- Joined
- Aug 31, 2024
- Messages
- 958
- Thread Author
- #1
காதல் இல்லையென்றேன்
1
“ஹப்பா!” ஒரு நிமிடம் கண்மூடி, பின் திறந்து, “என்ன ஒரு ரைமிங். கூந்தல்காடு! நெஞ்சாங்கூடு! ஆடை! விடை! இதழணைத்து! உடலிணைத்து! ஒரு மாதிரிக் கதைன்னாலும் எழுத்துல ஒரு கிக் வச்சிருறாங்க ரைட்டர். அச்சோ! இதெல்லாம் கல்யாணமான பிள்ளைங்க படிச்சா கெட்டுப்போயிராது” என்று ஜொள்ளுவிட்டாள் அவள்.
“கல்யாணமாகாத இருபத்து மூன்று வயசுக் கழுதை, நீ கெட்டுப்போகாம இருந்தால் சரிதான்” என திட்டிய அவளின் தோழி, படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைப் பிடுங்கி, அதாலேயே அவள் தலையில் கொட்டு வைத்தாள்.
தலையைத் தடவியபடி, “அதான் கல்யாணமாகப் போகுதுல்ல மானி. பேசிக் தெரிஞ்சிக்க படிச்சா... ம்... போடி” என்று சிணுங்கினாள் அனுரதி!
“இதெல்லாம் படிச்சி கற்பனை பண்ணிக்காதடி. இது நிழல். நிஜம் வேறயா இருக்குறதுக்கும் வாய்ப்பிருக்கு” என்று யதார்த்தம் பேசினாள் மாலினி.
“அதுக்குதான்டி, பேசிக் தெரிஞ்சிக்க நாலைந்து எய்ட்டீன் ப்ளஸ் நாவலா படிச்சிட்டிருக்கேன். ட்வென்டி ஒன் ப்ளஸ் போகலை தெரியுமா? நான் அவ்வளவு நல்லவ” என்றாள் அப்பாவியாய் முகம் வைத்து.
“ம்க்கும்... நல்லவள் பார்க்கிற வேலையைதான் பார்க்கிற பாரு.”
“ஹேய் இன்னைக்குதான்டி ஃபர்ஸ்ட் டைம் ஆரம்பிச்சேன்” என்றாள் வேகமாக.
“அடிப்பாவி! அதுக்குள்ள நாலு கதையா?”
“ஹிஹி அது எல்லாம் எய்ட்டி பேஜஸ் உள்ள குட்டிக் கதைங்க. இதான் கொஞ்சம் பெருசு. அதுக்குள்ள அதுலயே நீச்சலடிச்ச மாதிரிப் பேசுற” என்றவள் சோகமாக முகம் வைத்து, “ப்ச்... இதுவரை காதல்னு வேற எதுவும் இல்லையா? அதுக்காக...”
“அதுக்காக?” முறைப்பாகப் பார்த்தாள் அவள்.
“ஹான் அதுக்காக ஒரு பையனைப் பார்த்துப் பழக முடியாதுல்ல. சோ...” என்று பற்களைக் காட்டினாள்.
“அடக்கருமம் பிடிச்சவளே. இந்த மாதிரிப் புத்தகம்தான்டி மனதை அதிகம் கெடுக்கும். உன் கற்பனை லெவல் அதிகமாகி, ஸ்ட்ரெஸ்ல கொண்டு விட்டுரும்.”
“இருந்தாலும்...” என குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லி, “அந்த சீன் செமையா எழுதியிருக்காங்கடி” என்று வாய்மூடிச் சிரித்தாள்.
“நீ திருந்தமாட்ட கழுதை. சரி உன் பியான்சி என்ன சொல்றார்? அவர்கிட்ட பேசுனியா?” அனுரதிக்கு பேசியிருக்கும் ரவிசங்கரைப் பற்றிக் கேட்டாள் மாலினி.
