- Joined
- Aug 31, 2024
- Messages
- 956
- Thread Author
- #1
29
மறுநாளே அறிவழகன் தாயிடம் அவ்விஷயத்தைச் சொல்ல, மறுக்கவில்லை எனினும், “சரிவருமா?” என்று அபிராமி கேட்க, “இதைவிட எதுவும் சரிவராதும்மா” என்றான் மகன்.
“அப்ப மதி, ஷண்மதிகிட்ட கேளு” என்று தன் சம்மதத்தைத் தர, நேரே அண்ணன், அண்ணியிடம் சென்றவன் தன் எண்ணத்தைச் சொல்ல, ஷண்மதி முகத்தில் மலர்ச்சியும், மதியழகன் முகத்தில் குழப்பமும் வந்தது.
“அறிவு, இப்ப உள்ளவங்கன்னா இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை. இவங்க விஷயத்துல நிறைய நடைமுறைச் சிக்கல் இருக்கு” என்றான் சைகையில்.
“தெரிஞ்சிதான அண்ணா இறங்கியிருக்கேன். அண்ணி சம்மதிச்சா போதும். அவங்களே பாதி பார்த்துக்குவாங்க” என்றான்.
“நான் ரெடி அறிவு. இப்ப வேணும்னாலும் போகலாம்” என்று எழப்போக,
“நாளைக்கு எல்லாரும் இருக்கிறப்பப் பேசிக்கலாம் அண்ணி” என்று எழுந்தவன் கண்ணில், தொட்டிலில் படுத்திருந்த குழந்தை விழுந்து, கருத்தைக் கவர்ந்து, கொஞ்சிட ஆசை எழுந்தபோதிலும், இது அவர்களுக்கேயான குழந்தை என்பதை மனதில் கொண்டு காணாதது போல் வந்துவிட்டான்.
மொத்தக் குடும்பமும் அபிராமி வீட்டு வரவேற்பறையில் இருந்தனர். சாரதா மடியில் குழந்தை இருக்க, அவருக்கு அருகில் அபிராமியும், அரவிந்தும் அமர்ந்திருந்தனர். அவர்களுக்கு எதிரே ஆனந்தன், மதியழகன், ஷண்மதி இருக்க, இரு இருக்கைக்கும் இடையே உள்ள இடத்தில், இரட்டை இருக்கையைப் போட்டு அறிவழகன், அனுரதி அமர்ந்திருந்தார்கள்.
முதலில் யார் ஆரம்பிப்பது என்றே சில நிமிடங்கள் ஓட, “என்ன மருமகனே பேசணும்னு கூப்பிட்டு...” ஆனந்தன், சாரதா இருவரும் ஒன்றுபோல் கேட்டு பின் சிரித்து நிறுத்த, “எதுக்காகக் கூப்பிட்டீங்க?” என்று திரும்பவும் ஒன்றாகக் கேட்டு நிறுத்த, சுற்றியுள்ளோர் பார்வை அவர்கள் மீது ஆர்வமாகப் படிவதை அறியவில்லை.
“நீங்களே கேளுங்க.” “இல்லை நீங்களே கேளுங்க” என இருவரும் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்தனர்.
“நீங்க இரண்டு பேரும் கேட்க வேண்டாம். நானே சொல்றேன்” என்ற அறிவழகன், “அத்தை! மலர்க்குட்டி மாமா வீட்டுக்குப் போயிட்டா, அவங்க கூடவே இருந்து பார்த்துக்க, அனுபவசாலி ஓருத்தர் இருந்தா நல்லாயிருக்கும்ன்றது எங்க எண்ணம்” என்றான்.
“நான் பார்த்துக்குறேன் மருமகனே” என்று இருவரும் ஒன்றுபோல் சொல்ல,
“உங்களுக்கு பிரஷர் இருக்கு மாமா. குறிப்பிட்ட நேரம் தாண்டி ஓய்வெடுத்துதான் ஆகணும். குழந்தை பின்னாடி ஓடவும் முடியாது. அப்புறம் அத்தை நீங்க இங்க இருக்கிறவரை பார்த்துக்கலாம்தான். அவங்க தனியா போன பிறகு? அப்பதான் குழந்தைக்கு அனுபவசாலி ஒருத்தர் தேவை.”
