி ஒரு ஈர்ப்பு இருக்குன்னு தெரிந்தா, அது நல்லா இருக்காது அக்கா.”

“நீ சொல்றது எனக்கு புரியலடா. இப்போ என்ன நீ அவளை கா...”

“ஐயோ அக்கா. சத்தியமா இது வரை அப்படியெல்லாம் ஏதும் இல்ல.”

“இதுவரைனா? அப்போ இனிமே,??” கேள்வியாய் நிறுத்தினாள் சசி.

“இனிமே அப்படி இருக்க சாத்தியமான்னு தெரியல.” என்றான் யோசனையாக.

“நான் வேணா, நம்ம அம்மாகிட்ட சொல்லி, சித்ராவை அவங்க பாட்டிகிட்ட உனக்கு கல்யாணம் பண்ண சம்மதம் கேக்க சொல்லவா?”

“அம்மா இதுக்கெல்லாம் ஒத்துப்பாங்களா அக்கா?” என்று சிறு எதிர்பார்ப்புடன் கேட்டான் கொடிவீரன்.

“என்ன, என்ன இங்க என் பெயர் அடிபடுது?” என்றபடி ஜெயா இவர்களை நோக்கி வர,

“ஐயோ அம்மா” என்று அலறினான்.

என்னடா, அக்காவும் தம்பியும் ராக்கொள்ளைகாரங்க போல இங்க உக்காந்து பிளான் போடுறீங்க. என்ன மேட்டர்?”

“ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா. அக்கா நீ போய் தூங்கு. அம்மா நீங்களும் போங்க.” என்று வேகமாக எழுந்து நடக்க ஆரம்பித்தான்.

“டேய் நில்லு” என்று தாய் அதட்டியதும் அவன் நிற்க, “உக்காரு இப்படி.” என்று தன்னருகே அமர வைத்து, “சசி என்னாச்சு? என்ன பேசிகிட்டு இருந்திங்க. இவன் ஏன் நான் சம்மதிப்பேனான்னு கேட்டான்? என்ன வெளிநாட்டுக்கு எங்காவது போக போறானா என்ன?” என்று மகளிடம் கேட்டார்.

“அதெல்லாம் இல்லம்மா, ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி, நம்ம ஊருக்கு மெடிக்கல் கேம்புக்கு வந்த நர்ஸ் பொண்ணோட கண்ணை பார்த்து உன் புள்ள பீல் ஆகிட்டான்.” என்று அவனை மாட்டிவிட்டாள்

“நர்ஸ்கு பொண்ணா. அப்போ அந்த பொண்ணு குழந்தையா?” என்று அதிர்ந்து கேட்டார் ஜெயா.

“எம்மா தாயே. நர்ஸ்கு பொண்ணு இல்ல. நர்ஸ் அவ்வளவு தான்.”

“ம்... சரி. இப்போ என்ன நான் போய் அந்த பொண்ணு வீட்ல இவனுக்காக பொண்ணு கேட்கணுமா. நான் ரெடி தான். பொண்ணு எந்த ஊரு? என்ன பெயரு? அவங்க இப்போ எங்க இருக்காங்க?”

“பொண்ணு சென்னை. பெயர் சித்ரமகிழினி. இப்போ அவங்க இந்த வீட்டுல தான் இருக்காங்க.” என்று புன்னகையுடன் சொன்னாள்.

“ஏய் என்னடி சொல்ற.!?”

“ஆமாம்மா. உன் பையன், நம்ம சித்ரா கண்ணை பார்த்துதான் பித்து பிடிச்ச மாதிரி இருந்துருக்கான்.” என்று தம்பியைப் பார்த்தாள்.

“அக்கா, அதெல்லாம் ஒன்னுமில்ல. அம்மா, அக்கா ரொம்ப பில்டப் பண்ணுது.” என்றான் வேகமாக.

“டேய் கொடிவீரா! உண்மையாவாடா? உனக்கு சித்ராவை பிடிச்சி இருக்கா?”என்றவர் குரலில் அவ்வளவு ஆர்வம்.

“அச்சோ அம்மா. இதுவரை அப்படி ஒரு எண்ணம் எல்லாம் இல்ல. ஆனா...”

“என்ன ஆனா?” என்றாள் சசி.

