- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
15
“என்ன தைரியமிருந்தா நான் இருக்கிற இடத்துல... ப்ச்... மனசே ஆறமாட்டேன்னுது சார். இவனுங்க மாதிரி ஆளுங்க வீட்டுல அக்கா தங்கையையாவது விட்டு வச்சிருப்பானுங்களா? இல்ல...” அறிவழகன் தன் ஆத்திரம் தீருமட்டும் அவர்களை அடித்தான்.
“சார் அமைதியா இருங்க. இதுக்கும் மேல அடிச்சி எதாவது ஆகிட்டா, கோர்ட் கேஸ்னு அலையணும்” என்றார் ஜெகதீஷ்.
“அதுக்காக அப்படியே விட முடியலை சார். இவனுங்களுக்கு அண்டர்கிரௌண்ட் ட்ரீட்மெண்ட்தான் சரி. பொண்டாட்டிகிட்டக் கூட போகக்கூடாது. என்ன தண்டனை தரலாம் சொல்லுங்க?” என்றான் அவரிடமே.
“அரபு நாடுகள் ஸ்டைல்ல தண்டனை கொடுக்கலாம் சார்” என்று ஜெகதீஷ் சொன்னதும்,
“என்ன பாஸ் கட் பண்ணச் சொல்றீங்களா?” என்றான் அறிவழகன்.
அதைக்கேட்ட நொடி அந்த இருவரும் அலறி, “சார் தெரியாம செய்துட்டோம். இனி எந்தப் பொண்ணையும் தப்பா பார்க்கவோ, நினைக்கவோ மாட்டோம். எங்களை விட்டுருங்க சார்” என்று கெஞ்சலில் இறங்கினர்.
“சிசிடிவி இல்லாத இடமா பார்த்து, ப்ளான் பண்ணி மிஸ்பிஹேவ் பண்ணின நீங்க செய்தது தெரியாமல் செய்ததா? உரிமையுள்ள பொண்டாட்டிக்கே புருஷன் தொடுறது பிடிக்கலைன்னா, அதைச் செய்யக்கூடாதுன்னு சட்டமே சொல்லுது. நீங்க என்னடான்னா பிடிக்கலைன்னு சொன்ன பொண்ணுகிட்ட, அதுவும் நான் இருக்கிற இடத்தில்...” என்று இருவருக்கும் அடிகளைத் தாராளப்படுத்த, அனுரதியின் இதழ்களில் புன்னகை.
‘என் கதை நாயகன். கதாநாயகன்!’ மனம் சந்தோஷத்தில் துள்ளியது. “மிஸ்டர்.அனுரதி என் வாழ்க்கையில் உங்க வரவு லேட்டானதால எல்லாமே மாறிப்போச்சி. ஆண்களில் அனைவரும் தவறானவர்கள் அல்ல. ஐ அக்ரி. பட்...?” அவளின் எண்ணங்கள் அத்துடன் முற்றுப்பெற்றுவிட்டது.
“ஜெகதீஷ் சார் அண்டர்கிரௌண்ட்ல உள்ள கரண்ட் ரூம்கு கொண்டு போய் நீங்க சொன்னதைச் செய்திருங்க. ட்ரீட்மெண்ட்கு கவர்ன்மெண்ட் ஹாஸ்பிடல்ல சேர்த்திருங்க. அங்கதான் மக்கள் அதிகம் வருவாங்க. ஒவ்வொரு டாக்டர்கிட்டயும், நர்ஸ்கிட்டேயும் என்ன பிரச்சனைன்னு சொல்ல முடியாமத் தவிக்கணும். எப்படி நடந்ததுன்னு கேட்டா, பாத்ரூம் போகும்போது எதிர்பாராதவிதமா ஒரு சைக்கோ இதைச் செய்துட்டான்னு இவனுங்களே சொல்லுற மாதிரி செய்திருங்க.”
“ஐயோ! ஒரு பொண்ணு நிற்கிறேன். இப்படிப் பச்சையா பேசுறான்” என்று வாயில் கைவைத்த அனுரதிக்கு ஒருபுறம் சிரிப்பும் வந்தது. “சரியான தண்டனைதான். இதனால் இவனுக்குச் சட்டச் சிக்கல் எதுவும் வந்திரக்கூடாது கடவுளே!” என வேண்டிக்கொண்டாள்.
ஆனால், மேனேஜர் எப்படி எம்டியை அதட்டி வேலை வாங்குகிறான் என்பதைக் கவனிக்க மறந்திருந்தாள். விழிகளும், செவிகளும் கணவன் வசமானதோ!