“நீங்க சொல்றதும் சரிதான். அதே நேரம் குழந்தையையும் பார்க்கணுமே. நம்ம இருக்கிறப்ப வெளிய பார்க்கிறது தப்பு. மீறி பார்த்தாலும் குழந்தையை எந்தளவு கவனிப்பாங்க தெரியலை. நிறைய இடத்தில் கேள்விப்படுறது தப்பாவே இருக்கு. என்ன செய்யலாம்?” என்ற சாரதா யோசிக்க ஆரம்பிக்க,
“பேசாம ஆனந்தன் அப்பாவை கல்யாணம் செய்துக்கோங்கம்மா” என்று சாதாரணமாக சொன்னார்கள் அனுரதி, அரவிந்த் இருவரும்.
“ஆமாப்பா. எனக்கும் இதில் மனப்பூர்வமான சம்மதம். ஏன் ஆசைன்னும் சொல்லலாம்” என்று ஷண்மதியும் சொல்ல,
“என்ன விளையாடுறீங்களா?” என்று கத்தி எழுந்துவிட்டனர் ஆனந்தன், சாரதா இருவரும்.
“அனு, அரவிந்த் எதெதுல விளையாடுறதுன்னு இல்லையா? நீங்க புரட்சி பண்ண இதொண்ணும்...” என்ன சொல்லியிருப்பாரோ சட்டென்று நிறுத்தி, “குழந்தையைப் பார்த்துக்க ஆயிரம் வழியிருக்கு” என்றார் சாரதா காட்டமாக.
“அது எதுவும் சரியில்லைன்னு சொன்னீங்களே அத்தை. அதோட நாங்க புரட்சி பண்ணலை. அதுக்கு அவசிய இல்லைன்றது எங்களுக்குத் தெரியும். ஒரே வீட்டுல இருந்தா பலவித பேச்சு கிளம்பும். குழந்தை எந்தளவு முக்கியமோ அந்தளவு நீங்களும், மாமாவும், உங்க கௌரவமும் முக்கியம் அத்தை. அதான் கல்யாணம் பண்ணிக்க ஐடியா கொடுத்தேன். அதுகூட நீங்க அண்ணிகிட்ட அம்மான்னு கூப்பிடச் சொல்லி உரிமை கொடுத்தப்பதான் தோணிச்சி. இதில் எங்க எல்லாருக்கும் சம்மதம்” என்றான் அறிவழகன்.
“இல்ல நீங்க என்னதான் சொன்னாலும் என்னால முடியாது. இதெல்லாம் வார்த்தைக்கு சரி. வாழ்க்கைக்கு?” சாரதா தன் பிடித்தமின்மையை வார்த்தைகளில் காட்ட, ஆனந்தனின் அமைதியைப் புரியாது கண்டார்கள்.
அரவிந்த் எழுந்து ஆனந்தனின் முன் மண்டியிட்டு அமர்ந்து, “நான் பிறந்ததில் இருந்து அப்பாவைப் பார்க்காதவன் இல்ல. அவர் அன்பை அனுபவிக்காதவனும் இல்ல. நல்லா விவரம் தெரியவும்தான் அப்பா இறந்துட்டார். பணம், வசதின்னு ஒரு குறையும் வைக்கலை. அவர் இல்லைன்றதை எப்ப உணர்ந்தேன் தெரியுமா?” குரல் கலங்க நிறுத்தியவன், தொண்டையை சரி செய்ய அனைவரும் அவனையே பார்த்திருந்தனர்.
“என் அக்காவோட அந்தக் கல்யாணத்தில்தான் என் அப்பாவைத் தேடினேன். அப்பா இருந்திருந்தா தன் பொண்ணுக்கு, நல்லவனா, பொண்ணை பூவா பார்த்துக்குவானான்னு பல இடத்தில், பல பேர்கிட்ட விசாரிச்சிருப்பார்ல? எனக்கோ, அம்மா, அக்காவுக்கோ வெளி உலகம் பற்றித் தெரியலை. அதனாலதான் ஒருத்தன் ஈஸியா ஏமாத்திட்டான். என்னதான் நாலுநாளோட போச்சினாலும், அக்காவை அந்த நிலையில் நேரில் பார்த்தப்ப...” சட்டென்று உடைந்து அழுதான் அரவிந்த்.