“இல்லக்கா. நம்ம எதாவது நம்ம பிரியத்தை சொல்ல போய், அவங்க நம்மள தப்பா நினைச்சுட்டாங்கனா என்ன பண்ணுறது?”

இதுல தப்பா நினைக்க என்ன இருக்குடா தம்பி.?”

“அதானே. நம்ம நம்மளோட விருப்பத்தை சொல்லுறோம். சரினா சரின்னு சொல்லட்டும். இல்லைனா இல்லைனு சொல்லட்டும். இதில் என்ன?” என்றார் ஜெயா.

“அம்மா அப்போ உங்களுக்கு...” என்று முடிக்காது நிறுத்தினான் கொடிவீரன்.

“டேய், எனக்கும் சித்ராவை ரொம்ப பிடிக்கும்டா. அவளை நான் இதுநாள் வர என்னோட இன்னோரு மகளா தான் நினைச்சேன். இனி அவ என் மருமகளா மாற, என்ன பண்ணணுமோ அதை பண்ணுறேன். நீ கவலைப்படாத. போ போய் தூங்கு” என்றார்.

“அம்மா, நீ செம்ம ஷார்ப்தான் போ. அப்புறம் என்னடா தம்பி. உன் ரூட் கிளியர் தான். இனி பக்குவமா அம்மாவே சித்ராகிட்ட பேசி விஷயத்தை ஸ்மூத்தா முடிச்சு வைப்பாங்க. போ போய் தூங்கு” என்றாள் சசி.

“ம்... சரிக்கா. அம்மா நீங்களும் போய் நேரத்தோடு படுங்க” என்று சொன்னவன் மனதில் இனம் புரியாத மகிழ்ச்சியோடு, தன் அறைக்குள் நுழைந்து, படுக்கையில் சரிந்தான்.

மறுநாள் காலை கொடிவீரன் உறங்கி கொண்டு இருந்த அறையின் ஜன்னல் வழியே, குயில்கள் கூவும் சத்தம் கேட்டு, இரண்டு கரங்களையும் சூடு பறக்க தேய்த்து, தன் முகத்தை வருடியப்படி கண்களைத் திறந்தவன் கண் எதிரில், எல்லாம் வல்ல ஈசனின் காட்சி தோன்ற, அவன் மனதில் மட்டும் அப்பட்டமாக மகிழினியின் நினைவுகள் நிறைந்து இருந்ததை உணரந்தான்.

அவள் நினைவை மனதில் சுமந்தபடியே குளியல் அறை சென்றவன், சில நிமிடங்கள் கடந்த நிலையில், நீல நிற சட்டையும், அதற்கு பொருத்தமாக நீல நிற சரிகை வேஷ்டியும் உடுத்தி கொண்டு, கண்ணாடி முன் நின்று தன் சிகையை சரி செய்தவன் கண்களுக்கு, முகம் காட்டும் கண்ணாடியும் தன்னவளின் வதனத்தை ப்ரதிபலிக்க, தனக்குள் சிரித்து கொண்டான். மேசை மேல் இருந்த சின்ன ரப்பர் பேன்ட் எடுத்து தன் முடியை ஒருசேர சேர்த்து, அதை இறுக்கமாக கட்டிக்கொண்டு, தன் அறையில் இருந்து வெளியே வந்தவனின் கண்கள், முதலில் தேடியது என்னவோ மகிழினியை தான்.

“டேய் தம்பி. என்னடா, நாளைக்கு எனக்கு கல்யாணமா? இல்ல உனக்கு கல்யாணமா? மாப்பிள்ள கணக்குல டாப்பா கிளம்பி வந்துருக்க? என்ன சமாச்சாரம்?” என்று சசி கிண்டல் செய்ய.

‘அவளை சம்சாரம் ஆக்கத்தான்’ என்று மனதில் நினைத்த நொடி இன்பமாய் அதிர்ந்து, அந்த எண்ணத்தை எண்ணி மானசீகமாக தலையில் கொட்டி, பின், “அக்கா, கொஞ்சம் சும்மா இருக்கியா? ஆமா எங்க வீட்டுல யாரையும் காணோம்? நீ ரெடி ஆகலையா? மணி ஆச்சு பாரு” என்றவன், சசியின் அறையை மட்டுமே பார்த்துக்கொண்டு இருந்தான்.
 