“இவனுங்க மனைவி, தம்பி, தங்கை யாராவது படிச்சிருந்தா இங்கேயே வேலை போட்டுக்கொடுங்க. அதுக்கும் முன்ன குடும்பத்தைப் பற்றி விசாரிங்க. முன்னேர் போல் பின்னேர் இருந்துரக்கூடாது சார்” என்றவன், “செக்யூரிட்டி தூக்கிட்டுப் போங்க” என்று அவர்களை அனுப்பி, வரவேற்பறைக்கு அழைத்தவன், “மிஸ் என் ஒய்ஃப்கு ஜுஸ் கொடுத்தீங்களா? கொடுத்தாலும் திரும்பவும் கொடுங்க. இன்னும் டென் மினிட்ஸ்ல வர்றேன்” என்றவன் ஜெகதீஷிடம் திரும்பி, “முடிந்தளவு பார்த்துக்கோங்க சார். ஒய்ஃப் ரிசப்ஷன்ல வெய்ட் பண்றாங்க. ஹாஸ்பிடல் போயிட்டு அப்படியே கூட்டிட்டு வந்துட்டேன்” என்றான்.
“சரிங்க சார்” என்று சிரித்தவர் அங்கிருந்து அனுரதி சென்றதைப் பார்த்து மர்மப்புன்னகை புரிந்தார். அவள் வந்ததை அவருமே கவனித்து, அவள் தோழியை பேசக்கூடாதென்று எச்சரித்ததையும் கண்டுகொண்டார். அறிவழகனைப் பொறுமைசாலி என்று பெண்ணிடம் சொல்லி வைத்திருப்பதாக, ஒருமுறை அபிராமி சொல்லியிருக்கக் கேட்டவருக்கு, இப்போதைய நிகழ்வை நினைக்கையில் சிரிப்புதான் வந்தது. அனுரதி கீழே சென்று நிதானிக்க நேரம் கொடுக்க, அறிவழகனைப் பேச்சில் பிடித்து நிறுத்தியிருந்தார்.
வேகமாகக் கீழிறங்கி வந்தவன் கண்டதெல்லாம் பழச்சாறு குடித்துக் கொண்டிருந்த மனைவியைதான். “சாரி மிஸஸ்.அறிவழகன். கொஞ்சம் லேட்டாகிருச்சி” என்று கெஞ்சல் குரலில் மன்னிப்பு கேட்க, தன் இன்னொரு கையில் வைத்திருந்த பழச்சாறை அவனிடம் நீட்டினாள். ‘எனக்கா?’ என்பதான பார்வையில், அவள் கண்மூடி ஆமோதித்ததும், பிடித்ததா? பிடிக்காததா? எதையும் யோசிக்காது ஓரே மூச்சில் குடித்து கீழே வைத்து, “போகலாமா?” என்றான்.
“ம்... போகலாம்” என்றதும், “மாலினியைப் பார்க்கலையா?” என கேட்டான்.
“இன்னொரு நாள் வந்து பார்த்துக்கலாம். நீங்க வாங்க” என்று காரை நோக்கி நடக்க, தன்னுடன் நடந்த கணவனிடம், “உள்ள என்ன நடந்தது? ஏன் அவ்வளவு டென்சனா போனீங்க?” என்று நின்றாள்.
“டென்சனா? நானா? யூ நோ மிஸஸ்.அறிவழகன் நான் பொறுமையில் பூமாதேவி மாதிரி.” வாய் வார்த்தைதானே என்று அளந்துவிட்டான்.
“அஹான்!” என்று ராகமிழுத்த மனைவியிடம்,
“ஹேய்! நம்பலையா? நான் ரொம்ப சாஃப்ட் நேச்சர் பெர்சன். கோவம் ஆத்திரம்னா எப்படியிருக்கும்னே தெரியாது. யூ நோ...”
“சரி போதும் நம்பிட்டேன்” என்று இடையிட்டவள், “இரண்டு பேரை நார் நாரா பிரிச்சி மேய்ஞ்சிட்டு பொறுமைசாலியாம். கோவம், ஆத்திரமே வராதாம். ஆனா, ஏழுதிசைக்கும் ரௌத்திரம் அனல் தெறிக்குது. போங்க சார்” என்று முனகினாள்.
“சத்தமா பேசுனா எனக்கும் புரியும்ல?”
‘புரியக்கூடாதுன்னுதான முனகுறதே. இதுல சத்தமா பேசணுமாம்’ என மனதினுள் திட்டி, “போகலாமா? கால் வலிக்குது” என்றாள்.
“கால் வலிக்குதா? ஏன்? நின்னுட்டே இருந்தியா? உட்காரச் சொல்லிட்டுதான போனேன். இரு அந்த ரிசப்ஷன் பொண்ணை...” என்று திரும்பியவனின் கைபிடித்து, “ஒரு கால் வலிக்கு ரிசப்ஷன் பொண்ணுவரை போயிட்டீங்க. உங்க பொறுமையின் அளவு அவ்வளவுதானா?” என்றாள் கேலியாக.