விவரம் தெரிந்த அனைவருக்குமே கண்கலங்க, ஷண்மதி கணவனிடம் என்னவென்று கேட்க, அவனுக்குமே தெரியாதென்பதால், பிறகு சொல்வதாகச் சொல்லி மழுப்பிவிட்டான். அனுரதி வாழ்வில் எதோ பெரிதாக நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது அவனுக்கு.
அனுரதியும், ஆனந்தன் எதிரில் வந்து தம்பி அருகில் அமர்ந்து, கண்ணில் நீருடன் அவன் தோளணைக்க, “சாரிக்கா” என்றான் அழுகை குறையாது.
“அரவிந்தா” என்றவளுக்கும் அதற்குமேல் பேச்சு வரவில்லை.
சட்டையில் கண்ணீர் துடைத்தவன், “அ...அந்த நிமிடம் நான் தேடிய உறவு அப்பாதான். அப்பா இருந்திருந்தா இப்படியாக விட்டிருக்க மாட்டாரேன்ற குற்றவுணர்ச்சி. ஒருவேளை அவன் அப்பாவையும் மீறி ஏமாத்தி முடிச்சிருந்தாலும், நாலுநாள் கண்டுக்காம இருந்திருக்கமாட்டார். மறுநாளே பொண்ணுக்கு எதோ பிரச்சனைன்னு உணர்ந்து நேரே வீட்டுக்கே போயிருப்பார். நாங்க அதை செய்யாம விட்டதுதான்...”
“ப்ச்... அரவிந்தா” என்று தம்பியின் கண்ணீர் துடைத்து, “நீ சின்னப்பையன்டா. உன்னளவு சரியாதான் செய்த. நானே உன் பொறுப்பை நினைச்சி ஆச்சர்யப்பட்டிருக்கேன். நீ போய் கலங்கலாமா? அது உன் தப்பில்லைடா” என்றாள் அனுரதி.
“நீங்க என்ன சொன்னாலும், நான் தப்புதான். எனக்கு அப்பா வேணும். அப்பா இருந்தா அகிலத்தையும் வளைக்கலாம். என்னைக் கண்டிக்க, என்கிட்ட பாசம் காட்ட, வாழ்க்கையைக் கற்றுக்கொடுக்க அப்பா வேணும்கா. அப்பா வேணும்” என்று அக்காவின் தோள்சாய்ந்து அழுதான்.
“அனு, அரவிந்த்கு அப்பாவா இருக்க நான் சம்மதிக்கிறேன்” என்று சத்தமாகவே சொன்னார் ஆனந்தன்.
சந்தோச மிகுதியில் அனுரதி, அரவிந்த் இருவரும் எழுந்து அவரைக் கட்டிக்கொள்ள, சாரதா மட்டும் முகம் இறுக அமர்ந்திருந்தார். மகன் கேட்பது அப்பாவை மட்டுமில்லையே. தனக்குக் கணவனுமாகிற்றே! இத்தனை வயதிற்குப் பின், அதுவும் கணவனுடன் நிறைவாய் வாழ்ந்தவருக்கு மனம் ஒப்ப மறுத்தது.
அபிராமி சாரதாவிடம் இருந்து குழந்தையைத் தூக்கிக்கொள்ள, தாயிடம் வந்த அனுரதி, அவர் கைபிடித்து, “உங்க உணர்வுகளை மதிக்காமல் இல்லம்மா. நீங்க அப்பா கூட வாழ்ந்த வாழ்க்கையை தெரியாதவங்க கிடையாது நாங்க. இதுல புரட்சி எங்கேயும் இல்லம்மா. அப்படிப் பார்த்தா, என்னை மாதிரிப் பொண்ணை கல்யாணம் செய்த உங்க மருமகனைப் புரட்சி செய்ததா சொல்லலாமா?”