Joined
Jan 15, 2026
Messages
61
“சரிடா. நீ போய் போன் பண்ணி அந்த வேன்காரன் எப்போ வருவான்னு கேளு. நான் சித்ரா கிளம்பிட்டாளான்னு பாக்குறேன்” என்றவள் தன் அறைக்குள் சென்றதும், கொடி ஏமாற்றமாக தன் கைபேசியை எடுத்து கொண்டு வெளியே சென்றவன், வேன் டிரைவரிடம் பேசிய பின் மீண்டும் வீட்டுக்குள் நுழைந்தான்.

“கொடி, நீ இங்க தான் இருக்கியா?” என்று ஜெயா பதட்டமாக கேட்டார்.

“என்னம்மா? என்னாச்சு?” என்று கொடி புரியாமல் கேட்டதும்,

“இல்லடா. மாப்பிள்ள ஊருல, நம்ம சசிக்கு கோவில்ல நடக்க இருக்குற கல்யாணம் நல்லபடியா முடிஞ்சா, நான் அந்த ஊர் கோவில் உண்டியல்ல மாங்கல்யம் போடுறதா வேண்டிக்கிட்டேன். ஆனா, இந்த ஜோசியர் உடனே உன் அக்கா கல்யாணத்தை முடிக்கணும்னு சொன்னதால, நான் அந்த வேண்டுதலையே மறந்துட்டேன். அதான், இப்போ நினைவுபடுத்தி பார்த்துட்டு உடனே உன்கிட்ட ஓடி வந்தேன்” என்றார் ஜெயா.

“அம்மா, இப்போ வர நீங்க என்ன சொல்றிங்கன்னு எனக்கு புரியல. என்ன தாலி? என்ன வேண்டுதல்?” என்று கொடி குழம்பிய மனநிலையில் கேள்வி கேட்டான்.

“தம்பி, உங்க அம்மா, கோவில் உண்டியல்ல ஒரு தாலி காணிக்கையா போடுறேன்னு வேண்டிகிட்டாங்கலாம். அதான் உன்னை போய் உடனே ஒரு மாங்கல்யம் வாங்கிட்டு வர சொல்லறாங்க” என்று மகிழினியின் பாட்டி விஷயத்தை தெளிவுப்படுத்தினார்.

“இவ்ளோ தானா விஷயம். சரிம்மா. நீங்க எல்லாம் மாப்பிள்ள ஊருக்கு வேன்ல போகும் போது, நான் பைக்ல உங்க கூடவே வந்து, போற வழியில ஒரு மாங்கல்யத்தை வாங்கிகிட்டு, நேரா மாப்பிள்ள ஊருக்கு வந்துடுறேன்” என்றான்.

“ஏம்மா ஜெயா, அந்த ஊருல போய், நம்ம எல்லாம் எங்க தங்குவோம்?” என்று பாட்டி கேட்டார்.

"பாட்டி. அதெல்லாம் நம்ம ஆளு பக்காவா இடம் ரெடி பண்ணி வச்சிட்டாரு. நீங்க கவலைப்படாதீங்க” என்று சொல்லிக்கொண்டே சசி அவள் அறையில் இருந்து வந்தவளின் முகத்தில் கல்யாண கலை கூடி இருந்ததை பார்த்து ஜெயா கண்கள் கலங்கினார்.

“என்னம்மா, என்னாச்சு? என்று சசி புரியாமல் கேட்டதும்.

“அக்கா, உன் அழகை பார்த்து அம்மா கண்ணு கலங்குறாங்க.” என்று கொடி கிண்டல் செய்தான்.

“ஆமா. இது என்ன கல்யாண வீடு மாதிரியே இல்லையே. என்ன இது, ஒரு பாட்டு இல்ல, ஒரு டான்ஸ் இல்ல. அட்லீஸ்ட் ஒரு போட்டோ ஷூட் கூட இல்ல. சுத்த கஞ்ச பசங்க போல நீங்க.” என்று சொல்லிக்கொண்டே சமையல் அறைக்குள் இருந்து மசால் வடை, சாரி முருங்கை வடையை தின்னுக்கொண்டே வேணு அங்கு வந்தான்.