“இல்லடி. நானும் நமக்குதான் ரொமான்ஸ்ல ஏபிசிடி கூடத் தெரியாது. நமக்கு வர்றாதாவது சொல்லிக் கொடுக்கும்னு பார்த்தா, ஒரு போன் இல்ல. ஒரு அது இல்ல. ஒரு இது இல்ல” என்று புலம்பித்தள்ளினாள் அனுரதி.
‘ஓ... ஏன்?’ என்ற யோசனை வந்தபோதும் அதை விடுத்து, “சரி விடு. மொத்தமா சேர்த்து வைத்துக் கொட்டுவாரா இருக்கும்” என்றாள்.
“கொட்டட்டும் கொட்டட்டும். ஐம் வெய்ட்டிங்” என்றாள் பொங்கிய சிரிப்புடன்.
“இப்படியே சிரிச்சிட்டே இரு அனுமா. யாருக்காகவும் இந்தச் சிரிப்பை விட்டுக்கொடுத்திராத” என்று முகம் வருடி முத்தமிட்டாள்.
“ஹா...ஹா... மானிமா, விலங்குக்கும், மனுஷனுக்கும் இடையில் இருக்கிற மிகப்பெரிய வித்தியாசம் இந்தச் சிரிப்புதானாம். அதை எப்படி விட்டுக்கொடுப்பேன்” என்றாள் புன்னகை மாறாது.
“அதான் கொடுக்காத சொல்றேன். சரி கல்யாண பர்சேஸ்லாம் முடிச்சாச்சா?”
“அநேகமா முடிஞ்சிருச்சி நினைக்குறேன். மிஸ்ஸாகி இருந்தா பார்த்துக்கலாம். அடுத்த வாரம் திருமண மண்டபம் போறோம். தாலியைக் கட்டுறோம். அப்புறம் என் ஆளைக் கட்டிக்குறோம். புள்ளையைப் பெத்துக்குறோம்” என்றாள் வேகமாக.
“அடியேய்! ஏய்.. ச்சீ எருமை உன் ரைமிங்ல தீயை வச்சிக் கொளுத்த. கட்டுறோம், கட்டிக்குறோம், பெத்துக்குறோம்னு ப்ளூறல்ல சொல்றடி. விட்டா என்னையும் மேடையில் உட்கார வச்சிருவபோல. ம்கூம்... இது சரிவராது. நான் உன் கல்யாணத்துக்கு வரமாட்டேன்டி” என்றாள் பயந்தாற்போல்.
“ம்ம்... ரொம்ப சீன் போடாத. எங்க கண்ணன் அண்ணாவுக்கு நீ துரோகம் செய்ய நான் எப்பவும் விடமாட்டேன்” என்று சபதம்போல் சொல்ல,
“ம்க்கும்... துரோகம் செஞ்சிட்டாலும். எனக்கு அப்படியொரு ஐடியா இல்ல. வந்தா சொல்றேன்” என்று கண்சிமிட்டினாள்.
“ஹோ... வர வேற செய்யுமா? பிச்சிருவேன் பிச்சி.”
“என்ன வேணும்னா செஞ்சிக்க போடி” என்றாள் மாலினி.
“ஹேய் மானி! இந்தக் கதைகள்ல...”
“ப்ச்... சும்மா அதையே பேசாதடி. போய் கல்யாணத்துக்கு ரெடியாகு. அப்புறம், கத்துக்கக் கதை தேவைப்படாது. எல்லாமே உன் ஹஸ்பண்ட் லைவ்தான் காட்டுவாரு. அட்வான்ஸ் வாழ்த்துகள் அனுமா” என்று கண்ணடித்துத் தோளோடு அணைத்து விடுவிக்க, இருவரும் அலுவலக வாகனம் நிறுத்துமிடம் வந்தார்கள்.