“அனு” என்ற அதட்டல் நாலாபுறம் இருந்தும் வர, கணவனோ கண்களால் மிரட்ட, ‘ப்ளீஸ்ங்க. அம்மாவுக்காக கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க’ என்று கண்களால் கெஞ்சி அவனை சாந்தப்படுத்தி, தாயிடம் திரும்பியவள், “சொல்லுங்கம்மா?” என்றாள்.
“மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சி போடுற அனுமா” என்றார் எரிச்சலாக.
“முடியில்லாம எப்படி முடிச்சிப் போடுறது?” ஷண்மதி கேட்க, அதில் சாரதா தவிர அனைவரும் சூழ்நிலை மறந்து சிரிக்க, “அதனால்தான் முடிச்சி போடாதீங்க சொல்றேன். அவங்கவங்க இடத்தில் இருங்க” என எச்சரித்தார் சாரதா.
“அதெப்படி?” என்று தாயின் மடியில் அரவிந்த் தலைவைத்துப் படுக்க, சாரதா அவனைத் தள்ளிவிட, வலுக்கட்டாயமாக மடியில் படுத்தவன், “ஒவ்வொரு நாளும் உங்களை தனியா விட்டுட்டுப் போகும்போது பயமாயிருக்கும்மா. இப்பவே அப்படின்னா, எனக்குக் கல்யாணத்துக்குப் பார்க்கிறப்ப, வர்ற பொண்ணு உங்களை நல்லா பார்த்துப்பாளா தெரியாது. பொண்டாட்டிதான் முக்கியம்னு நான் சுயநலமா யோசிச்சிட்டா?”
“அப்படியெல்லாம் செய்ய மாட்டடா.”
“நான் யதார்த்தத்தைச் சொன்னேன்மா. கல்யாணத்துக்கு முன்ன அம்மா அம்மான்னு உயிரா இருந்தவன், கல்யாணத்துக்குப் பிறகு மாறிய கதை நிறைய பார்த்தாச்சும்மா. நானும் அதே ஆண் வர்க்கம்தானே. மாறவும் வாய்ப்பிருக்கு. இப்பவே ஆனந்தன் அப்பா கையில் பிடிச்சிக் கொடுத்துட்டா, உங்க பாதுகாப்புக்கு ஆள் இருக்குன்ற தைரியத்தில், நானும் நிம்மதியா வேலையைப் பார்ப்பேன்” என்றான்.
“வியாக்கியானம் பேசாத அரவிந்தா. இது தெரிஞ்சா உனக்கு யாரும் பொண்ணு தரமாட்டாங்கடா” என்று பையனை அந்த வகையில் மடக்கப்பார்த்தார்.
“அதெல்லாம் தாராளமா தருவாங்க. காலம் மாறிருச்சிம்மா. இப்ப யாரும் இதை பெருசா எடுத்துக்குறதில்லை. மீறி வேணாம்னா போறாங்க. எனக்கு அப்பா உறவு வருதுல்ல. அது போதும்” என்றான் நெகிழ்ந்த குரலில்.
சாரதா, ஷண்மதியைப் பார்க்க, “அம்மா... அவனுக்குன்னு ஒரு குரங்கு கூடவா கிடைக்காது. கிடைக்கும்மா. அதுக்குக் கட்டிவச்சி குரங்கோட குடும்பம் நடத்துறதைப் பார்த்து ரசிக்க வேண்டாமா? எப்ப என்னோட அம்மாவை வச்சிக்கோங்கன்னு அனு சொன்னாளோ, அந்த நிமிடத்திலிருந்து நீங்க எனக்கு அம்மாதான். எனக்கு மட்டுமே அம்மாவா இருந்தாலும் சந்தோசம்” என்று அனுரதி, அரவிந்த் முறைப்பை வாங்கியவள், அசட்டு சிரிப்பு சிரித்து சாரதாவிடம், “அரவிந்த் மாதிரிதான் நானும். அம்மா பாசத்தை அனுபவிக்காதவள் இல்லை. கடந்த ஏழெட்டு வருடமா அவங்களை ரொம்பத் தேடுறேன். அம்மா இடத்தை நிரப்ப இன்னொரு அம்மாவாலதான் முடியும். அத்தையால் இல்லை” என்றவள், “சாரி அத்தை” என்றாள் அபிராமியைப் பார்த்து.