“டேய் குட்டி பையா. நீ கேக்குற எல்லாமே மாப்பிள்ள ஊருல உனக்கு கிடைக்கும்” என்று ஜெயா சொல்ல,

“சரி சரி. அம்மாடி சசி, பூ எடுத்து வச்சிக்கோடா. ஆமா எங்க சித்ரா?” என்று பாட்டி கேட்டார்.

“அதோ அத்த அங்க இருக்காங்க.” என்று வேணு சொன்னதும்,

மஞ்சள் நிற சீலையில், அலங்காரமே தேவைப்படாத தேவதையை போல, கையில் காபி கப்புகளுடன், சமையல் அறையில் இருந்து வெளியே வந்த மகிழினி, “எல்லோரும் காபி எடுத்துக்கோங்க” என்று அனைவர் முன்னிலையிலும் தட்டை மேசை மேல் வைத்தவள், கொடியை பார்த்து நட்பின் அடிப்படையில் சிறு புன்னகையை உதிர்த்தாள்.

“சசி, போய் பூ எடுத்துட்டு வா” என்று ஜெயா சொல்ல, சசி கொண்டு வந்த பூ சரத்தை ரெண்டாக பங்கிட்ட ஜெயா, ஒரு பாகத்தை சசியின் கூந்தலில் சூட்டியவர், மற்றுமொரு பாகத்தை மகிழினியின் கூந்தலை நோக்கி எடுத்து செல்ல,

“அம்மா வேணாம்” என்று மகிழினி பதறியதும். கொடியின் முகம் மாறி போனது.

“என்ன வேணாம். பேசாம இருக்கனும். அது என்ன பொம்பள பிள்ளைங்க பூ வேணான்னு சொல்லுறது. திரும்பு அந்த பக்கம்” என்ற உரிமையான கோபத்துடன் சொன்ன ஜெயா, தன் கரங்களால் மகிழினியின் கூந்தலில் பூவை சூடி விட்டார்.

“பாட்டி, பூ அவ்ளோ தானா? இல்ல வேற இருக்கா?” என்று வேணு கேக்க,

“ஏன்டா. நீ யாரு காதுல பூ வைக்க போற” என்று சசி கிண்டலாக கேட்டாள்,

“பூ வைக்க இல்ல. பூ சுத்த போறேன்” என்று வேணு பதில் அளித்தான்.

“யாருக்கு பூ வைக்க போற?” என்று மகிழினி புரியாமல் கேட்டாள்.

“வேற யாருக்கு, இதோ இந்த மாமா குடுமிக்கு தான்” என்று வேணு சொன்னதும், சத்தமாக சிரித்த மகிழினியின் புன்னகைக்கு தன்னை அடிமை சாசனம் எழுதி தந்தவனாக, அவள் கண்களை பார்த்தபடி அவள் முன் உயிருள்ள சிலையாக நின்று இருந்தான் கொடி வீரன்.

“சரி காபி குடிச்சிட்டு கிளம்புங்க. வேன் வர நேரம் ஆச்சு” என்றாள் சசி.

“அக்கா, நான் கோவிலுக்கு போகணும்னு சொன்னேனே” என்று மகிழினி சொல்ல,

“ஹாங், வேன் வரதுக்குள்ள, நீ வேணா என் தம்பி கூட பைக்ல கோவிலுக்கு போயிட்டு வந்துடேன்” என்று சசி சொன்னதும், மகிழினி தயக்கமாக கொடி வீரனை பார்த்தாள்.

“அக்கா, அவங்க பைக்ல எல்லாம் வர மாட்டாங்க. நான் வேணா, வேன் டிரைவர் கிட்ட சொல்லுறேன். நீங்க இங்க இருந்து போகும் போது, அப்படியே கோவிலுக்கு போயிட்டு கிளம்பிடுங்க” என்றான் கொடிவீரன்.

தம்பியின் காலை அழுத்தி ஒரு மிதி மிதித்து, முறைத்த தம்பியிடம், “டேய் அறிவை அலமாரியில வச்சவனே. நீ எல்லாம் என்னடா ஆம்பள புள்ள” என்று பொறுமையாக கடிந்து கொண்டாள்,

“என்ன அக்கா, ஏன் என்னை திட்டுற?” என்றவன் சசியை பார்த்து முறைக்க,

“டேய், அவ உன் கூட வர மாட்டேன்னு சொன்னாளா? நீயா ஏன்டா, உன் ஓட்டை வாயை வச்சிக்கிட்டு தேவையில்லாதை எல்லாம் பேசுற” என்ற சசி மீண்டும் அவனை முறைக்க,

“இல்லக்கா. அவங்க அப்படி தான் சொல்லுவாங்க. எனக்கு அவங்கள பற்றி தெரியும்” என்று தயங்கியபடி சொன்னான்.