“ப்ச்... விளையாடாதடா. எனக்கு மனசு பதறுது. உன்வரையில் நான் எப்பவும் பொறுமைசாலிதான். உனக்கு ஒரு பிரச்சனைன்னா... ப்ச்.. அதெல்லாம் எதுக்கு? வா கார்ல உட்கார்ந்து எங்க வலிக்குது சொல்லு. நான் அழுத்தி விடுறேன்” என்று காரின் பின்பக்கம் அமரவைத்து, அருகில் அமர்ந்து கதவைச் சாத்தியவன், மனைவியின் காலை சீட்டில் எடுத்து வைத்து அழுத்திவிட கைவைத்த நொடி, “ஏய்! என்ன பண்றீங்க? கையை எடுங்க முதல்ல. டச் பண்ணுற வேலையெல்லாம் வேண்டாம்” என்று அவன் கையைத் தட்டிவிட்டு, காலை கீழிறக்கி அவனை முறைத்தாள். என்னவோ என நினைத்தவளுக்கு கணவனின் அச்செயலில் மனதின் படபடப்பு அடங்கியபாடில்லை.
“பொண்டாட்டிக்குக் கால் வலிச்சா, அதைக் கண்டுக்காத புருஷன்தான்மா தப்பு.”
“எனக்கும் அது தெரியுது. ஆனாலும், நீங்க ஒரு ஆண். எனக்கு உங்க தொடுகை பிடிக்கலை” என்றாள் வெறுப்பாக.
மனைவியின் குரல் பேதத்தில் அவளின் நிலை புரிந்தவன், “மிஸஸ்.அன்பழகன் அமைதி அமைதி. நான் தொடக்கூடாது அவ்வளவுதான? சரி தொடலை. நீங்க டென்சனாகாதீங்க. கால் நீட்டி ஃப்ரீயா உட்காருங்க” என்று வெளியே வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து காரை எடுக்க, அவன் சென்றதும் கிடைத்த விடுதலை உணர்வில் கண்மூடி அமர்ந்திருந்தாள்.
சில நிமிடங்கள் கடந்து கண் திறந்தவள், முன் இருக்கும் கண்ணாடியில் கணவன் முகம் காண, மிகவும் சோர்ந்து போய், ஏதோவொரு வலியை, ஏதோவொன்று என்ன, தன்னாலான வலியை மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறான் என்பது பார்த்ததுமே புரிந்தது. அவனின் கோலம் கண்டு ஏனென்று தெரியாதொரு அவஸ்தை அவளுள். கணவனைப் பற்றித் தெரிந்ததாலோ என்னவோ, மனம் தான் செய்தது சரியா? தவறா? என தவிக்க, பார்வை மட்டும் அவனிடமே!
தற்செயலாகக் கண்ணாடியைப் பார்த்தவன் கண்களில், தன்னையே விழியகற்றாது பார்த்திருந்த மனைவி பட்டாள். அந்நொடி சோகம் அனைத்தும் கலைந்து முகம் பிரகாசமாக, மந்தகாசப் புன்னகையொன்று அவனிதழில் குடியேற, ‘ஹை.. என் பொண்டாட்டி என்னைக் கவனிக்க ஆரம்பிச்சிட்டாளா’ என உள்ளம் உற்சாகக் கூச்சலிட்டது.
கணவனிலே பார்வை பதித்து ஆழ்ந்த யோசனையில் இருந்தவள், அவன் தன்னைப் பார்ப்பதைக் கவனியாதிருக்க, “என்ன மிஸஸ்.அறிவழகன்” என்றதில் அவள் கவனம் கலைய, அதன் பின்தான் கவனித்தாள், தான் அவனையே வெறித்திருப்பதை.
“அடடா! பார்க்காமலே பார்த்தேன்னு சீன் ஓட்டுவான். இப்ப...”
அதையேதான் அவனும் சொன்னான். “காலையிலயே நான் சொன்னேன்தான, நீங்கதான் என்னைப் பார்த்தீங்கன்னு. இப்ப அது உண்மையாகிருச்சா?” என்றான்
“ப்ச்... நான் பார்க்கலை” என்றாள்.
“பச்சைப் பொய்” என்றான் பட்டென்று.
“அப்ப சார் காலையில் சொன்னதுக்குப் பெயர் என்னவாம்? ஏதோ யோசனையில் எங்கோ பார்த்திருப்பேன். அந்த இடத்துல நீங்க தெரியுறீங்கன்றதே மைண்ட்ல விழலை. சும்மா கற்பனை செய்யக்கூடாது” என்று கடிந்தாள்.
“ஓஹ் நம்பிட்டேன் நானும். ஆனாலும், மிஸஸ்.அறிவழகன் அந்தப்பார்வை உள்ளக்குள்ள என்னென்னவோ பண்ணுது. இதுதான் காதலா?” என்றான் கற்பனையில் மிதந்தபடி.
‘காதல்’ என்றதில் கோவம் எழ, “காதலும் இல்லை. ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை. காதல்னு ஆரம்பிச்சி கடைசியில் எங்க வந்து நிற்பீங்கன்னு தெரியாதா என்ன? கொஞ்சம் ஃப்ரீயா பேசிட்டா காதலா? நீங்களும் வேண்டாம். உங்க காதலும் வேண்டாம். முதல்ல ரோட்டைப் பார்த்து காரை ஓட்டுங்க” என்று முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.