- Joined
- Aug 31, 2024
- Messages
- 34
- Thread Author
- #1
அத்தியாயம் - 9
"தெய்வா, உள்ள இருக்கிற பாத்ரூம் பைப்ல தண்ணி வரலை. பிளம்பர்க்கு கால் பண்ணா அவன் வர ரெண்டு நாளாகும்னு சொல்லிட்டான். அதனால், ரெண்டு நாள் வெளியில் இருக்கிற பாத்ரூமை பயன்படுத்திக்கோங்க” சரியெனத் தலையை ஆட்டிய தெய்வானை, வள்ளியம்மையுடன் சமையலில் மும்முரமாக இருந்தார்.
வினோத்தும் சந்துருவும் சங்கவியின் தோழிகள் வீட்டிற்குச் ஆளுக்கொரு பக்கம் சென்று அவர்களுடன் தொடர்பில் இருந்தாளா என விசாரித்து, அலைந்து ஓய்ந்து வரவும், சாப்பாடும் தயாராக இருக்க, ஏற்கனவே இருந்த அசதி உண்ட மயக்கம் வரவேற்பு அறையிலே படுத்துவிட்டனர்.
திவ்யாவும் இலக்கியாவும் சங்கவி பற்றி ஏதாவது விபரம் கிடைக்குமா என்று அவளின் நாட்குறிப்பேடு, புத்தகங்களில் அலசி ஆராய்ந்து கொண்டிருக்க, இலக்கியாவுக்கும் கண்கள் சுழற்ற உட்கார்ந்த இடத்திலே உறங்கிப் போனாள்.
நேரம் போனது தெரியாமல் ஒவ்வொரு பக்கமாகத் திருப்பிக் கொண்டிருந்தாள் திவ்யா. தன்னைச் சுற்றி நடப்பது எதுவும் அவள் கவனத்தில் இல்லை. ஊரே அடங்கிவிட, ‘க்ர்ர்ர்…’ என மின் விசிறிச் சுழலும் சத்தம் மட்டும் கேட்க, திவ்யாவின் காதுகளில் அதுவும் கேட்டதாகத் தெரியவில்லை.
இளந் தென்றல் வீசப் பறந்த முடிகள் கன்னம் தொட்டு விளையாட, ஒற்றை விரலால் தள்ளியவளின் முகம் மின்கல விளக்கில் நிலவாகப் பிரகாசிக்க, திரும்பிப் படுத்த வினோத்தின் கண்களில் ஆசை ஊற்றெடுக்க, தன்னை மறந்து எழுந்தவன், தன்னைச் சுற்றி எல்லோரும் படுத்திருப்பதைக் கண்டு இதழ்கள் வலிக்காமல் சிரித்து மீண்டும் கண்ணை மூடினான்.
சன்னலின் திரைச் சீலைகள் படபடவென்று அடித்து விலகி வழிவிட, குளிர்ந்த தென்றல் திவ்யாவை வருடி, அவள் கவனத்தைத் தன் பக்கம் திருப்பியது.
குளிர்ந்த காற்றின் உணர்வில் மெல்ல சன்னல் பக்கம் திரும்பியவளின் கண்களில் முழுப் பௌர்ணமி நிலவு மின்ன, அதன் அழகில் மயங்கித் தன்னை மறந்து வெளியில் சென்று சுற்றுச் சுவரில் சாய்ந்து அதன் அழகை ரசித்து நின்றாள்.
தன் பின்னால் இருக்கும் ஆபத்தை உணராமல் மதியின் மயக்கத்தில் நின்றிருந்தவளின் அருகில் உருவம் வர, ஏதோ அசைவது போல் தெரிய திரும்பியவளின் கண்களுக்கு, இருண்ட கழிவறை தெரிய, மின் விளக்கை எறியவிட்டு உள்ளே நுழைந்தாள்.
திவ்யாவின் சரீரத்தை ஆட்கொள்ள வந்த சங்கவியின் ஆன்மா ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல, கழிவறையிலிருந்து வெளியில் வந்த திவ்யா நிலவின் ஒளியில் நின்று விட, அதைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்ட சங்கவி தன் கொடூர முகத்தைக் காட்டியவாறு வந்தாள்.