அனுரதி வீடு வந்த பொழுது வீடு பூட்டியிருக்க, கையில் உள்ள சாவி கொண்டு கதவைத் திறந்து அறைக்குள் வந்தவள், கையிலுள்ள பையை ஓரம் வைத்து கவிழ்ந்து படுத்துவிட்டாள்.
சற்று நேரத்திற்கெல்லாம், அவளின் ஆடை மேலேறி இருந்த முதுகுப்பகுதி, மீசையின் குறுகுறுப்போடு முத்தங்களால் நிறைய, உடலெல்லாம் சிலிர்த்து வேறு உலகம் போகத் தூண்டினாலும், தன்னிடம் உரிமை எடுப்பவன் யாரென்ற பயமும் வந்தது. இருந்தும் யாரென்று கேட்ட கேள்விக்கு, அவனிடமிருந்து பதில் இல்லாமல் போக, சட்டென எழப்போனவளை அழுத்திப் பின் கழுத்தில் முத்தம் பதித்து, “என்னைத்தவிர வேறு யாருக்கு அந்த தைரியம் வரும் என் ரதிப்பொண்ணே!” என்று காதோரம் கிசுகிசுத்தான்.
அவள் ஏதோ பேச முனைவதைத் தெரிந்து, “ஸ்... உன்னை எதுவும் செய்யமாட்டேன்” என்று அவளை திருப்பிப் படுக்கவைத்த நொடி, தன் முகத்தை அவளிடம் காட்டாதிருக்க அவள் கழுத்தில் முகத்தை மறைக்க, மொத்த உணர்வுத் தாக்குதலில் தொண்டைக்குள் அடைப்பு அனுரதிக்கு.
“எ...என்ன பண்றீங்க? இ...இதெல்லாம் கல்யாணத்துக்குப் பிறகுதான். இப்ப இ...இது தப்பு” என்றவள் குரல் விட்டுவிட்டு வந்தது. அவள் படித்த கூந்தல்காட்டில் கை நுழைத்து, நெஞ்சாங்கூட்டில் முகம் புதைத்து, புத்தகத்தில் உள்ள வரிகள் ஞாபகம் வர, நிழல் நிஜமாவதை உணர்ந்து, கதையின் மோகத்தில் அவன் தலைமுடியைப் பிடித்திழுத்து, அவன் முகம் காண விழைய, சிறிது கூட அசைக்க முடியவில்லை அவனை.
தன் உடலில் அவன் எல்லை மீறுவதை உணர்ந்து, பெண்ணுக்கேயான பாதுகாப்பு உணர்வு அவளை விழித்தெழச் செய்ய, அவனின் பிடி தளர்ந்த நேரத்தில், சட்டென்று அவன் சட்டையைப் பிடித்திழுத்துத் தன் முகத்தருகே கொண்டு வர, அவன் முகமோ தெளிவின்றித் தெரிந்து, பின் அப்பிம்பம் மாயமாக மறைய, பெண்ணவளோ பயத்தில் வியர்த்து விறுவிறுக்க எழுந்து அமர்ந்தாள்.
“மை காட்! எல்லாம் கனவா? அப்படியே நிஜத்துல நடந்த மாதிரி இருந்ததே. அந்த மானி அப்பவே சொன்னா, இந்த மாதிரிக் கதை படிக்காதடின்னு. கேட்டேனா நான். அதுவும் பகல் கனவு. அடேய்! பகல் கனவு பலிக்காதுன்னு சொல்லுவாங்களே! அது நிஜமாகிருமோ” என்ற கவலையும் திடீரென வந்தது.
“ஆமாம் கனவுல வந்தவன் யாரு? அந்த ரவிசங்கர் மாதிரி இல்லையே. ரவிசங்கர் ஹைட் கம்மி. கொஞ்சம் பூசின உடல்வாகு. கனவில் வந்தவன் கொஞ்சம் ஹைட். அன்ட் ஃபிட் உடம்பு. ஒருவேளை கனவுன்றதால கதைகள்ல சொல்ற மாதிரி கதாநாயகன் வந்தானோ? இல்லை மணமேடையில் மாப்பிள்ளை மாறும் என்கிறார்போல் ஆள் மாறுமா?”