“இங்க பாரு தம்பி. வேன் எல்லாம் போற வழியில நிறுத்துறதுக்கு இல்ல. நீ வேணும்னா ஒன்னு பண்ணு. சித்ராவை அழைச்சிட்டு, நேரா கோவிலுக்கு போய்ட்டு, அப்படியே இவ கூட நகை கடைக்கு போய், சாமிக்கு சாத்த வேண்டிய மாங்கல்யத்தை வாங்கிகிட்டு, நேரா மாப்பிள்ள ஊருக்கு வந்துடு. நாங்க இங்கே அக்கம் பக்கம் இருக்குற எல்லோரையும் அழைச்சிட்டு வேன்ல வந்துடுறோம்” என்று ஜெயா புது வழியை சொன்னார்.

“என்னம்மா சொல்றிங்க? நான் எப்படி இவர்கூட தனியா போறது?” என்று மகிழினி தயங்கியப்படி கொடியை பார்த்தாள்.

“நீங்க தனியா போக வேணாம். கூட இந்த வேணு குட்டியை அழைச்சிட்டு போங்க” என்று ஜெயா சொல்லி சசியை பார்த்து கண் அடிக்க,

“ஆமா ஆமா, நேரமாகுது சீக்கிரமா கிளம்புங்க” என்று சசியும் அவள் பங்குக்கு அவசரப்படுத்தினாள்.

மகிழினி தன் பாட்டியை பார்க்க, “போய்ட்டு வாமா.” என்றார் அவரும்.

“ம், இருங்க நான் போய் பர்ஸ் எடுத்துட்டு வரேன்” என்று சொன்னவள், வேகமாக சசியின் அறைக்குள் நுழைய,

“எப்புடிடா, அம்மாவோட பிளான்?” என்று ஜெயா தன் பையனை கட்டிக்கொள்ள, பாட்டியை பார்த்த கொடி தயங்கியபடி, ‘பாட்டி...’ என்று ஏதோ சொல்ல வரும் முன்பு,

“நேத்து நைட்டு ஜெயா என்கிட்ட உன் விஷயத்தை பற்றி சொன்னாங்கபா. எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல. எல்லாம் அந்த ஈசனின் அருள்னு தான் நினைக்க தோணுது. என் பேத்திக்கு இப்படி ஒரு குடும்பம் கிடைக்க அவ புண்ணியம் தான் பண்ணிருக்கணும். “என்ற பாட்டி தன் ஆனந்த கண்ணீரை துடைத்து கொண்ட தருணம்.

“ம், நான் ரெடி தான். வேணு போ. போய் செருப்பை போடு. அக்கா, வேன் வந்ததும், நாங்களும் இந்த பொருளை எல்லாம் வண்டியில ஏத்தி விட்டுட்டே கோவிலுக்கு கிளம்புறோம்” என்று சொன்னவள், கொடிவீரனை பார்த்து கண்களால் சரிதானே என கேட்டாள்.

அவனும், ‘ம்.’ என்று தலை அசைக்க, அதே நேரம், வாசலில் வேன் வரும் சத்தம் கேட்டது.


விவாதம் தொடரும்...
 

Latest profile posts

@Administrator குறுநாவல் போட்டி முடிவு எப்போது வரும்?
வணக்கம் தோழமைகளே,
'நிலவாக உனக்குள்' அத்தியாயம் -5 பதிப்பித்துள்ளேன்.
ஹாய் மக்களே🥰 !

ஆதவனின் ஐஸ்வர்யம் - 1வது அத்தியாயம் போட்டிருக்கேன் படிச்சு பாத்து எப்படி இருக்குனு உங்க பொன்னான கருத்துக்களை சிந்திவிட்டுட்டு போனா அடியேன் மகிழ்வேன்:):)

என்னவரின் அன்பில் நிறைவு அத்தியாயம் Posted.

Top