தன்னை யாரோ தொடர்வது போல் உணர்ந்த திவ்யா திரும்பிப் பார்க்க, ஒய்யாரமாக நின்ற தென்னை மரத்தின் அடியில் யாரோ அமர்ந்திருப்பது போல் தெரியவும், கண்களைக் கசக்கிவிட்டு கூர்ந்து பார்த்தவளுக்குத் தெளிவாக எதுவும் தெரியவில்லை.
‘வினோத்’ எனக் கூப்பிட நினைக்கையில் வெள்ளையான உருவம் நகர்ந்து செல்வதைக் கண்டு, திருடன் யாரோ பதுங்கிச் செல்கிறானெனப் பதற்றத்துடன் உற்று கவனித்தவளுக்கு அது செல்லவில்லை தன்னை நோக்கி வருகிறது என்பது அப்போதுதான் புரிந்தது.
திவ்யா மெல்ல மெல்ல பின்னாடி நகர்ந்தாள். அவள்பின் செல்வதைக் கண்டதும் சங்கவி பறந்து வர, அதைக் கண்டு அதிர்ந்து, ‘வீல்’ என்று கத்தி ஓடி வினோத்தின் மீது மோதி மயங்கிச் சரிந்தாள்.
அலறல் சத்தம் கேட்டு வெளியில் ஓடி வந்த வினோ திவ்யாவை தன் கைகளில் தாங்கினான். அரக்க பறக்க வந்தவர்களிடம் அவளை ஒப்படைத்துவிட்டுத் தென்னை மரத்தை நோக்கி ஓடினான். அவன் பின்னால் ஓடிய சந்துரு அவனைத் தடுத்து நிறுத்தினான்.
“வினோ, நில்லு! நீ போய் என்ன பண்ண போற? பேச்சு வார்த்தை நடத்துறத்துக்கு அவ ஒன்னும் மனித பிறவியா இல்லை. பேயா அலைஞ்சிட்டு இருக்கா.”
“நாம என்ன பண்ணோம். இல்லை, திவ்யா என்ன பண்ணா? அவளை எதுக்குக் கொல்ல நினைக்கிறா?”
“அவளுக்கு ஒன்னுன்னா இவ்ளோ துடிக்கிற, கூடப் பிறந்த தங்கச்சி உங்களால செத்தேனே அந்த வலி உனக்குத் தெரியலையா?” சங்கவி கட்டைக் குரலில் உறுமியது வினோத், சந்துரு இருவருக்கும் நன்றாகக் கேட்டது.
“ஏய்! நீ செத்ததையே மறைச்சு எங்கயோ ஒளிஞ்சி இருக்கவனை நம்பி ஏமாந்து போனது நீ. அதுக்கு எங்களை ஏன் பாடாய் படுத்துற. உன்னால நாங்க பட்ட கஷ்டம் போதாதா?”
“சும்மா நடிக்காத. நகுல் ரொம்ப நல்லவர். நான் செத்ததுக்குக் காரணம் அவர் இல்லை. அவர் கூட வாழவிடாம செஞ்சு, என்னைக் கொன்னது நீங்க எல்லோரும்தான்.”
“பைத்தியக்காரி மாதிரி பேசாத. நீ எப்படிச் செத்தன்னு கூட எங்களுக்குத் தெரியாது. அப்போ எப்படி நாங்க காரணமா இருக்க முடியும்” என்ற சந்துருவைச் கண்கள் சிவக்க பார்த்தாள் சங்கவி.
“ஏய்! சும்மா கத்தாத. நகுல் கூட வாழவிடாம செஞ்ச உங்களை ஒவ்வொருத்தரா கொல்லுவேன்” எனச் சீறியவள் தென்னை மட்டைகளை இருவர் மீதும் சுழல விட்டாள்.