‘அட லூசே! ஓவர் கற்பனையா இருக்கு. கற்பனையைக் குறை’ என்று மூளை அறிவுறுத்த, ‘இருந்தாலும் குளுகுளுன்னு இருக்குல்ல. இதை முதல்ல என் அன்புத்தோழியிடம் பகிரணுமே. இல்லைன்னா, இன்னைக்குத் தூக்கமே வராது’ என நினைத்த நொடி மாலினியை அழைத்துவிட்டாள்.
மாலினியின் வீடு சற்றே தூரம் என்பதால், அப்பொழுதுதான் வீடு நுழைந்து மின்விளக்கைப் போட்டவள், கைபேசியின் அழைப்பில் தோழியைக் கண்டு, ‘இப்பதான வீட்டுக்குப் போனா. அதுக்குள்ள என்ன?’ சிறு பதற்றத்துடன் ஏற்று, “சொல்லுடி? எதாவது பிரச்சனையா?” என்றாள்.
“மானி...” என்றாள் ஒருமாதிரிக் குரலில்.
“சொல்லு அனு?”
“மானீ...” என சிணுங்க,
‘ஷப்பா! இவளை...’ என மனதினுள் திட்டி, “என்ன பிரச்சனைடி? என் புருஷன் கூட இத்தனை கிளுகிளுப்பா கொஞ்சினதில்லைடி எருமை. மானிக்கு என்ன வச்சிருக்க சொல்லு?” என்று கத்தினாள்.
அது எதையும் உணராது, “ஒரு கனவுடி. அதுவும் இன்னைக்குப் படித்த கதையிலுள்ள சீன் அப்படியே நடக்குற மாதிரி. செம ஃபீல்டி. சீக்கிரமே கல்யாணமாகி அந்த ஃபீலை உணரணும்” என்றாள் ஒருவித போதை லயத்தில்.
வந்து இன்னும் உட்காரக் கூட இல்லாத கடுப்பில் இருந்த மாலினி, “பகல் கனவு பலிக்காதுடி” என பட்டென்று கூறிவிட, கூறிய பின்பே தன் வார்த்தையின் அனர்த்தம் புரிய, அதற்குள் அனுரதியும் நிகழ்வு வர, சொல்ல முடியா நிலையில் மனம் பதைபதைத்தது.
“அ...அனு அனு சாரிடி. சாரிமா. எதோவொரு எரிச்சல்ல என்னை அறியாம உளறிட்டேன். சாரிடா. ப்ளீஸ்” என்றாள் கெஞ்சலாக.
“நிஜமாகவே பகல் கனவு பலிக்காதா மானி?” என்றாள் ஒருவித ஏக்கத்தோடு.
“சேச்சே... அப்படில்லாம் இல்லமா. இதெல்லாம் கல்யாணக் கனவு. அதை எப்படி பகல் கனவுல சேர்க்க முடியும்? நீ எதையும் யோசிக்காதடா” என்றாள் மாலினி.
“இந்த மாதிரி கனவு வந்ததால நான் கெட்டவளா?” என சோர்வாகக் கேட்டாள்.
“ஹையோ! இல்ல அனுமா. கல்யாணம்னாலே நமக்குன்னு ஒரு கற்பனை வரும்தானே! அது அதிகப்படியாகி கனவா வந்திருக்கு. அதையெல்லாம் வராதன்னு சொல்ல முடியுமா? உன் லைஃப்ல நீ ஆசைப்படுற எல்லாமே நிறைவா கிடைக்கும் அனு” என்றாள் மனதார.
“இப்ப கொஞ்சம் பயமாயிருக்குடி” என்று மனம் கலங்கினாள்.