ஒவ்வொரு மட்டையும் இருவரின் மீதும் கீறல்கள் போட, மட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்ட இருவரும் வெளியில் வர முடியாமல் தவித்தனர்.
சந்திரனும் சரவணனும் இருவரையும் காப்பாற்ற வந்து முடியாமல் மட்டைகளால் காயம்பட்டுப் போனார்கள். அருகில் நெருங்கக் கூட முடியவில்லை.
தெய்வானை இருகரம் குவித்து மண்டியிட்டு, “ரெண்டு பேரையும் விட்ரு. நாங்க யாரும் உனக்கு எந்தக் கெடுதலும் பண்ணலை. எங்களை நம்புமா. உன்னை இழந்து நான் படுற வேதனை போதும்” கண்ணீர் மல்க நின்ற தாயைக் காண முடியாமல் ஆடிய ஆட்டத்தை நிறுத்திப் பறந்து சென்றது.
வாகனங்களை நிறுத்துவதற்குப் போடப்பட்டிருந்த சிமெண்ட் கூரையைப் போகிற போக்கில் தட்டிச் செல்ல, கூரை சரிந்து வினோத், சந்துரு மீது விழும் நேரத்தில் சுதாரித்த சந்திரனும் சரவணனும் இருவரையும் இழுக்கவும் கூரை விழவும் சரியாக இருந்தது.
இடிந்து விழும் சத்தம் கேட்டு என்னமோ ஏதோவென்று அக்கம் பக்கத்தினர் விழித்துக் கொண்டு பதறியடித்து வெளியில் வந்து சுற்றி சுற்றிப் பார்க்க, வினோத் வீட்டின் கூரை சரிந்து கிடப்பதைக் கண்டு சுற்றுச் சுவர் ஏறிக் குதித்து உள்ளே வந்து கதவைப் படபடவெனத் தட்டினர்.
கதவு தட்டும் சத்தமும் பலரின் குரலும் கேட்க, மிரண்டு நின்றிருந்த இலக்கியா ஓடிப் போய்க் கதவைத் திறந்ததும், இரத்த வெள்ளத்தில் இருந்த வினோத்தும், சந்துருவும், மயங்கியிருந்த திவ்யாவும் கண்களுக்குத் தெரிய மூவரையும் தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு ஓடினார்கள். சந்திரனும் சரவணனும் பின்னாடியே இன்னொரு வண்டியில் சென்றனர்.
தெய்வானை, வள்ளியம்மை இருவரும் புறப்பட, பக்கத்து வீட்டினர் நீங்க போக வேண்டாம். கூடப் போயிருக்கிறவங்க கவனித்துக் கொள்வார்கள் எனத் தடுத்துவிட்டனர்.
காலை விடிந்ததும் ஐவரும் பெரிய கட்டுகளுடன் வீட்டிற்கு வர, அவர்களுடன் முகிலனும் உள்ளே நுழைந்தான். பக்கத்து வீட்டினர் கூரை சரிந்ததால் நடந்த விபத்து என்று நினைத்து ஆறுதல் கூறிவிட்டுச் சென்றனர்.
“என்ன ஆச்சு வினோ, ஏன் எல்லோருக்கும் அடிப்பட்டிருக்கு? அப்பா அவசரமா வரச் சொல்லி கால் பண்ணாங்க” முகிலன் கேட்க, திவ்யா ஆரம்பிக்க ஒவ்வொருவராகச் சொல்லி முடித்தனர்.
“விஷயம் சீரியஸா போகுது. ஏதாவது அசாம்பாவிதம் நடக்கிறதுக்கு முன்னாடி உண்மையைக் கண்டுபிடிக்கனும். இந்தக் காலத்தில் போய்ப் பேய், பிசாசுன்றதை நம்ப முடியலை. சங்கவி பேயா இருந்தாலும் உண்மை தெரிஞ்சா அவ ஆன்மா சாந்தியடையும்” தனி ஆளாகக் கண்டுபிடிப்பது கடினமென மேலதிகாரிகளைச் சந்திக்கச் சென்றான் முகிலன்.
******